புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, February 22, 2012

இல்லையேல் சாதல்

காதலர்களிடம் கேட்டார்க‌ள்:

கொடிதினும் கொடிதெது?
மரணம்
பிரித்து விடுவதால்.

அதனினும் கொடிது?
கட்டணக் கழிவறை
காசு வாங்கிப் பிரித்து விடுவதால்.

- ஞானசேகர்

Sunday, February 19, 2012

எல்லோர்க்கும் பெய்யும் மழை

பிரசாத வரிசை நிழலில்
சமைத்துக் கொண்டிருக்கிறான்
பிளாட்பாரவாசி.

- ஞானசேகர்

Friday, February 10, 2012

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்

அழகான பெண்கள்
குழுமி இருந்த‌
புகைப்படத்தில்
முந்திக் கொண்டு
அவசர அவசரமாக‌
அறிமுகப் படுத்துகிறான்
நான் பார்த்திராத‌
அவன் புது மனைவியை.

‍- ஞானசேகர்

இரகசிய உருவகம்

ஒரு முறை
நான் ஓடையிடம்
கடலைப் பற்றிச் சொன்னேன்.
அது என்னை
ஒரு கற்பனாவாதியாக
நினைத்துக் கொண்டது.
ஒருமுறை
நான் கடலிடம்
ஓடையைப் பற்றிச் சொன்னேன்
அது என்னை
ஒரு குறுகிய புத்திக்காரனாக
நினைத்துக் கொண்டது.
- கலீல் கிப்ரான்

இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்

சில சமயங்களில்
உள்ளது உள்ளபடியே சொல்லப் போய்
ஓர் இரகசியத்திற்கான மரியாதை
சிறிதும் இன்றி
எளிதாக மறுக்கப்பட்டு விடுகின்றன‌

சில சமயங்களில்
இதெல்லாம் இரகசியமே இல்லை என்று
இரகசியங்களுக்கான எனது எல்லைக் கோடுகள்
மறு பரிசீலனை செய்யப்படுகின்றன‌

சில சமயங்களில்
தக்க காலத்தில் சொல்லப் படவில்லை என‌
மன்ற நடுவில் என்னைக் கூண்டில் ஏற்றி
விவாதிக்கப் படுகின்றன‌

சில சமயங்களில்
இரகசியங்களுக்கான மரியாதையுடன்
அங்கீகரிக்கப்பட்ட‌ பின்னும்
சாட்சி சொல்ல நான் அழைக்கையில்
மறுதலிக்கப் படுகின்றன‌


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


அவற்றைப் பத்திரப் படுத்தும்
இன்னோர் இடத்தைத் தேடுவதை விட‌
அவற்றைச் சொல்வதற்கான‌
சொற்களின் தேடுதலில்
அதிக கவனம் செலுத்துகிறேன்
அதிக காலம் செலுத்துகிறேன்

பிரத்யேகச் சொற்களில்
இரகசியங்களை உருவகப் படுத்தும்போது
உவமேயத்தைப் பல உவமானங்களால்
நன்கு சுற்றிப் பத்திரப் படுத்துகிறேன்

எனது உவமேயத்தைப் போலவே
எனது உவமானங்களையும்
இரகசியங்களால் அலங்காரப் படுத்துகிறேன்

அவை ஒவ்வொன்றாய்
அவிழ்க்கப் படும்போது
உவமேயத்தின் மர்மத்தைக் கூட்டுவதில்
மிகுந்த கவனமாய் இருக்கிறேன்

கேட்கும் காதுகளின்
நம்பகத்தன்மைக்கு ஏற்ப‌
எனது உவமானங்களையும்
மாற்றி அமைக்கிறேன்

இரத்தம் சிவப்பானாலும்
மாற்றுகையில் தேவைப்படும்
பிரிவைப் போல்
பிறத்தியாரின் உவமானங்கள் குறித்தான‌
மறைநூல் போதனைகளை
ஆராய்கிறான் ஆத்திகன்

