புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, August 17, 2011

மனையடி சரித்திரம்

மிதக்கும் பிணங்கள்
ஆலைக் கழிவுகள்
விலக்கிய கங்கை
தேடிப் பார்க்கிறாள்
பகீரதன் பிணத்தை.
- தி.பரமேஸ்வரி ('எனக்கான வெளிச்சம்' நூலிலிருந்து)
(http://tparameshwari.blogspot.com/)


வருடம் 2010.
சோழையன் என்ற 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் களைக்கொத்தியுடன் தனது மிதிவண்டியில் ஊரைவிட்டுப் புறப்பட்டபோது வியாழக்கிழமை காலை 6 மணி. புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஏறி மச்சுவாடி - ந‌ரிமேடு - அடப்பன்குளம் - திலகர் திடல் - பால்பண்ணை வழியாக புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓரமாகவே வந்து நகரத்தின் கடைசியில் தண்டவாளங்கள் குறுக்கிட மிதிவண்டியைவிட்டு இறங்கும்போது 7 மணி இருக்கும். மூன்றாள் மட்டத்தில் இருக்கும் அந்த ரெயில்பாதையை மிதிவண்டியைத் தூக்கிக்கொண்டு கடந்து மீண்டும் ஏறி அமர்ந்தால், அழுத்தவே தேவையில்லாமல், சபிக்கப்பட்டதுபோல் வெறும் தரிசுநிலமாக முடிவற்றுக் காட்சியளிக்கும் பரந்த வெளியில் தனியனாய் நிற்கும் ஒரு வேப்பமரத்தடியில் வந்துசேரும்.

வேப்பமரத்தின் உச்சந்தலை வெயில் பொழுதில், நிழல்படும் இடமெல்லாம் சோழையனுக்குச் சொந்தமானதென கிட்டத்தட்ட நிலப்பரப்பு சொல்லலாம். புதுகை நகரின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கிலிருக்கும் அந்த மரமுள்ள இடத்திற்குப் புரட்டாசி 14ம் நாள் அவர் வருவதில் ஒரு சோகம் உண்டு. 15 வயதில் அந்த வேப்பமரத்தைச் சிறுகன்றாகக் கண்டெடுத்ததும் அய்யாவை விசக்கடிக்குப் பறிகொடுத்ததும் ஒரு புரட்டாசி 14ல் ஒருசேர நடந்திருந்தன. அதே காலகட்டத்தில் மொத்த ஊரும் பஞ்சம் பிழைக்க தூரத்தில் வெவ்வேறு இடங்களில் சிதறிப் போனார்கள். சோழையன் மட்டும் பக்கத்திலேயே பிழைப்பு தேடிக்கொண்டார். வறண்ட பூமியில் சுயம்புவாய் நிமிர்ந்து நிற்கும் அந்த வேம்பு, சோழையனைப் பொறுத்தவரை அய்யாவின் மறுபிறப்பு.

வழக்கம்போல் கோவண‌ உடைக்கு மாறிக்கொண்டார். மரத்தடியில் அமர்ந்து பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டார். இத்தனை காலமாகியும் இந்நிலத்தை நன்செய் ஆக்கிவிடமுடியாத தன் இயலாமையை எண்ணிக்கொண்டே தன் நிலத்தின் ஒரு மூலையிலிருந்து களைக்கொத்தியில் புற்களைச் செதுக்க ஆரம்பித்தார். அமர்ந்துகொண்டே களையெடுக்க வசதியாக, கொத்திக்கு நீளவாக்கில் இருக்கும் கைப்பிடியின் ஒருமுனையை வலதுகையாலும், கொத்தியில் செருகப்பட்டிருக்கும் இன்னொரு முனைக்கருகில் இடதுகையாலும் பிடித்துக்கொண்டே களை செதுக்கிக்கொண்டு நகர்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் என்ற களைக்கொத்தியின் ஒழுங்கான தாளத்தில் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறந்துகொண்டிருந்த பொழுதில், தூரத்தில் ரெயில்நிலைய திசையில் இருந்து கார் ஒன்று சர்ரென்று வந்து, நாணல் மண்டிய பக்கத்து நிலத்தில் நின்றது. இரண்டு பேன்ட்சட்டைக்காரர்களும் ஒரு வேட்டிக்காரரும் நிழலுக்காக வேப்பமரக் குடைகீழ் வந்தனர். வேட்டிக்காரர் தொடக்கவுரையாற்றினார்.
"என்னய்யா சோழா, இங்கத்தான் இருக்கியா? ரெம்ப‌ சவரியமாப் போச்சுப் போ. களக்கட்டெ வெச்சுக்கிட்டு கோவணத்தோட என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கெ? வயசான காலத்துல கண்ணுமுன்னு தெரியாம எசக்குப் புசக்கா எங்கையாவது..."
பேன்ட்சட்டைக்காரர்களை வழிநடத்திவரும் அந்த 40 மதிக்கத்தக்க ஆசாமியைச் சோழையனுக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை.

அருகில் வந்ததும் சிறிது ஞாபகம் வந்தது. நிஜாம் நகர். வீடுமனைகள் வாங்க விற்க அணுகவும். தொடர்புக்கு... அதுவரைக்கும் சென்ற‌ ஞாபகத்தால், அதன்பிறகிருந்த பத்திலக்க எண்ணையும் பெயரையும் கண்டெடுக்க முடியவில்லை.
"வாங்க துப்பாக்கி. சடக்குன்னு ஆள்தெரியல"
"இதுக்கு இவ்ளோ நேரமா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி"
துப்பாக்கி என்ற பதத்துக்கும் வள்ளுவனின் 12வது குறளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தாத்தாவுடன் ஒட்டியே வந்த பரம்பரைச் சொத்தில் ஒரு கம்பீரத்துக்காக எடுத்துக்கொண்ட புனைப்பெயர்தான், இந்தப் பொருளாகுபெயர். சுடப்பட்ட குண்டு வேகத்தில் வேலை முடியும் என்ற ராசியில், சமீப காலங்களில் பண்பாகுபெயரும்கூட‌. புல் செதுக்கியிருந்த பகுதியொன்றில், துண்டைப்போட்டு துப்பாக்கி உட்கார்ந்தார். ஒரு பேன்ட்சட்டை துண்டைப் பகிர்ந்துகொண்டார். இன்னொரு பேன்ட்சட்டை தனியே வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். கார் ஓட்டுனர் காரிலேயே படுத்துக்கொண்டார்.

துப்பாக்கி பேசினார்.
"இந்த நெலத்தெ யாருக்குமே கொடுக்காமெ, பில்லு செதுக்கிப் பில்லு செதுக்கி, சோடிச்சுச் சிங்காரிச்சு என்னதான்யா பண்ணப்போறெ?"
ஒரு சிறு நகைப்புக்குப் பிறகு ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் தொடர்ந்தது.
"இந்த ஏரியாவுல ஒன்னோடது போக சொச்ச எடமெல்லாம் இந்தத் தம்பியோடது. மெட்ராஸ்ல டாக்டர்" என்று சொல்லி, தன் துண்டைப் பகிர்ந்துகொண்டிருக்கும் டாக்டர் சாரின் நிலஎல்லைகளை வரையறுத்துச் சொன்னார்.
"சோழா, நீ பேப்பர்லாம் படிப்பியா? விழுப்புரத்துல இருந்து மெட்ராஸ் வரைக்கும் ரோட்டோரத்து வெள்ளாமெ நெலமெல்லாம் பிளாட் போட்டாச்சு. நீமட்டுந்தான்யா இந்தப் பொட்டக் காட்ட கொடங்கையிலேயே வெச்சுக்கிட்டுத் திரியுறே. எத்தனக் குழியா இருக்கும்?"
"குழின்னா?" இது டாக்டர் சார்.
தரையில் அமர்ந்துகொண்ட இன்னொரு பேன்ட்சட்டைக்காரர் பேசினார்.
"பாரதியாரு பொறந்த தெக்கிச்சீமையிலே காணிக்கணக்குமாதிரி, இங்கெல்லாம் குழிக்கணக்கு. 100 குழி ஒரு காணி. புதுக்கோட்டே பக்கம் கிட்டத்தட்ட 232 கால் குழி ஒரு சென்ட்டு. தஞ்சாவூர் பக்கம்லாம் வேற கணக்கு. மா வேலி போகம் நெடுகெ இன்னும் நெறையா இருக்கு. ஒரு ஆளு ஒரு நாளைக்கி நாத்து நடமுடிஞ்ச எடத்தளவுக்கு நெடுகென்னு நம்ம முன்னோர்க பேர்வெச்சிருக்காங்க. ஓவ்வொரு ஏரியாவுலையும் பொம்பளைங்க நடவு வேகத்தப் பொறுத்து இதுவும் மாறும். எங்க பக்கம்லாம் 16 அரை சென்ட்டு ஒரு நெடுகெ"
யாருக்கும் புரியவில்லை.

"செவனேன்னு இந்த எடத்தெ தம்பிக்கிட்ட கொடுத்திட்டியன்னா, தம்பி வாடகெ வீடுக கட்டிவிட்டு, ஒனக்கும் ஒரு வீடு கொடுத்துடுவாரு. அதுல வர்ற வருமானம் போதாதா? ராசா மாதிரி கால்மேல கால்போட்டுக்கிட்டு..."
"அட ஏங்கண்ணே..." என்று தனது விருப்பமின்மையைக் காட்டிக்கொண்டார் டாக்டர் சார்.
அந்த வேப்பமரம் நடும்போது சோழையனை மண்ணுளிப்பாம்பு நக்கி, மருத்துவரிடம் போன இடத்தில், அங்கிருந்த நல்லபாம்பு சீண்டி தன் அய்யா இறந்துபோன கதை சொன்னார். சிகிச்சையில் சூடுபோடப்பட்ட காயத்தின் தழும்பைக் கெண்டைக்காலில் காட்டினார். சமீபத்தில் டாடியைப் பறிகொடுத்து பூர்வீகச் சொத்தை விற்க வந்திருக்கும் டாக்டர் சாருக்குச் சோழையன் மேல் கொஞ்சம் அனுதாபம் தோன்றியது.

"மண்ணுளிப்பாம்பு ராசியோ என்னவோ, சோழாவுக்குப் புடிவாதம் அதிகம். என்ன அடிச்சாலும் அது சாகாது. இவரு என்னா சொன்னாலும் கேக்குறதில்ல"
தனது நகைச்சுவை யாராலும் அங்கீகரிக்கப்படாததால், துப்பாக்கி குறி மாற்றினார்.
"சரி சோழா, வெட்டிக்கதெய விட்டுட்டு நம்ம விசயத்துக்கு வருவோம். இந்த ஏரியாவுல நிலத்தடி நீரோட்டம் எப்புடி?"
சப்புக்கொட்டிவிட்டு, இயற்கை நீர்வளம் இல்லாத புதுக்கோட்டை இராமநாதபுரம் ஜில்லாக்களின் தண்ணீர்ப்பஞ்சத்தை மனிதர்கள் உண்டாக்கிய ஏரிகளின் வரலாறு சொல்லியும், காவிரி தண்ணீர் குழாய்கள்மூலம் திருச்சியிலிருந்து வருவதையும் சொன்னார்.
"ரெயில்வே டேசன் வழியாத்தானே வந்தீங்க? நிக்கிற ட்ரெயினுல சனங்கெ கக்கூசுல தண்ணிப்புடிச்ச கொடுமையெல்லாம் ஏன் கண்ணால பாத்திருக்கேன்".

