புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, September 19, 2018

உலகப் புத்தகத் திருவிழா 2018 - ஜகார்த்தா, இந்தோனேசியா

Seek knowledge even from China - முகமது நபி

வெகு நேர்த்தியாகத் திட்டமிட்டு நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இரு விடயங்கள், பயணித்தலும் வாசித்தலும். உண்மையில் இரண்டும் பிரிக்க முடியாதவை. ஒன்றின் தூண்டுதலில் இன்னொன்றைச் செய்ய வேண்டிய நிலைதான் பெரும்பாலும் அமைந்து விடுகிறது. அதற்குப் பல சான்றுகளை எனது பழைய பதிவுகளில் படித்திருப்பீர்கள். மிகப் பெரிய பயணத்திற்கான அல்லது மிகச் சிறந்த புத்தகத்தை வாசிப்பதற்கான தூண்டுதலை உண்டாக்கும் ஆரம்பப் பொறி எதிர்பாராத தருணத்தில் அமைந்து விடுகிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஷார்ஜாவில் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்ததை ஒரு கட்டுரையாக சென்ற வருடம் எழுதி இருந்தார். சென்னை புதுக்கோட்டை திருச்சி ஒசூர் ஹைதராபாத் என பல நகரங்களின் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்கிறேன். டெல்லி ஜெய்பூர் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் வருங்காலத்தில் செல்ல வேண்டுமென்ற திட்டமும் எனக்குண்டு. புத்தகங்களைத் தேடி நாடுவிட்டு நாடும் செல்லலாம் என்று அக்கட்டுரை தூண்டியது. எனது முன்னோடிகளான பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீனப் பயணிகள் அப்படி தூண்டப்பட்டு, புத்தமத நூல்களைத் தேடி இந்தியா வந்தவர்கள் தான்.

சரி. ஆனால் எஸ்ரா உலகம் அறிந்த எழுத்தாளர். அவரை அழைத்து உபசரித்து, செலவே இல்லாமல் எல்லா வசதிகளும் செய்துதர எல்லா நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடலாமா? இப்படியொரு சிந்தனை என்னைக் கீழே இறக்கிவிட்டது. அரசனை எதிர்த்து விசாவே இல்லாமல் புத்தரை மட்டுமே நம்பி கிளம்பி காஞ்சிபுரம் வரை வந்த யுவான் சுவாங், என் சிந்தனையைக் கொஞ்சம் மேலேற்றிவிட்டார். ஊஞ்சலாடிய சிந்தனை நிலைகொண்ட ஒரு பொழுதில், உலகப் புத்தகத் திருவிழா நடக்கும் இடங்களைத் தேடினேன். மாதத்திற்குக் குறைந்தது இரண்டு வீதம் வருடம் முழுக்க உலகம் முழுவதும் எங்கோ அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் டெல்லி கொல்கத்தா என்ற இரண்டு இந்திய நகரங்களைத் நீக்கிவிட்டு வெளிநாடுகளில் தேடினால், இரண்டு நகரங்கள் தான் இந்தியர்களுக்கு இலவச விசா தருகின்றன. ஹாங்காங் மற்றும் ஜகார்த்தா. ஒரு தாயின் கருணையோடு பத்து மாதங்கள் என்னை ஏற்கனவே நொந்து சுமந்ததாலும், கட்டுப்படாத விலைவாசி உடைய டாலர் தேசம் என்பதாலும் ஹாங்காங் நீக்கப்பட்டது.

ஜகார்த்தாவில் வருங்காலத்தில் நான் சுற்றிப் பார்க்க ஏற்கனவே ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். புத்தகத் திருவிழாவை மையமாகக் கொண்டு அத்திட்டத்தையும் நிறைவேற்ற அலுவலகம் விடுப்பு தரவில்லை. எனவே அத்திட்டத்திற்குப் பாதிப்பு இல்லாமல், ஜகார்த்தா நகரைச் சுற்றிப் பார்க்க, இரண்டு முழு நாட்களும், ஒரு பிற்பகலும், ஒரு முற்பகலும் திட்டமிட்டேன். எது மாதிரியான புத்தகங்கள் அங்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல், ஓர் அனுபவத்திற்காக செல்வதாக எண்ணிக் கொண்டேன். நான் சென்று சேர்ந்த நாளில், அங்கிருந்த அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். தன் வீட்டில் கவிஞர் வைரமுத்துவுடன் உணவு உண்பதை, ஒரு ஜகார்த்தாக்காரர் முகநூலில் பதிவிட்டு இருப்பதாகச் சொன்னார். அநேகமாக அவரும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருக்கக் கூடும் என்றும் சொன்னார்.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியா என்பதால், அது பெரும்பாலும் இஸ்லாமியப் புத்தகங்கள் மட்டுமே கொண்ட கண்காட்சியாக இருந்தது. தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. இந்தியப் பதிப்பகங்கள் இல்லை. ஆங்கிலப் புத்தகங்கள் கொஞ்சம் இருந்தன. பெரும்பாலும் இந்தோனேசிய மொழிப் புத்தகங்கள். புதினங்கள் சில கண்டேன். கவிதைகள் காண முடியவில்லை. எனது விருப்பப் புத்தகங்களில் ஒன்றான ஜெருசலேம் புத்தகம், இந்தோனேசிய மொழியில் இருந்ததில் மகிழ்ச்சி. அது தமிழிலும் இப்போது வந்துள்ளது. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். வெளியிட்டப்பட்ட அப்புத்தகத்தை எல்லாருக்கும் தந்தார்கள். எனக்கும்தான். இந்தோனேசிய மொழிப் புத்தகம் அது. நான் என்றுமே படிக்கப் போவதில்லை என்றாலும், எனது புத்தக அலமாரியில் இனி தனியிடம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான்கில் ஒரு பங்குதான் புத்தகங்கள் இருக்கும். ஒரு மணிநேரத்தில் சுற்றி முடித்துவிட்டேன்.

இந்தோனேசியர்கள் தங்களுக்கான புத்தகங்களைத் தேடி கூடி இருந்த அவ்விடத்தில், ஓர் ஓரமாக அமர்ந்து, நான் கொண்டு போயிருந்த தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஓசூர் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய முகில் அவர்களின் பயண சரித்திரம் என்ற புத்தகம் அது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி எதையோ தேடிப் பயணித்த யுவான் சுவாங்கும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த நானும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டோம். அடுத்து எங்கென்று அவர் கேட்டது போல் இருந்தது. அநேகமாக சனவரில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி என்றேன்.

அதுவரை எனது ஜகார்த்தா பயணத்துப் புகைப்படங்களை இச்சுட்டியில் நீங்கள் காணலாம். தற்போது எடிட்டிங் சென்சார் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காத்திருங்கள்!

https://plus.google.com/103740705199337696353

– ஞானசேகர்