குழிக்கணக்கு சொல்லிவிட்டு அமைதியாய் இருந்த பேன்ட்சட்டைக்காரர் சொன்னார்.
"சோளா அய்யா சொல்றதும் சரிதான். இது என்னோட ரிடயர்மென்ட் வருசம். கடெய்சி கால‌த்துல சொந்த மண்ணுல வேல பாக்கலாம்னு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்தேன். இதுவரைக்கும் நான் டெஸ்ட்டுக்குப் போன எடமெல்லாம் பெய்யிலு. ரிடயர் ஆவுறதுக்குள்ள ஒரு டெஸ்டுலயாவது தண்ணி கண்டுபுடிச்சாத்தான் என் சர்வீஸ் சாந்தியடையும். சரி நான்போயி ஏன் வேலைய ஆரம்பிக்கிறேன்" என்று வட்டவடிவக் கருவியுடன் ஆயத்தமானார். அவருக்கு அத்து காண்பிக்க துப்பாக்கி உடன் சென்றார்.

டாக்டர் சாரும் சோழையனும் அவர்களைப் பார்த்துகொண்டே பேசிக்கொண்டார்கள்.
"இந்த சார் வாட்டர் போர்டுல அரசு அதிகாரி. விஞ்ஞான முறைப்படி கருவியெல்லாம் வெச்சு நீரோட்டம் பாக்குறவரு. இதுமட்டும் இல்லாம நம்ம ஊருல இருக்குற சில கிராமத்து மொறைக்காரங்களையும் வரச்சொல்லி இருக்கேன். அவங்களுக்காகத்தான் வெயிட்டிங்"
"தரைக்கடியில தண்ணி கண்டுபுடிக்க எத்தனெ மொறைகள் இருக்கோ அத்தனையும் இந்த ஏரியா மக்களுக்கு அத்துப்புடி"
சிறுநகை பூத்துவிட்டு டாக்டர் சார் சொன்னார்.
"இன்னக்கி நெலமக்கி நெலந்தானே கிராக்கி. வித்துப்புடலாம்னு துப்பாக்கி சொன்னாரு. இங்கெ வாங்கி அங்கெ நெலத்தெ விக்கிற அவரு அப்புடித்தான் யோசனெ சொல்லுவாரு. ரெண்டு வருசத்துல பத்து லெட்சம் காசு பாத்துட்டாராம்"
சோழையன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.
"உண்மெதான். டாடி ஞாபகமா இங்கெ ஏதாவது அபார்ட்மென்ட் மாதிரி கட்டலாம்னு அய்டியா. தண்ணிதான் இப்ப ஒரே பிரச்சனெ. காவிரித்தண்ணியெ ஊருக்குள்ள இருந்து கொண்டாரலாம்னா இது புதுக்கோட்ட எல்லையில வராதாம். பக்கத்தூர் பஞ்சாயத்துல வருது. சரி அப்புடியே கொண்டாரலாம்னு பாத்தா ரெயில்வே லயனெக் கிராஸ் பண்ணி தண்ணி கொழாய் போட்றதெல்லாம் சுலுவு இல்ல‌. அதான் த‌ண்ணி இருக்கான்னு பாக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். தண்ணி இருந்தா டாடி ஆசீர்வாதம்னு ஏத்துக்குறது. இல்ல வித்துர்றது".
தன் தகப்பனுடன் தனக்கிருக்கும் வேம்புபோல், டாக்டர் சாருக்கும் தண்ணீர் மூலம் பூர்வீகம் தொடர வேண்டுமென சோழையன் நினைத்துக் கொண்டார். ச்சரக்க் ச்சரக்க் நிறுத்திவிட்டு புற்களை ஓரிடத்தில் குவிக்க ஆரம்பித்தார்.

சிறுது நேரத்தில் இன்னொரு காரில், மூன்றுபேர் வந்திறங்கினார்கள். பல்வேறு முறைகளில் நீரோட்டம் பார்ப்பவர்கள். எலுமிச்சம்பழம். வேப்பங்குச்சி. தேங்காய். அந்தோனியார் தகடில் பார்ப்பவர் கடைசி நேரத்தில் வரமுடியாத‌தால்தான் இவ்வளவு தாமதம். இருந்தாலும் நான்கு முறைகளில் சோதிப்பதில் டாக்டர் சாருக்கு மகிழ்ச்சிதான். இம்மும்மூர்த்திகளும் களம் புக்கினர். இந்தக் காரின் ஓட்டுனரும் காரிலேயே படுத்துக்கொண்டார். கோவணத்துடன் சோழையனும் தூக்கிவிடப்பட்ட சட்டைக்காலருடன் டாக்டர் சாரும் வேப்பமர நிழலிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 11 மணியளவில் சாந்தியடையாமல் சர்வீஸ் முடிந்துவிடும் சோகத்தில், அதிகாரி நிழல் திரும்பினார். "கஷ்டம் தம்பி" என்பதுதவிர வேறேதும் பேசாமல் தனது கருவியையும் கைக்கடிகாரத்தையும் செல்பேசியையும் கைப்பைக்குள் வைத்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். ப‌ன்னிரண்டு மணிக்குள் மும்மூர்த்திகளும் கீழுதடு பிதுக்கித் திரும்பினர்.

முடிகட்டி மலையிழுக்க வந்திருந்த டாக்டர் சார் முடிபோனாலும் மலைவந்தாலும் கொண்டாடுவதற்கு ஏற்கனவே தயாராக வந்திருந்தார். காரிலிருந்து மதுவகைகள் எடுத்துவரப்பட்டன. தான் கோயில்போல் மதிக்கும் இடத்தில் இப்படி நடப்பது சோழையனுக்கு என்னவோபோல் இருந்தாலும் இருக்கட்டும் என்று காட்டிக்கொள்ளவில்லை. அன்று முழு உண்ணாநோன்பு அனுசரிக்கும் சோழையனையும் வேலை நேரத்தில் குடிக்காத ஒரு கார் ஓட்டுனரையும் தவிர மற்ற 7 பேரும் மதுவருந்தத் தயாரானார்கள். வட்டமிட்டு உண்ணும் தர்மப்படி மதுவைச் சமபங்கிட்டு கைக்கெட்டியதை வாய்க்குக் கொண்டுபோகும் சுபதருணத்தில் அங்கிருக்கும் 9 பேரும் என்றுமே பார்த்திராத‌ ஒரு சம்பவம் நடந்தது!

தூரத்தில் என்றோ ஒருநாள் குளமாக இருந்து, கொட்டைச்செடிகள் மண்டி வாய்பிளந்து கிடக்கும் நிலத்திலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம்! எடுத்த மதுவை ஒரு மாதுவிற்காகத் துறந்துவிட்டு மும்மூர்த்திகளும் அங்கு ஓடினார்கள். கொட்டைச்செடிகளின் புதர்களுக்கு நடுவே ஒருத்தி தலைவிரி கோலமாய் வெளியேற திணறிக் கொண்டிருந்தாள். அடித்தொண்டையிலிருந்து தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தாள். மூன்று ஆண்கள் அவளின் பின்புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சட்டை அணியாமல் நீண்ட தலைமுடி வைத்திருந்தான்.

மும்மூர்த்திகள் பக்கத்தில் ஏதாவ‌து தற்காப்பு ஆயுதம் தேடிக்கொண்டிருந்த‌ பொழுதில் அவள் வேப்பமரத்தை நோக்கி ஓடியிருந்தாள். அவளின் சேலை புதர்களுக்கிடையே கைவிடப்பட்டிருந்தது. அவளைத் துரத்தியேவந்த மூவரில், சட்டை போடாதவன் நிழலில் நிற்பவர்களை ஒதுங்கச்சொல்லி சைகை செய்தே ஓடிவந்தான். ஓடிவந்தவள் சோழையன் கழட்டி வைத்திருந்த வேட்டிசட்டைக்கருகில் நின்றாள். அவற்றைத் தூக்கியெறிந்தாள். கால்பரப்பி அமர்ந்தாள். அழுதாள். அழுதாள். அழுதாள். ஐந்து நிமிடங்கள் வேறேதும் சம்பவிக்கவில்லை. அருங்காட்சியகச் சிலைகள் போல் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். அழுகை நிறுத்தினாள். வெறிபிடித்துத் தரையை வெறுங்கையால் தோண்டினாள். ஒரு முழம் ஆழம் தோண்டி ஒருகைப்பிடி மண்ணெடுத்து வந்த திசையிலேயே திரும்பி ஓடினாள். அவள் தன் சேலையையும் தாண்டி ஒடியிருந்தாள்.

"சரி சரி. நீங்க ரெண்டு பேரும் வெரசா கூடவே ஓடுங்க. நான் சாமி வந்திக்கிட்டு இருக்குன்னு அய்யாவுக்குச் செல்போன்ல தகவல் சொல்லிடுறேன்" என அந்த மூவரில் ஒருவன் மற்ற இருவரையும் அனுப்பி வைத்தான். சட்டை போடாத பூசாரியும் இன்னொருவனும் அவளைத் தொடர்ந்தோடினர். மற்றவர்களைச் சட்டை செய்யாமல் தன் செல்பேசியில் யாரையோ தொடர்புகொள்ள முயன்றான்.
"மூணு நாளைக்குச் செல்போன் வேல செய்யாதுன்னு பேப்பர்ல படிச்சேன்" கார் ஓட்டுனர் சொன்னார்.
"அது மெசேஜ் மட்டும்தாம்பா. கால்லாம் பண்ணலாம்" என்றார் டாக்டர் சார்.
"தரையிலெ டவர் கெடைக்காது. மரத்துலெ அந்த ரெண்டாவது வாதுலதான் பேசமுடியும்" என்று சோழையன் கிளை காட்டினார். அவன் மரமேறி செல்பேசியில் கத்தினான்.
"அண்ணன் மண்ணெடுத்துக்கிட்டு வர்றாரு. ரெடியா இருங்க..."
அவன் கீழிறங்கி சைகையில் தண்ணீர் வாங்கி முகம் கழுவினான். வீரம்காட்ட வேலை இல்லாததால் மும்மூர்த்திகள் ஆளுக்கொரு திசையில் சிறுநீர் கழிக்கப் போயிருந்தார்கள்.

"பேய் முத்திடுச்சுப் போல" வேறு யாருமில்லை துப்பாக்கியேதான்.
முகம் துடைத்துக் கொண்டிருந்தவன் சொன்னான்.
"பேயில்ல. ஏன் அண்ணனோட ஆவி. அவங்க ஏன் அண்ணி. சாமிபாக்க ஓடியாந்தோம்"
யாருக்குமே புரிய‌வில்லை. சோழைய‌ன் விள‌க்கினார்.
"எதிர்பாராமெ எறந்துபோனவங்க ஆவிய, சாமியாட்டிய வெச்சு, பிரியமானவங்க ஒடம்புல வரவெச்சு, அவங்க ஆத்மாவெ அவங்களுக்குப் புடிச்ச எடத்துல கொண்டுபோய் அடக்கிவெக்கிறது"
மும்மூர்த்திகள் சிறுநீர் முடித்துவிட்டு அங்கேயே பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். அறிவிய‌ல் ரீதியில் டாக்ட‌ர் சார் விள‌க்கினார்.
"நெருக்கமானவரோட திடீர் மரணத்துல நிறைவேறாம போன ஆசைகளத் தன்னால மட்டும்தான் நிவர்த்தி பண்ணமுடியும் அப்புடின்னு ஒருத்தர் நெனச்சா இதுமாதிரி வந்து முடியும்"
யாருக்கும் புரிய‌வில்லை.
"சந்திரமுகி படம் மாதிரி" என்றார் டாக்ட‌ர்.
"அப்புடிச் சொல்லுங்க‌" என்றார் கார் ஓட்டுன‌ர்.
"அப்ப‌ இது உண்மையான‌ பேயில்லையா?" மீண்டும் துப்பாக்கியே.
"அய்யாவோட‌ கோமண‌ம் அவுந்துருந்தா தெரிஞ்சிருக்கும். பொய்ப் பேயின்னா பயந்து போயிருக்கும்ல‌". ஆவியின் த‌ம்பி முறைத்தான்.

"சரி சரி ஆக வேண்டியதப் பாருங்கப்பா. மணி என்ன ஆச்சு?" இதுவும் துப்பாக்கிதான். குழிக்கருகில் மண்ணாராய்ச்சி செய்துகொண்டிருந்த அதிகாரி அவர்கள், கைப்பை திறந்து கடிகாரம் எடுக்கப் போனார். அந்த நொடியில் அவரின் சர்வீஸ் சாந்தியடைந்தது! அவரின் வட்டக்கருவிமுள் சுற்றிக்கொண்டிருந்த‌து! அவரால் பேசக்கூடமுடியவில்லை. என்னவோ ஏதோவென்று அருகில் வந்தவர்களுக்குப் புரிந்துபோனது. சந்தோசத்தின் 'எல்லைதாண்டி' நின்றிருந்த டாக்டர் சார், சோழையனுக்குச் சொந்தமான அந்த இடத்தைவிட்டு எல்லாரையும் விலகிப் போகச்சொன்னார்; சோழையனையும் சேர்த்துத்தான். அதிகாரி மட்டும் தனியேபோய் மீண்டுமொருமுறை சோதித்தார். "கன்பார்ம் தம்பி. நூற‌டிக்குள்ள தண்ணி". குழியை மூடி புல் செதுக்கப்பட்ட தரைபோல் ஆக்கிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் எல்லாரையும் கார்களுக்கருகில் இருக்கச் செய்தார் டாக்டர் சார்.

மும்மூர்த்திகளை ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வேப்பங்குச்சிக்காரன். "இந்த மரத்து நெழல்ல எதாவது ஓட்டம் இருக்கான்னு பாருப்பா" துப்பாக்கி வெடித்தார். தனது வேப்பங்குச்சியை எடுத்து நாக்கு வழிக்கப் போவதுபோல் வளைத்துப் பிடித்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான். 'அவ்விடத்'திற்கு அருகில் ராட்டனம்போல் சுற்றியது. அடுத்து எலுமிச்சைக்காரன். மந்திரம் சொல்பவன்போல் எலுமிச்சையை விரல்களுக்கிடையே உருட்டிக்கொண்டே நடந்தான். ஏதோ சிலிர்ப்பூட்ட வானத்தில் தூக்கியெறிந்தான். வேறு எங்கேயோ விழப்போகிறதென மற்றவர்கள் எதிர்பார்க்க வளைந்துவந்து 'அதே இடத்தில்' விழுந்தது. கடைசியாக தேங்காய்க்காரன். தேங்காய்க்குடுமியை அவனது வலதுகையின் நடுவிரல்நுனி தொடும்படி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நடந்தான். 'அந்த இடத்'திற்கருகே குடுமி தானே எழுந்து நேராக நின்றது. "அட்றா மொளைக்குச்சிய இங்கெ" கத்திச் சொன்னார் டாக்டர் சார்.

முன் கூடியவர்கள் எல்லாரும் மீண்டும் மதுவருந்த‌‌க் கூடினார்கள். துப்பாக்கியும் டாக்டர் சாரும் ரகசியம் பேச சோழையனை மரத்துக்குப்பின் அழைத்தார்கள். சோழையன் வேட்டிச்சட்டைக்கு மாறிக்கொண்டிருந்தார்.
"இவரு பேரென்னா? ராஜராஜனா? ராஜேந்திரனா?"
"சோழையன். வெறும் சோழையன்" துப்பினார் துப்பாக்கி. 'வெறும்' என்ற‌ வார்த்தை அழுத்திச்சொல்ல‌ப்ப‌ட்ட‌து.
"எங்க தம்பி, ஆவியோட தம்பியக் காணாம்?" அவர்கள் சுற்றிமுற்றிப் பார்ப்பதற்குள் சோழையன் அங்கு வந்தார்.
"பாத்தியா சோழா. அண்ணன் ஒருத்தன் ஓன் எடத்துல உயிர்விட்டான்னு ஒருத்தன் அடிச்சு சொல்றான். ஓட்டம் பாத்தப்ப இங்கதான் நின்னான். இப்பக் காணாம் பாரு. எனக்கென்னவோ அவன்போய் ஆளுகளக் கூட்டியாந்து, இங்கெ ஒரு மண்டபமோ சமாதியோ கட்டாம விடமாட்டான். நீயே எடத்தத் தரமாட்டேன்னு சொன்னாலும், மத்தவனுக்குப் போகவிடாம பண்ணிடுவானுக. பைபாஸ் ரோடு, ஸ்கூலு, ஃபேக்ட்ரி, ஆஸ்பத்திரி அப்பிடி இப்டி பண்ணி அடிமாட்டுவெலைக்கி அபகரிச்சுப் போயிடுவானுக. அதனாலதான் சொல்றேன்...".

எச்சரிக்கையாகவும் மிரட்டலாகவும் தாக்கத் தொடங்கிய துப்பாக்கிக் குண்டுகளைச் சோழையன் உதாசீனப்படுத்திவிட்டு நடக்கலானார். ஆர்.கே.பி. தியேட்டர் - புதுக்குளம் - காமராஜர் நகர் வழியாக ஊர்வந்து சேர்ந்தபோது மாலை 6 மணி. பணத்துக்காக பணத்தால் பணத்துக்குக் காரியங்கள் ந‌டக்கும் உலகத்தில் நிகழ்கால எதார்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாலைவன மழைத்துளியாய்க் காணாமல் போகும் சோழையன் போன்ற அப்பாவிகள் இத்தேசத்தில் அதிகம். இறந்தவனை இருப்பவனாகவும், இருப்பவனை இறந்தவனாகவும், கையெழுத்தைப் பொதுவுடைமையாகவும், கடவுளையும் தனியுடைமையாகவும் மாற்றமுடியும் என்று இந்தச் சோழையன்களுக்குத் தெரிவதில்லை.

நீரோட்டம் கண்டுபிடித்து சரியாக 67ம் நாள், திங்கள்கிழமை, மர்மமாக வேப்பமரம் வேரோடு சாய்ந்துகிடந்தது. ஒரு மண்ணுளிப்பாம்புதவிர உயிர்ச்சேதம் வேறெதுவுமில்லை எனத் தகவல்.

- ஞானசேகர்

Monday, April 18, 2011

அந்தமாகமம்

உலகின் கடைசி மனிதன் தனியாக இருக்கும்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
- உலகின் மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா அவர்கள் சொன்னது

விலக்கப்பட்ட கனியைச்
சாத்தானுக்குத் தந்துவிட்டு
கடவுளைக் களிமண்ணாக்கி
நியாயத்தீர்ப்பு நாளில்
ஓய்வெடுத்துக் கொண்டான்
மனிதன்.

- ஞானசேகர்

அரிவை கூந்தல்

கணினித்திரை தலையேறி
ஒற்றைக்கால் தவமிருந்து
குளிர்சாதன தண்மையில்
CPU இளஞ்சூட்டில்
வதங்கியும் வாடியும்
சருகாய்ப் போயின
மகளிர்தின ரோஜாக்கள்!

- ஞானசேகர்

தேவதூதர்கள்

தன் அழுகை சபிக்கும்
தியானக் கூடங்களை
மூத்திரத்தால் அபிஷேகிக்கின்றன
பால்நாடும் குழந்தைகள்!

- ஞானசேகர்

ரகசியங்களின் பொதி

கனக்கிறது சவம்.

- ஞானசேகர்

Monday, April 11, 2011

ஒலிநடனம்

சந்தையின் சந்தடியைத் தனிமையிலும் தனிமையின் சாந்தத்தைச் சந்தையிலும் உணரமுடிந்தவனே ஞானி.
- யாரோ

நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் சமூகவியல் பாடத்தில் பார்த்திருந்த அவ்விடத்தின் உருவம் மட்டும் என்நினைவில் அழியாமலேயே தங்கிப் போனது. தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பவனுக்குக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதுபோல் தோற்றமளிக்கும், அக்கட்டிடத்தின் பெயர் கோல்கும்பா (Gol Gumbaz). ஹைதராபாத்தில் ஒருமுறை கோல்கும்பா என்று நினைத்துப் போய், அதேபோல் உச்சரிக்கப்படும் கோல்கொண்டா (Gol Gonda) என்ற இடத்தின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக கோல்கொண்டாவைக் கோல்கும்பா என்று சுட்டியும் திரிந்திருக்கிறேன்.

கர்நாடகாவில் பிஜப்பூரில் (Bijapur) இருக்கிறது; ஏதோவொரு மன்னனின் கல்லறை; என்பனதவிர வேறொன்றும் எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனதில் புதைந்துபோன உருவமொன்றைத் தரிசித்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறேது நோக்கமுமின்றி, உள்ளூர் காலநிலையும் வாழ்க்கையும் வெக்கை வீசிக்கொண்டிருந்த ஒரு பொழுதில், தமிழ் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இரண்டுபேர் அடங்கிய குழுவொன்று கோல்கும்பா கிளம்பியது. மூன்றுமணிநேர இருப்பில், வாழ்க்கையில் எதையோ சாதித்துவிட்டதாக எனக்கேற்பட்ட பிரமிப்பை உங்களுடன் பகிர்கிறேன்.

பாமினிப் பேரரசுதான் (Bahmani kingdom) தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் சுதந்திர மற்றும் ஒரே ஷியா (Shia) இஸ்லாமியப் பேரரசு. மொகலாயப் பேரரசர் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராகப் புரட்சிசெய்து அலாவுதீன் ஹாசன் பாஹ்மன் ஷா என்பவரால் 1347ல் உருவாக்கப்பட்டது. தக்காணப் பீடபூமியை (Deccan plateau) ஐம்பெரும் மாநிலங்களாகப் பிரித்து ஆண்டுவந்த பாமினிப் பேரரசின் ஒருமாநிலம்தான் கோல்கும்பா இருக்கும் பிஜப்பூர்; இன்னொன்று ஹைதராபாத்தில் இருக்கும் கோல்கொண்டா! அப்பறம் பீதர் பேரர் அகமத்நகர்.

பாமினிப் பேரரசின் ஆளுநராக இருந்த யூசுப் அதில்ஷா என்பவரால்தான் பிஜப்பூர் நகரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. 1490 முதல் அதில்ஷா வம்சத்தின் ஒன்பது அரசர்களால் இந்நகரம் ஆளப்பட்டிருக்கிறது. போர்த்துக்கிசியர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள் என்ற பல அச்சுறுத்தல்களுக்குட்பட்ட இப்பேரரசை 1686ல் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வென்றுபோனார். அதில்ஷா அரசப் பரம்பரையினால் ஆளப்பட்டிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் பிஜப்பூரைத் தக்காணத்தின் பல்மீரா (Palmyra of Deccan)என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள். அதில்ஷா அரசவம்சத்தின் ஏழாவது அரசரான முகமது அதில்ஷாவின் கல்லறைதான் கோல்கும்பா.

பிஜப்பூர் பேருந்து நிலையத்தைக் காலை எட்டு மணியளவில் அடைந்தோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது கோல்கும்பா. அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு, நீண்ட பாதையின் முடிவிலிருக்கும் கோல்கும்பா நோக்கி நடந்தோம். அதற்கு முன்னால் அருங்காட்சியம் ஒன்றும் இருக்கிறது. திட்டப்படி முதலில் கோல்கும்பா.


(கோல்கும்பா பின்னணியில் அருங்காட்சியகம்)

யானை தடவச் சென்றிருந்த குருடர் கதையாய், ஒரு மன்னனின் கல்லறையென்ற ஒற்றைவரித் தகவலுடன் போயிருந்த எங்களுக்கு, பற்பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பிடறி பின்னங்காலைத் தொட அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்த நினைவுச் சின்னத்தின் உயரம், கிட்டத்தட்ட 20தள அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சமம். ஒரு கனசதுரப் (cube) பெட்டகத்தின்மேல் வைக்கப்பட்ட குவிமாடத்தின் (dome) அமைப்பு. தென்கதவுதான் பிரதான வாசல். உள்ளே நுழைந்தால், நான்கு சுவர்களைத்தவிர பிடிமானம் வேறேதுமில்லாத ஒரு பிரம்மாண்டமான சதுர அறை; ஒவ்வொரு பக்கமும் 135 அடி நீளம்; சுவர்களின் தடிமன் 10 அடி; உயரம் 110 அடி.

கோல்கும்பாவின் நான்கு மூலைகளிலும் கட்டிடத்தோடு ஒட்டியிருக்கும் கோபுரங்கள். இஸ்லாமிய முறையில் அமைக்கப்படும் மினாரெட் (minaret), சீன முறையில் அமைக்கப்படும் பஹோடா (pagoda) என்ற இரண்டு முறைகளின் கலவை. உட்புறப் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்ட எழுதளங்கள். ஏழாவது தளத்தின் வாசல், கனசதுர உச்சியில் (மொட்டைமாடியில்) திறக்கிறது.



(கோல்கும்பாவின் பிரதான தென்வாசல்)

தென்வாசல் வழியே உள்நுழைந்த இரண்டுபேர் அடங்கிய குழு, தென்கிழக்கு கோபுரம் வழியே படியேற ஆரம்பித்தது. படிகளின் உயரம் அதிகமாக இருந்தபடியாலும், இதமான குளிர்க்காற்று சுகமாய் இருந்தபடியாலும், முன்னேறும் பெண்களின் பிட்டத்தை எழுநிலைகளிலும் பின்தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இன்னொரு குழுவிலிருந்து சற்று விலகியிருக்க நினைத்தபடியாலும் நாங்கள் கனசதுர உச்சியை அடைய கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டோம். கோபுரத்தின் ஏழாம்தளத்தைவிட்டு மொட்டைமாடிக்கு வந்தால், கண்ணெதிரே பிரம்மாண்டமாக நிற்கிறது குவிமாடம். இரண்டுபேர் நடக்குமளவிற்குக் குவிமாடத்திற்கும் கனசதுர விளிம்பிற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. இரண்டு சுற்றுகள் சுற்றினோம். முதல்சுற்று கோல்கும்பாவிற்கு மட்டும். இரண்டாம் சுற்று ஊர்ச்சுற்று.

அங்கிருந்து குவிமாடத்தின் அடியில் இருக்கும் ஒரு குறுகிய வாசலை அடைந்தோம். இதுபோல் ஆறுவாசல்கள் இருக்கின்றன. குவிமாடத்தின் அடித்தளத்தைச் சுற்றி மூன்றரை மீட்டர் நீளமுடைய, பால்கனி போன்றதொரு நடைபாதை இருந்தது. அங்கிருந்து கீழே இருக்கும் கனசதுர கீழ்த்தளத்தைப் பார்க்கப்போய், எனக்கிருக்கும் acrophobia கொஞ்சம் விழித்துக் கொள்ள ஓரமாக அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் பலர், உயர பயத்தில் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்த்திருந்தார்கள். ஒரு முதியவர் மிகவும் சிரமப்பட்டு கண்களை அகலப்படுத்தி, கால்களை நீட்டி விரித்து, மூச்சை ஆழப்படுத்தி கொண்டிருந்தார்.

நீங்கள் பயந்துபோவீர்கள் என இதுவரை நான் சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன். கோல்கும்பா அருகாமையில் முதன்முதலில் வந்தபோது, அதனுள் இருந்து வித்தியாசமான சத்தங்கள் மிக அதிக வீரியத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. வாசலிலிருந்த பலகையில் படித்தபிறகுதான், எவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் எனப் புரிந்தது. குவிமாடத்தின் அடியைச் சுற்றி உட்புறமாக இருக்கும், பால்கனி போன்ற இந்த வட்டவடிவ சுற்றுப்பாதைக்கு முணுமுணுக்கும் மாடம் (whispering gallery) என்று பெயர். இதன் எந்தவொரு இடத்திலிருந்தும் எழுப்பப்படும் காகித அளவிலான சத்தம்கூட, அதன் நேரெதிர் முனையில் மிகத்துல்லியமாகக் கேட்கும். மன்னர் மனைவியுடன் இம்முறையில்தான் பேசிக் கொண்டாராம். அதைவிட ஆச்சரியம், எந்தவொரு ஒலியும் 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிக்கப்படுகிறது. நாட்டியக் கலைஞர்கள் கீழ்த்தளத்தில் நடனமாட, இசைக்கலைஞர்கள் இங்கிருந்து இசைக்க..... ராஜவாழ்க்கை! ஏதோவொரு சத்தத்தைச் சுமந்தபடி எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும் காற்றின் மென்தழுவல், அற்புதமான அனுபவம்!



(முணுமுணுக்கும் மாடம்)

உயர ஒவ்வாமை போனபிறகு, தைரியமாக கீழே குனிந்து பார்த்தேன். கீழ்த்தளத்தில், ஒரு சதுர மேடையில் 7 பேரின் கல்லறைகள். முகமது அதில்ஷா, இரு மனைவிகள், மகன், மகள், மருமகள், நாட்டிய மங்கை ரம்பை. அருங்காட்சியகம் போனோம். புகைக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதில்ஷா அரசக்குடும்பத்தின் ஆட்சியாளர்களைத் தவிர, அவர்களின் சகோதர சகோதரிகளின் பெயர்கள் அறியப்படவில்லையென குடும்பமரம் (family tree) சொன்னது. சகோதர்களையும், சகோதரிகளின் கணவர்களையும் கூட அடையாளம் காட்டுகிறது இணையம்.

கோல்கும்பா பற்றிய சாதனைக் குறிப்புகள்:

1. துண்களேதும் கிடையாது. எந்தவொரு பிடிமானமுமின்றி (uninterrupted floor spacing), உலகிலேயே அதிக பரப்பளவை (1693 சதுர மீட்டர்) ஆக்கிரமித்திருக்கும் கட்டிட அதிசயம் கோல்கும்பா.

2. துருக்கியின் ஹாசியா சோஃபியா (Hagia Sophia), வாடிகனின் புனித வளனார் பேராலயம் (Saint Peter's basilica) வரிசையில் கோல்கும்பாவின் குவிமாடம் உலக அளவில் மூன்றாவது பெரியது.

3. 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிகள் தொடர்ச்சி, உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை.

4. வாடிகனின் புனித வளனார் பேராலயத்தின் குவிமாடம், கோல்கும்பாவைவிட 5மீட்டர் அதிக விட்டமுடையதாக இருந்தாலும், கோல்கும்பாவின் குவிமாடத்தைத் தாங்கியிருக்கும் கனசதுரம் பெரிதென்ற முறையில், உலகிலேயே குவிமாடவடிவ கட்டிடங்களில் அதிகப் பரப்பளவுடைய பெருமையும் கோல்கும்பாவையே சேர்க்கிறது.

5. அரைக்கோளவடிவ குவிமாடத்தைச் சதுர அறைமேலோ, நீள்வட்ட குவிமாடத்தைச் செவ்வக அறைமேலோ பொறுத்த,கோளத்தின் முக்கோணத் துண்டு போன்ற pendative என்ற கட்டுமான அமைப்புகள் பயன்படுகின்றன. வெட்டிக்கொள்ளும் pendativeகள் உலகிலேயே இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றிகரமாக கட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்றையும் பார்க்க வேண்டுமானால் ஸ்பெயினிலுள்ள கர்டோபா (Mosque of Cordoba) போகவேண்டும்.


(தரைத்தளத்திலிருந்து குவிமாடத்தின் தோற்றம்; முணுமுணுக்கும் மாடத்தில் மனிதத்தலைகள் தெரிகின்றனவா?)

முணுமுணுக்கும் மாடத்தில் தள்ளாடும் நான்கு பாட்டிகள், எழுதளங்கள் ஏறிவந்து, எதிரொலிகளைக் உணர்ந்ததில் பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த பதங்களைக் கத்திப் பார்த்தார்கள்; கெட்ட வார்த்தைகள், பன்மொழிகளில் I love you, சற்றுமுன் தெரிந்துகொண்ட அழகுப்பெண்பெயர் என எதிரொலி சோதனை செய்துபார்த்தார்கள். எல்லாவற்றையும் நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டு துயில்கின்றன ஏழு உடல்கள். யாரும் இல்லாத பொழுதில் அவர்கள் எழுந்துவந்து, மீயொலியில் பேசிக்கொள்வதாக கற்பனை செய்துகொண்டு விடை பெற்றோம்.

Earphoneல் பாடல் கேட்டுக் கொண்டு, நண்பர்கள் பேசுவதுகூட தெரியாமல், தட்டிகேட்டால் மட்டும் அதை எடுத்துவிட்டு பேசிய ஒரு வாலிபனைப் பார்த்தேன். அவன் ஊர் திரும்பியவுடன் சொல்வதற்கேதேனும் செய்திகள் வைத்திருப்பானா என்பதும் ஓர் ஆச்சரியமே! கேட்க மறுக்கும் மனித இனத்திற்கு இன்னும் சில்லாண்டுகளில் காதில்லாமல் போகுமெனும் பரிணாமக் கூற்றில் ஆச்சரியமேதுமில்லை!

- ஞானசேகர்

Sunday, January 30, 2011

அங்காடி நாய்

செல்வத்தின் உச்சமும்
வறுமையின் எச்சமும்
-வைரமுத்து (பெய்யெனப் பெய்யும் மழை)

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்.
- மகுடேஸ்வரன் (காமக்கடும்புனல்)


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

இரகுராமன். 12 வருடங்களாக எனது நண்பன். அவனுக்குத் திருமணமாகி ஒருமாதங்கூட முடிந்திருக்கவில்லை. மூணாறு அந்தமான் டார்ஜிலிங் சிம்லா என்று எங்கேயோ இருப்பார்கள் என்ற நினைப்பில் அவனுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து வந்தேன். சரியாக 25 நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் அவனே அழைத்தான்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலை அடைந்தபோது இரவு 8 மணி. வாட்ச்மேன் அனுமதிக்கவில்லை. ரகு ஏதோவொரு சன்னலில் இருந்து கையசைத்தபின் அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்த கார் கண்ணாடி ஒன்றில் தலைமுடி சரிசெய்து, அவனது தளத்தை அடைந்தபின் அங்கிருந்த வீடுகளில் எதுவென்று தெரியாமல், கதவு திறந்திருந்த ஒரு வீட்டின் அருகில் சென்றேன். ரகுவின் மனைவிபோல் ஒருத்தி சோஃபாவில் சம்மணக்காலிட்டு சின்னத்திரைக் குடும்பவிவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரகுவின் மனைவியேதான். இடதுகைப்பழக்கம். அழைப்புமணி அழுத்த வலதுகை உயர்த்தியபோது பின் வீட்டில் இருந்து ரகு கூப்பிட்டான்.

'டேய் சேகர். இந்த வீடு. என்ன மறந்திட்டியா?'
உள்ளங்கை குவித்து தோளில் தட்டினான்.
'ஓ..... சரியா ஞாபகம் இல்லை. கல்யாணத்துக் முன்னாடி வீடுதேடி அலஞ்ச்சப்ப வந்தது'
கதவை உள்தாழிட்டான்.
'எதிர்வீட்டுப் பொண்ணு எடது கைல ரிமோட் யூஸ் பண்ணிட்டி இருந்துச்சு. ஒன்னோட மனைவியோன்னு கொழம்பிப் போய்ட்டேன்'
'ஞானசேகர்ட்ட புடிச்சதே யானமாதிரி இந்த ஞாபகசக்திதான்'
ஆள்காட்டிவிரலால் என் இடது நெற்றிப்பொட்டில் குத்தினான்.
'அவதான் என் ஒய்ஃப்'.

ஒவ்வொரு அறையாகச் சுற்றிக்காட்டினான். கல்யாணத்திற்கு முன் இருவரின் வாழ்க்கைகளையும் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அலமாரிகளையும் மேசைகளையும் நிரப்பியிருந்தன. எனக்கு நன்கு பரிட்சயப்பட்டிருந்த ரகுவின் பழைய புகைப்படங்களை அவன் மனைவியின் புகைப்படங்களுக்கு இடையே பார்க்கும்போது, ரகு எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தான். இரண்டு தனித்தனி 'என்' விருப்பங்கள், ஓர் 'எங்கள்' விருப்பமாகியிருப்பதை வீடு ரம்மியமாகச் சொல்லியது. எனது அப்போதைய மனநிலையை எப்போதோ அனுபவித்த ஒருவன் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின. 'ஆணால் வீட்டைத்தான் உருவாக்க முடியும்; பெண்ணால்தான் குடும்பத்தை உருவாக்க முடியும்'. ரகு அதிர்ஷ்டசாலி.

ஹாலில் போர்வை விரித்து அமர வைத்தான். அவன் மட்டும் லுங்கிக்கு மாறிக்கொண்டான். சாப்பாடு பரிமாறினான். சாப்பிட ஆரம்பித்தோம்.
'எப்டி இருக்கு என் மனைவி சமையல்?'
'நல்லாருக்கு'
நண்பனின் புதுவீட்டில் புதுமனைவியின் அறிமுகம்கூட இல்லாமல் அவள் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்னவோபோல் இருந்தது.
'ஓன்னோட ஒய்ஃப்?'
கேள்வியின் நீளத்தை வைத்தே புரிந்துகொண்டான்.

'காலையில் எதிர்வீட்டுப் பொண்ணு ஏதோ வந்து சொன்னா. இவளும் இன்னைக்கி நைட்டு மட்டும் அந்தப் பொண்ணுக்குத் தொணையாப் படுத்துக்கிறேன்னா. என்னான்னு கேட்டா பொம்பளைங்க சமாச்சாரம்னு சொல்லமாட்டேன்டா. அந்தப் பொண்ணு ஹஸ்பண்ட் வேற ஊர்ல இல்லை. அந்தப் பொண்ணு தனியா இருக்கும்போல'
சிக்கனின் காலெலும்பில் இருந்து சதையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.
'ஒருவாரமா ஒருவிசயம் என்னெ உறுத்திக்கிட்டு இருக்கு. யாருக்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசுனா பரவாயில்லன்னு தோணிச்சு. நீதான் அதுக்குச் சரியான ஆளு. அதான் ஒன்னக் கூப்டேன்'
ஒரு குடும்பஸ்தன் தனது பிரச்சனைகளுக்கு, தனியாய்த் திரியும் நட்புக்காரனைத் தூண்டில் புழுவாய் உபயோகிக்கப் போவதுபோலத் தோன்றியது. சாப்பாடு இறங்கவில்லை.

'ஒன்னோட பேரச்சொல்லி மனைவிக்கிட்ட இன்னக்கி ஒருநாள் மட்டும் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிஷன் வாங்கி வெச்சிருக்கேன் சரக்கடிக்க'
இது வேறயா? எந்தத் தாயாவது தம்புள்ளயக் கெட்டவன்னு ஒத்துக்குவாளா? எந்த மனைவியாவது தம்புருசன விட்டுக்குடுப்பாளா? வீட்டுக்கு வந்த ஒருவனைத் தன் கணவனுடன் மதுவருந்தச் சொல்லிவிட்டு இன்னொருவீட்டில் ஒருபெண் படுத்துக் கொண்டால் என்னைப்பற்றி அவள் எவ்வளவு கீழ்த்தரமான கருத்து வைத்திருப்பாள்! போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் சேகருக்கே என்று கைகழுவினேன்.

சாப்பிட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 4 பியர் பாட்டில்களை எடுத்து வந்தான்.
'சில செல்போன்கள் தானாகவே ஆன் ஆகிடும். நம்ம பேசுறது வெளி ஆட்களுக்குக் தெரியக்கூடாதுன்னு ஒரு முன்ஜாக்கிரதைதான். போதையில எந்த விசயமும் விட்டுப்போகக்கூடாதுன்னு என்னென்ன பேசணும்னு ஏற்கனவே பாய்ண்ட்ஸ் எடுத்து வெச்சிருக்கேன்'
அவனது இடது பக்கத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த வெள்ளை காகிதத்துண்டை வைத்து அதன்மேல் எங்களது செல்போன்களை வைத்தான்.

'ஏதோ முக்கியமான விஷயம், சொல்றதுக்கு நான்தான் சரியான ஆளுன்னு சொன்னியே. சொல்லு, சியர்ஸ்' என்றேன்.
'சியர்ஸ் for ஜெஸ்டினா வாசுதேவன்' என்றான்.
ஒருகனம் திடுக்கிட்டேன். இ-மெய்லில் கல்யாணப் pdf / jpg அனுப்பும் இக்காலத்தில்கூட, நேரில் வந்து என்னை அழைத்த அந்நாளில், இரவு தூங்கும்போது ரகு முனகிய அதேபெயர். மறுநாள் கல்யாணப் பத்திரிக்கை படித்து, அது அவனது வருங்கால மனைவி பெயரில்லை என்று தெரிந்தவுடன், கல்யாண அலைச்சலில் அசதியில் முனகியிருப்பானென்று நானும் சுவாரசியம் காட்டாமல் விட்டுவிட்ட அதேபெயர்! இரண்டு மாதங்களுக்குமுன் பின்னிரவில் ஒருபெண் என் செல்பேசியில் அழைத்து சொன்ன பல பெயர்களின் ஊடே நான் கவனித்த அதேபெயர்! இன்று மூன்றாவது முறையாக கேட்கிறேன்.

'யார்டா அது?' வெகு இயல்பாகக் கேட்டுக் கொண்டே பியர் ஒரு மடக்கு.
'தேவ்டியா' வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டே பியர் மடக் மடக் மடக்.
எனக்குப் புரையேறியது.
'பாத்து மெதுவா. என்ன ஏறிடுச்சா?'
'Asian flush. அத விடு. நீ சொன்னது புரியல'
'ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒரு பிராஸ்ட்டிடியூட்'
'ஜெஸ்டினா?' இழுத்தேன்.
'வாசுதேவன்' முடித்தான்.
'ஜெஸ்டினாவும் வாசுதேவனும் சேத்தா?'
'ஆமாடா. புணர்ச்சி விதி பேசுறப்ப, நேர்நிரை புளிமான்னு கேக்காதா ப்ளீஸ்'
சதுரங்கத்தில் Stalemate என்றொரு நிலையுண்டு. அது புரியாதவர்கள் என்னுடைய இப்போதைய நிலையைப் பாருங்கள்.

'சேகர், நான் ஒரு பொண்ணோட படுத்திருக்கேன்னா நம்புவியா?'
வந்ததில் இருந்தே சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளையே ரகு உபயோகப்படுத்துவது எனக்கு அசௌகரியமாக இருந்தது.
'கண்டிப்பா. ஏன்னா நீ கல்யாணம் ஆனவன். இதுல நம்புறதுக்கு ஒண்ணுமில்ல'
'I mean கல்யாணத்துக்கு முன்னாடி'
அந்நொடி வரை அவனை ஜெஸ்டினா என்ற பெண்ணுடன் சேர்த்து சந்தேகிக்க எனக்கு தோன்றியிருக்கவில்லை. ரகு அப்படிப்பட்டவன் இல்லை. அதெல்லாம் எப்படா செய்தாய் என்ற நோக்கில் பார்த்தேன்.

'சின்ன சபலம். அப்டி என்னதான் இருக்குன்னு பாத்துடலாம்னு தோணிச்சு'
No objection Your Honour நிலை எனக்கு.
'இன்டர்நெட்ல தட்டுனா 1000 சைட்ஸ். லெட்சம் பேர். டெய்லி நியூஸ் பேப்பர்லே Classifieds பகுதியில Escortsன்னு ஒரு Columnமே வருது. அப்டி இப்டி ஜெஸ்டினாவப் புடிச்சேன்'
Yes proceed என்று நான் சொல்லவேயில்லை.
'ஜஸ்ட் ஒரு நைட். ஆறுமணிநேரம். அதுலயும் ரெண்டுமணிநேரம் தூங்கிட்டேன். அகரமும் னகரமும் அதுமட்டுந்தான்'


வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குமுன் கை அசைத்துக் காட்டினான்.
'என்னடா நான் பண்ணது தப்பா?'
'மாட்டிக்காத வரைக்கும் யாரும் தப்பே இல்ல'
ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசினேன். அதிர்ச்சியில் பேசியதால் முதல் வார்த்தை தொண்டைக்குள் மாட்டிக் கொண்டு குரல் தடுமாறியது. நிமிர்ந்து பார்த்தான்.
'ஒனக்குத்தான் சொன்னேன்'
யாருக்கோ சொன்னதுபோல் குனிந்து கொண்டான்.
'வாய்ப்புக் கெடைக்காத வரைக்கும் எவனும் நல்லவனும் இல்ல. எனக்கு நானே சொல்லிக்கிறேன்' என்றேன்.
'டயலாக்லாம் நல்லாத்தான் இருக்கு'
'உயிர் பிழிஞ்சு சொல்றதெல்லாம் யாரும் கண்டுக்கிறதே இல்ல. யாரோ சொன்னதைச் சொன்னா ஆஹா ஓகோன்னு பாராட்டுக்கள்'
'ஓ சுட்டதா? Customerரத் திருப்திப் படுத்துற மாதிரி நீதான் மசாலா சேத்துச் சொல்லணும்'
'கஸ்டமர் ஸேடிஸ்ஃபேக்ஷன்தான் முக்கியம்னா ஒரு விபச்சாரிக்கும்..... ஓ...... சாரி.... சாரி... தப்பான உதாரணம்'
'பரவாயில்ல சொல்லு'
'ஜெஸ்டினாவப் பத்தி பேசுறப்ப இப்படி ஒரு வார்த்த சொன்னது தப்புதான். In fact அதக்கூட நான் சொல்லல. நடிகர் சிவக்குமார்ன்னு நெனக்கிறேன். Any how, sorry'.
'ஓகே. இனிமே அப்டி சொல்லாதே. கால் கேர்ள்னு சொல்லு'

விபச்சாரி வேசி அவ்சாரி தேவடியாள் என்ற பதங்களை வெறுப்புக்குள்ளான எப்பெண்ணின்மீதும் தொடுக்கலாம் என்ற இச்சமூகத்தில், உபயோகப்படுத்தபட்ட ஆணுறையென பெண்ணை மிதிக்கும் கீழ்த்தர ஆண்கள் பட்டியலில் ரகுவும் சேர்ந்துவிட்டானோ எனப் பயம் வந்தது. இதுதான் சரியான தருணம், தொடு கணையை!
'சரிடா. அந்த so called கால் கேர்ள்னால இப்ப என்ன? ஏதாவது மஞ்ச நோட்டீஸ் வியாதி கியாதி?'
முதன்முதலாகச் சிரித்துக் காட்டினான். நானும் சிரித்து வைத்தேன்.
'அந்த ஜெஸ்டினா வாசுதேவன் இப்ப என்னோட எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டி'
பாதிப்பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தான். எனக்குக் குடித்ததெல்லாம் பாதியாக இறங்கிப் போனது. இதுக்கு மேலயும் Stalemate புரியாதவர்களுக்கு ஒரு Checkmate.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

சுவர்க்கடிகாரத்தின் வினாடிமுள் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டே அடிமேல் அடி வைத்துக்கொண்டிருந்தது. இருவருமே அடுத்த அடி எடுத்துவைக்க முன்வராமல் அவரவர் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தோம். அமைதியைக் கலைக்கும் நோக்கில் எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தேன். முழங்கையால் முட்டுக் கொடுத்து பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கண்கள் என்னை நேரே நோக்கின. நான் ரெடி நீ ரெடியா மாதிரி அவன் தோற்றம்.

'அந்தப் பொண்ணுக்குத் தொணையாத்தான் ஒன்னோட மனைவி?'
'யெஸ்'
தலையை முன்பின் ஆட்டிக்கொண்டே, 'ஸ்' ஐ ரொம்ப அழுத்தினான்.
'அந்த வீட்டுல வேற யாருமில்லையா?'
'புருஷன் மட்டும். சைதாப்பேட்டையில ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்கான்'
'எத்தன நாளா இந்த வீட்ல இருக்காங்க?'
'எங்க கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாடித்தான் அவங்க கல்யாணம். நான் இங்க வந்து மூணுவாரம் ஆகுது. அவங்க அதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க'
'அந்தப் பொண்ணு blackmail ஏதாவது....?'
'என்னெ அடையாளம் தெரிஞ்சுக்கிட்டாளான்னு கன்ஃபார்மா தெரியல'
'நீ மட்டும் எப்டி அவதான்னு கன்ஃபார்மா சொல்றே?'
நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'முதல் வெட்கம். முதல் முத்தம். முதல் நிர்வாணம். இப்படி என்னோட பல முதல்கள். கடைசி வரைக்கும் மறக்க முடியாது'
'அதுவும் சரிதான். ஆனா ஒலகத்துல ஒரே மாதிரி பலபேர் முக ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?'
'சிங்கப்பல்லு தெத்துப்பல்லு'
'100 வருசத்துக்கு முன்னாடி வங்காளத்துல வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும், கர்நாடகா அனில் கும்ளேக்கும் இளவயதில் ஒரேமாதியான முகத்தோற்றத்தோட வெச்சது இயற்கையோட ஒரு விந்தைனா, nothing unusual in தெத்துப்பல்லு also. Its all about your false memory'
'Agreed. பணத்த கையால எண்ற ஸ்டைல், தரையில கால மடக்கி ஓட்கார்ற மொறை, வெறிச்சுப் பாத்துட்டு படபடன்னு சிமுட்ற கண்ணிமைகள். இந்த மூணு வாரத்துல இப்டி நெறைய ஒற்றுமைகள் கவனிச்சேன். இதுக்குமேல என்ன வேணும்? பச்சையா சொல்லனும்னா, அவ மாரு சைஸ் அப்புடியே.....'
காதுகளுக்கு மட்டும் ஏன் தானாகவே மூடிக்கொள்ளும் சக்தியில்லை?

ஏதோ ஓரூரில் சட்டவிரோதமான மதுபானநடன விடுதியொன்றில் தமிழன் ஒருவன், 10 வயது மூத்த தமிழ்ப்பெண்ணொருத்தியின் மார்புக்காம்புகளையும் புட்டத்தையும் வருடிக்கொண்டிருந்தபோது, அவளுக்கும் தனது இறந்துபோன தாயின் பெயரென்று தெரிந்தவுடன், முகம்கவிழ்ந்து ஓடிவந்து தேம்பி அழுதபோது,
'பெண்ணின் மார்பென்பது
அயல்நாட்டில் காமக்குறி
தமிழ்நாட்டில் தாய்மை'
என்று எங்கள் நண்பன் சேரலாதன் சொன்னதை, உணர்வுப்பூர்வமான உதாரணமாகச் சொன்ன அதே ரகு, இன்று இப்படிப் பேசுவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

'சரிடா. ரெண்டு பேருமே ஒரே ஆளாவே இருக்கட்டும். ஒரு ஆம்பள அவள மனைவியா ஏத்துக்கிட்டான்ல? ஒனக்கு என்ன பிரச்சன?'
'அதான் சந்தேகமே. இவளப்பத்தி எல்லாமே தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சான்னு எனக்கு டவுட்டு. அவ கல்யாணமே ஒரு கொளறுபடி கேசு'
'என்னாச்சு?'
'முகூர்த்த நேரத்துல மாப்ள சிங்கப்பூர்ல இருந்து வல்லன்னு, கொழுந்தன் தாலிகட்டி, பின்ன மாப்ள வந்து, மொதத் தாலியப் பிரிச்சுப்புட்டு மறுதாலி'
தாலியெல்லாம் ஊருக்காக; பொண்ணோட மனசவிட வேற வேலியில்லன்னு ரகுவே சொல்லியிருக்கான்னு நான் இப்ப சொன்னா எடுபடாது.பொதுவாக, தான் விருப்பப்பட்ட பெண்ணை இன்னொருவன் கட்டிப்போனால், இல்லாததும் பொல்லாததுமாக அப்பெண்ணைப் பற்றி பரப்பிவிடுவதுதான் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். பிடிக்காத ஒருபெண் பிடித்து செய்த விசயங்களைத் தனக்குப் பிடிக்காமல் ரகு புலம்புவதுதான் எனக்குப் பிடிபடவில்லை. மொத்தத்தில் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு கலாச்சாரத்தைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறான் ரகு. ரகு மட்டுமல்ல, இது ஒரு சமூகத்தின் புலம்பல். நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அப்படி!

'ஓகே. அவளப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சுன்னு வெச்சுக்க. இப்பவும் ஒனக்கு ஏதாவது பிரச்சனையாடா?'
'லிஃப்ட் படிக்கட்டு பார்க்கிங் ஏரியா கடைத்தெரு எங்க பாத்தாலும் சிரிக்கிறா. என் மனைவியோட உடன்பிறவா மக்க மாதிரி கூடவே திரியுறா'
'அவனவன் பக்கத்து வீட்டுப் பொண்ணு கடைக்கண் பார்வை கெடைக்கலையேன்னு மலையளவு ஏங்குறான். நீ ஏன்டா இப்புடி? வேலைக்குப் போகாத பக்கத்து வீட்டுப் பொம்பளங்க பேசிக்கிறதெல்லாம் சகஜம்டா'
'அவங்க புருஷன் பொண்டாட்டி ஒரு சினிமாவுக்குப் போனா எங்களையும் கூப்புட்றா'
'கோழிலருந்து முட்ட வந்துச்சு'
'அவங்க ஊட்டி பிக்னிக் போறதுக்கு நாங்களும் வரணுமாம்'
'முட்டைலருந்து கோழி வந்துச்சு'
'அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் பார்வையும் சிரிப்பும் என்னெ காட்டிக் கொடுத்துருமோன்னு பயமா இருக்கு. இப்புடி பயந்து பயந்தே என்னையே நானே காட்டிக் கொடுத்துக்குவேனோன்னு வேற பயமா இருக்கு. வாழ்க்கையத் தொடங்க வேண்டிய நேரத்துல இப்புடி பூச்சாண்டி காட்றா'
'மனைவிக்கு ஜெஸ்டினா விஷயம் தெரியாது?'
'No. Never by my mouth'
'சூப்பர். இவ்வளவு நேரம் பேசுனதுக்கு ஒரு நல்ல கேள்வி, ஒரு நல்ல பதில்'.

'என் ஒய்ஃபோட நீ பேசினதில்ல. அவ அப்பாவிடா, வெகுளிடா. கண்மூடித்தனமா என்னெ நம்புறா. நம்பியே இருக்கா. அவளுக்கும் ஒரு காதல் அப்புடி இப்புடின்னு ஏதாவது இருந்திருந்தா என்னோட கதையையும் சொல்லி மைனஸ் இன்ட்டு மைனஸ் கிவ்ஸ் பிளஸ், அப்புடின்னு சின்னவீடு ஹீரோயின் மாதிரி அவ வாயாலையே இன்னொரு பொம்பளையப் பாக்கச் சொல்ற ஒரு கேவலமான புருசனா என்னால வாழமுடியும். Company of womenன்னு குஷ்வந்த் சிங் புத்தகத்துல படிச்சப்ப சிரிக்கவெச்ச முதலிரவு, என்னோட வாழ்க்கையில அதே மாதிரி ஒரு பொண்டாட்டியோட நடக்குறப்ப சிரிக்கமுடியல. அவள ஏமாத்துற மாதிரி என்னெ நானே ஏமாத்திக்கிற மாதிரி தெரியுது. I feel guilty before her innocence'. ரகுவின் கண்களில் முண்டியடித்துக் கொண்டு நீர்த்துளிகள் நின்று கொண்டிருந்தன.

கல்யாணம் என்பது உயர்ந்து வளர்ந்த கோட்டை. வெளியே இருப்பவர்கள் உள்ளேபோகத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாமல் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்கள் எல்லாம் உண்மையோ என்று தோன்றியது. மோகப்பித்து முப்பதுநாள் காலக்கட்டத்திற்குள்ளேயே புத்திப்பித்து பிடித்தவன்போல் பேசுகிறான். டென்னிஸில் மட்டும் லவ் பூச்சியமாக இருக்கட்டும், தனது இல்லறத்தில் வேண்டாமெனத் தவிக்கிறான் ரகு.

'எவனெவனோ என்னென்னமோ பண்றான். நான் தப்பேதும் செய்யல. ஜெஸ்டினா விருப்பத்தோடத்தான் பண்ணினேன். I paid too'
பெண்ணை ஆக்கிரமிக்கும் எல்லாரும் சொல்லும் பண்டைகால தர்க்கம். ஆதித்தொழில் என்று சேர்த்துச் சொல்லாமல் விட்டுவிட்டான். இப்போது ரகு எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தான்.

'மணி 11 :45. Let me bury this topic with this day. ஒன்ன மாதிரி ஏதோ ஒரு குழந்தையத் தூக்கி, அதுக்கிட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுது, குழந்தையோட பல முகபாவங்களப் பாத்து, அதுல அமைதிதேடுற பக்குவம் எனக்குக் கெடையாது. பாவங்களைக் காதுகொடுத்து கேக்குற சாமியும் எங்கள்ல கெடையாது. ஆனா இன்னொரு மனுசன்ட தன் மனப்பாரத்தை வெளிப்படையா சொல்லும்போது மனசு லேசாகிடும்னு எனக்குப் பலமான நம்பிக்கை இருக்கு. இதுவரைக்கும் எங்க அண்ணன் செத்ததப் பத்தி ஒனக்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். 11 வருசத்துக்கு முன்ன அதக் கேட்ட நீ, இப்பவும் கேப்பங்கிற நம்பிக்கையில்தான் ஓங்கிட்ட சொன்னேன்'.
ரகுவின் அண்ணனின் ஞாபகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டக்கென்று இடதுபக்கம் திருப்பி சட்டைக்காலரில் தொடைத்துக் கொண்டேன். அவனும் அழுதுவிட்டான்.

தூங்கும்போது சொன்னான்.
'I feel completely free now. இந்த நொடியில இருந்து ஜெஸ்டினா வாசுதேவன்னு யாரையும் எனக்குத் தெரியாது. ஒருவேள என் மனைவிக்குத் தெரிய வந்தா, அவளச் சமாளிக்கிற பெரும்பொறுப்பு என் நண்பன் சேகருடையது'
'கன்ஃபார்மா அந்தப் பொண்ணுதான்னு தெரியாம நீயே ஒரு பிரச்சனைய உண்டாக்கிக்கிற. அதனால பல பயங்கள்; பல கேள்விகள்; எல்லாத்துக்கும் ஒங்கிட்டே தெளிவான பதில்களும் இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப கெல்வின் கார்டரோட தற்கொலைக் குறிப்புதான் ஞாபகம் வருது'
'என்னடா அது?'
'சரியான வாக்கியம் ஞாபகம் இல்ல. நெட்ல பாத்துக்க'
தேடினான்.
'ஸ்பெல்லிங்?'
'Kelvin Carter'
'ok'.

அதைப் படித்துவிட்டு வெள்ளைக்காகிதக் குறிப்புகள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டனவா என்று சரிபார்த்தான். ஒருவிசயம் விட்டுப்போய்விட்டதென என்னை எழுப்பினான்.
'அதான் பொதைக்கப் போறேன்னு சொன்னியே, திரும்ப ஏன்டா எழுப்புற?'
அவன் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தூங்கிப்போன அவ்விசயம், எனது எல்லா செல்களையும் எழுப்பிவிட்டு அதன்பிறகு தூங்கவிடவேயில்லை.
'அன்னைக்கி ஜெஸ்டினா கெளம்புறப்ப என்னோட மொபைல் நம்பர் கேட்டா. எனக்குப் பயம். எனக்கு மனப்பாடமா தெரிஞ்ச ஒன்னோட நம்பர சொல்லிட்டேன். தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவோம்ல. ஹா ஹா ஹா ஹா'
சரியான ஆள் என்று அவன் என்னைச் சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் உறைத்தது.

ரகு தூங்கிவிட்டான். இருட்டுக்குள் ஆந்தைபோல் விழித்திருந்தேன். ஜெஸ்டினா வாசுதேவன் என்ற பெயரை இரண்டாம் முறை நான் கேட்டிருந்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. அந்நிகழ்ச்சியுடன் ரகுவைச் சம்மந்தப்படுத்தி பார்க்கும் அளவிற்கு, அவ்வளவு நேரம் ரகு என்னிலிருந்து தூரப்பட்டுவிடவில்லை. இப்போது கட்டாயம் சந்தேகப்பட வேண்டிய தருணம்.

இரண்டு மாதங்களுக்கு முன் பின்னிரவு மூன்று மணிக்கு ஒரு பெண்குரல் என் செல்பேசியில் அழைத்தது.
'சார் இது ஒங்க செல்போனா இருந்தா தொடர்ந்து கேளுங்க. இல்ல கட் பண்ணிடுங்க'
நடுங்கும் குரல். மதுவாடை குரலிலேயே வீசியது.
'ஒங்களை எனக்குத் தெரியாது. ஒங்களுக்கு என்னெ தெரிய வாய்ப்பிருக்கு. ஐஸ்வர்யா, அர்ச்சனா, சுகப்ப்ரியா, ஜமுனா, ...... ஜெஸ்டினா வாசுதேவன், ..... இந்த 15 பேர்கள்ல ஏதாவது ஒரு பேர்ல நான் ஒங்கள சந்திச்சிருக்கலாம்.....'
எழுதிவைத்துப் படிக்கிறாள். அவள் சொல்ல வரும் விஷயம் சரியான ஆளுக்குத்தான் போய்ச் சேரவேண்டும் என்பதில், அவளின் வார்த்தைகள் படுகவனமாய் இருந்தன. தள்ளாடும் குரல் தள்ளாடாத நோக்கம். என்னிடமிருந்து ஒரு பதிலும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்கள் வாசித்துவிட்டு கட் செய்துவிட்டாள். யாரோ விளையாட்டுத்தனமாக wrong number என்று நினைத்து, வழக்கம் போல் Call Logஐச் சுத்தமாக Delete செய்துவிட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் விழித்தவுடன்தான் எனக்கு விசயத்தின் வீரியம் புரிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு மனநல ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொண்டேன்.
'அந்தப் பொண்ணு இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல கல்யாணம் செய்யப்போதாம் மேடம். அதுக்குள்ளே, தலையே வெடிச்சுரும் போல இருக்காம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல மொத பிளாட்பார்ம்ல நாளைக்கி நிக்குமாம். பணம் தரத் தயார்னு சொன்னிச்சு மேடம்'
அவளைக் கண்டுபிடித்து, கவுன்சிலிங் செய்தார்கள். அவள் கதையை மேடம் சொன்னபோது பயமாக இருந்தது.
'கப்பல் மாலுமிகள் தரைக்கு அடியில் விபச்சாரம் செய்த மண். பெயர் மறைத்து வாழும் ஜெஸ்டினா வாசுதேவன்கள், சமுதாயத்துல இயல்பா வாழணும்னு நெனச்சா அவர்களின் பழைய பெயர்களை ஞாபகப்படுத்த பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்றார் மேடம்.

தூங்கவே முடியாமல் அதிகாலை ஐந்து மணியளவில், ரகுவிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வாட்ச்மேன் தடுக்கவில்லை. 11 மணியளவில் ரகு போன் செய்தான்.
'ரகு, பச்சையா சொல்லணும்னா இடது மாருக்குக் கீழ மச்சம்; அப்பெண்டிசைடிஸ் தழும்பு. டீசண்டா சொல்லணும்னா ஒன்னோட எதிர் வீட்டுப் பொண்ணுக்குக் கண்டிப்பா வலது கண்ல மச்சம் இருக்காது'
ரகு பேசவேயில்லை.
கட் செய்துவிட்டு நேரில் வந்தான்.
'நீ எப்டிடா சேகர்?'
'இதுல என்னாடா ஆச்சர்யம் ரகு. நீ பிம்ப்ட (pimp) ஒரு 6000 ரூவா கொடுத்துட்டு, ரெண்டு பேர்டயும் என் நம்பர வேற கொடுத்துட்டு வந்திருக்க. அந்தக் காசு எங்க எங்கெல்லாம் போனுச்சோ? ஏதோ ஒரு மார்க்கெட்டுல வெடிக்கிற குண்டுல ஒன்னோட பங்களிப்பு கூட இருக்கலாம். ஒருவேள அந்தப் பொண்ணு இறந்துபோய் என்னையும் சந்தேகத்துல விசாரிச்சிருக்கலாம். இல்ல, வாடிக்கையாளரே இல்லாதப்ப என்னக் கேட்டிருக்கலாம். இப்புடி நெறைய options'
'சாரிடா. வார்த்தையால கொல்லாதடா'
'போடா வீட்டுக்குப் போ. ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒருத்தி இருப்பாளோன்னு அரைகொறை மனசோட வாழாத. இப்ப திருப்தியா? அப்படி ஒருத்தி இல்லவே இல்ல. சந்தோசமா வீட்டுக்குப் போடா'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'ஒனக்கிட்ட கோவப்படாம வேற யாருக்கிட்ட கோவப்பட முடியும்?'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'இல்ல நம்பு'
'எப்புடி நம்புறது?'
'ஆஊன்னா நெட்டுல தேடுவியே. போய்த் தேடு. அப்பத் தெரியும் எனக்குக் கோவம் இல்லன்னு. உலகத்திலேயே சின்ன உயில் என்னன்னு போய்த் தேடு'
போய்விட்டான்.

ரகுவின் கதை போல், சமூகத்தில் இதுபோன்ற பல பிரச்சனைகள் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் முடிந்துவிடுவதில்லை. ஒருவேளை ஜெஸ்டினா வாசுதேவன் என்றொருத்தியை ரகுவின் மனதில் இருந்து நீக்கமுடியாமல் போயிருந்தால், எதிர் வீட்டுப் பெண் ரகுவால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஜெஸ்டினா விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தால், அவளும் நானும் கொல்லப்படலாம். ரகுவும் தற்கொலை செய்து கொள்ளலாம். மறுநாள் தினசரியில் என்னையும் ரகுவின் மனைவியையும் கள்ளக்காதலர்களாகச் சித்தரித்து, ரகுவின் திருமணத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் கருப்பு வெள்ளையில் மூன்றாம் பக்கத்தில் வரலாம். மீனவர்கள் தமிழகத்திலும் தமிழர்கள் ஈழத்திலும் கொல்லப்படுவது போல வாடிக்கையாகிப் போன இதுபோன்ற செய்திகளில் சுவாரசியம் காட்டாமல், சப்புக்கொட்டிவிட்டு ஜெஸ்டினா வாசுதேவன்களை உண்டாக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் சமூகம் மும்மரமாக இருக்கலாம்.

ரகுவிடம் இருந்து குறுந்தகவல். உலகின் மிகச் சிறிய உயிலைக் கண்டுபிடித்து விட்டான்.

All to wife - எல்லாம் மனைவிக்கே!

- ஞானசேகர்

Tuesday, March 23, 2010

அந்த 52 வினாடிகள்

முனியாண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்

முனியாண்டி எவரென்பதும்
இந்தியா எதுவென்பதும்
யாருக்கும் தெரியாது.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)


அலறும் அலைபேசியை
அவசரமாக அடக்கி
அழப்போகும் குழந்தையை
அதட்டி வாய்மூடி
ஒட்டிவந்த காதலைத்
தட்டி உதறிவிட்டு
ஒத்திசைக்காத அடுத்தவனை
அஃறிணை வசைசெய்து
இருட்டறையில் அனிச்சையாய்
விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்
தேசபக்தியை நிரூபிக்க
ஒரு சந்தர்ப்பம்!

சிரமசைத்து
கரமாட்டி
கண்மூடி
அமர்ந்து
நடந்து
பாடி
இசைத்து
நகைத்து
திரை நிழலாடுபவர்க்கெல்லாம்
தொழில் நிமித்தம்
ஒரு சந்திப்பு!

- ஞானசேகர்

Tuesday, March 09, 2010

ஆதிசேசன் படுக்கை


பணக்கார சாமி
விஐபி வரிசைகளில்
உண்டியல் சேர்கிறது
முழங்கு முரசுடைச் செல்வம்!

யார் பெற்ற தெங்கம்பழம்
இந்த உள்ளூர் சாமிகள்?

- ஞானசேகர்

Sunday, February 14, 2010

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது

'மரத்துக்கு அடியில் யாரும் இல்லாத போதுதான் தென்னை மட்டையைக்கூட கடவுள் கீழே விழவைக்கிறார்'. இப்படி ஒரு பழமொழி உண்டு. தென்னைமட்டைக்கே இப்படி ஒரு நம்பிக்கை என்றால், அண்டவெளியில் இருந்து திடீரென விழும் விண்கற்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சகமனிதன் உண்டாக்கிய அணுவாயுதங்களுக்கிடையே வாழும் மக்களுக்கு, வலிக்காமல் சாகடிக்கத் தெரிந்த இயற்கையின் இந்த யுத்திகள் எல்லாம் சொற்பம்! அப்படியொரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான ஏரி ஒன்று, மகாராஷ்டிராவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணிக்கத் தயாரானேன். புனே (Pune) - அவுரங்காபாத் (Aurangabad) - ஜால்னா (Jalna) - லோனார் (Lonar) கிராமம் - Lonar crater lake.

பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏரியைச் சென்றடைய பெயர்ப்பலகைகள் இருந்தன. விண்கல் உண்டாக்கிய பள்ளத்தின் மாபெரும் கரையின், உடைந்தோ அல்லது அரிக்கப்பட்டோ சிதிலமடைந்திருந்த ஒரு பகுதியில் பெயர்ப்பலகைகள் கொண்டுபோய்ச் சேர்த்தன. சிவன், ஹனுமான், பிள்ளையார் உருவம் தாங்கிய சில இந்துமதக் கோவில்கள் இருந்தன. அதற்கு அடுத்தபடியாக என்ன மதம் என்று ஊகிக்க முடியாதபடி சிலமடைந்திருத்த இன்னொரு கோவில். சிவன் கோவிலின் நேரெதிர்புறமுள்ள மலையிலிருந்து எடுக்கப்பட்ட அக்கோவிலின் புகைப்படம்:

சிவன் கோவில் வாசலில் ஒரு நீருற்று இருந்தது. உள்ளூர்மக்கள் சிலபேர் அதிலிருத்து குடிநீர் எடுத்துச் சென்றனர். அவ்விடத்திற்கு வரும் மக்கள் எல்லாரும் அந்நீரில் குளித்தனர். அந்நீரில் குளிப்பதற்காகவே மக்கள் பலபேர் வந்தனர். குளிப்பவர்களின் ஈர அங்கங்களைப் பார்ப்பதற்காக சிலபேர் உயரமான இடங்களில் நின்றிருந்தனர். நீரூற்றின் பிறப்பிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ஓர் ஆராய்ச்சியாளர் அதனுள் நுழைத்த கம்பி முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது எனவும் விசாரித்ததில் தெரிந்தன. சிவன் கோவிலுக்கு இடமிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்:

சிவன் கோவிலில் இருந்து ஏரியின் புகைப்படம்:

சிவன் கோவிலிலிருந்து நீரின் பாதையில் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த நீருடன், ஒரு குகை நீரும், இன்னொரு சிறுகோவிலிலிருந்து வடியும் நீரும் சேர்ந்து ஒரே நீராக ஏரியை நோக்கிப் போயின. கரடுமுரடான பாதையையும், மரஞ்செடிகளையும், விளைநிலங்களையும் தாண்டி ஏரியை அடைந்தோம். நட்சத்திரங்களில் இருந்து வந்த நீரென மக்கள் நம்பும் அந்த ஏரி, கரைகளில் பாசிபடர்ந்திருந்தது. ஒரு பேரரக்கனின் இரத்தத்தை நீராகவும், சதையை உப்பாகவும் கொண்டிருப்பதாகப் சொல்லப்படும் அந்த ஏரி, பல பறவைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி, விண்கல் உண்டாக்கிய பெருங்கரைவரை முடிந்தவரையில் அகழப்பட்டிருந்த விவசாயநிலங்கள்!

ஏரிக்கரையோரம் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். விவசாய நிலங்களின் மொத்த பரப்பு 25 ஏக்கர். 10 பேர்களுக்குச் சொந்தமான நிலங்கள். அவர்கள் சொன்ன ஆச்சரியமான விசயம் என்னவென்றால், சிவன் கோவில் நீருடன் சேர்ந்துவரும் மொத்த தண்ணீரையும் 10 நாட்களுக்கு ஒருவர் என்றமுறையில் விவசாயத்திற்கு உபயோகித்துவிடுவார்களாம். அப்படியென்றால் ஏரித்தண்ணீர்? விவசாய நிலங்களின் கசிவுநீர் (Seepage water) ஏரியை அடைகிறது என்பது எனது கருத்து. ஏரிநீர் மனித உபயோகங்களுக்கு உகர்ந்ததல்ல எனவும், சில தோல்வியாதிகள் குணமடைய சிலபேர் அதில் குளிப்பதாகவும் சொன்னார்கள். நீரில் மிதக்கும் சில கற்கள் ஏரிக்கரையோரம் உண்டென்றும், அவை நட்சத்திரங்களில் இருந்து வந்ததென்றும் சொன்னார்கள்.


இணையத்தில் கிடைத்த சில அறிவியல் பூர்வமான தகவல்கள் உங்களின் வாசிப்பிற்கு:

1. உலகின் முன்றாவது பெரிய விண்கல் பள்ளம் (crater).

2. 90000 km/h வேகத்தில் பயணித்த 2 மில்லியன் டன் நிறையும் 60மீட்டர் அகலமுள்ள விண்கல் மோதி, பாசால்ட் பாறைகளின் மேல் உண்டான ஒரே ஏரி.

3. வயது 52000க்கு மேல்.

4. இன்றைய தேதியில் செயற்கையாக உருவாக்க 6 மெகா டன் அணுகுண்டு தேவை.

5. பள்ளத்தின் விட்டம் 1.8 km. பள்ளத்தின் வாயிற்குக்கீழ் 137 மீட்டர் ஆழத்திற்குக்கீழ் இருக்கும் ஏரியின் சராசரி விட்டம் 1.2 km. ஏரியின் ஆழம் 150 மீட்டர்.

6. ஏரியின் மையநீர் காரத்தன்மையும் (ph 11), அதைச் சுற்றி நன்னீரும் (ph 7) என இரண்டு மாறுபட்ட அடுக்குகள் உண்டு. இவ்விரண்டு அடுக்களிலும் வாழும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.

7. ஏரிக்கு நீர் தரும் சிவன்கோவில் ஊற்றுக் கூட்டணிகளும், மழைநீரும் நன்நீர் உடையவை. மையநீரீன் காரத்தன்மையின் ஆதிமூலம் இதுவரை மர்மம்.

8. பள்ளத்தின் கரையின் சாய்வு (slope) 75 டிகிரி.

9. பள்ளத்தின் சரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்குத் தேக்கு, புளியம் என ஒரு குறிப்பிட்ட மரங்களின் வரிசை இருக்குமெனப் படித்தேன். தேக்கு மரங்களை வெட்டுபவர்களைப் பார்த்தேன். ஆனால் மரங்களின் அப்படியொரு ஒழுங்கு வரிசையைக் காணமுடியவில்லை.

10. ஒரேயொருமுறை இவ்வேரி வற்றியதாகவும் மின்னும் படிகங்கள் தென்பட்டதாகவும் தகவல் உண்டு.

தாய்நீரில் சோப்பென்ற நச்சு கலத்தல், காக்கும் வனம் அழிக்கப்படுதல், விவசாயம் என்ற பெயரில் முகம் கிழிக்கப்படுதல் என்று கொல்லப்படும் இந்த ஏரியைக் குரங்கு, பாம்பு, மொழி, தூரம் எல்லாத் தடைகளையும் தாண்டிப் பார்த்துவிட்டேன்.

'52000க்கு முன் ஓர் 26' என்ற அற்ப சந்தோசம் தேடும் சொற்ப ஆயுள் கொண்ட சாதாரண மனிதன்!

- ஞானசேகர்