இல்லாத கடவுள் போல்
என் உவமானத்திலும்
உவமேயத்தின் இருப்பைச்
சந்தேகிக்கிறான் நாத்திகன்

பிரம்மச்சாரி அறையின்
விந்துக் கறை போல்
இலைமறை காய்கள் அதிகம்
எதிர்பார்க்கிறான் இல‌க்கிய‌வாதி

விவிலியம் கீதை குரான்
எல்லாமே ஒன்றுதான்
அவை போல் எனது உவமானங்களும்
என்கிறான் படிக்காதவன்

தேர்வுக்கு இல்லாத பகுதிகள் போல்
குறித்துக் கொள்ள மறுக்கிறான் படிப்பாளி

செல்லாக் காசு போல்
விட்டெறிகிறான் காரியவாதி


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


உவமானங்களால்
சுற்றிச் சுற்றியே
பல சமயங்களில்
உவமேயங்களை
மறந்து விடுகிறேன்

ஆடையென உவமான‌ங்களை
அவிழ்த்துக் கொண்டு
என்னுடனேயே புதைக்கிறது
உவமேயங்களை உலகம்

உவமேயங்களைப்
புரிந்து கொள்ளாமல்
உவமானங்களில்
பூரித்துப் போகும் உலகம்
ஆடையற்றுத் தெரிகிறது
சவக்குழியில் இருந்து பார்க்கையில்!

- ஞானசேகர்

Sunday, February 05, 2012

மிகப்பெரிய குடியரசு நாடு

வெள்ளையனிடம் இருந்து வாங்கி
கொள்ளையனிடம் கொடுத்து விட்டோம்.
‍- யாரோ


(குடியரசு தினத்தன்று கண்ணில்பட்ட சில காட்சிகளின் பாதிப்பில் எழுதியது)

வேற்றுமையில் ஒற்றுமை என்பது
மதுவிலக்கு நாட்களுக்கான‌
மது தக்க வைத்தல்.

தேசப்பற்று என்பது
ஆட்சி விமர்சித்து
வரிசையில் முந்தல்.

தியாகம் என்பது
யானை விலைபோகும் கழுதையின்
குதிரைத் தள்ளுபடி வரிசையில் நிற்றல்.

சுதந்திரம் என்பது
விளம்பரப் பலகை
சாலையில் வைத்தல்.

சகோதரத்துவம் என்பது
நிதியிட்டவர்கள் பெயர்க‌ளுடன்
பட்டம் சூட்டி புகைப்படமிடல்.

ச‌ம‌த்துவ‌ம் என்ப‌து
மூவ‌ர்ண‌க் கொடியை அறுச‌ம‌க் கூறுக‌ளாக‌
அலைய‌டிக்க‌ வைத்த‌ல்.

நீதி என்பது
இரண்டாம் ஐந்தாம் அலைகளில்
அசோகச் சக்கரமிடல்.

சுயராச்சியம் என்பது
மூன்றாம் நான்காம் அலைக‌ளுக்கு இடையில்
க‌ட‌வுள் ப‌ட‌மிட‌ல்.

ச‌ம‌ய‌ச்சார்பின்மை என்பது
கடவுள் முகத்தில்
தலைவன் முகம் புதைத்தல்.

குடியரசு என்பது
ஆகஸ்ட் 15 ஜனவரி 26
இரண்டில் ஏதோ ஒன்று எனல்.

- ஞானசேகர்

Friday, January 13, 2012

26.12.2004 - ஆழிப்பேரலை

(5.5.2006 அன்று நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருக்காக எழுதியது)

சாவுக்குப் பயப்படாமல்
வாழ்ந்தவனின் வாழ்க்கையைச்
சாகடித்துப் போன
இயற்கையின் படுகொலை!

சாவுக்குப் பயந்தே
வாழ்ந்தவனின் வாழ்க்கையை
வாழவைத்துப் போன
இயற்கையின் தடுப்பு மருந்து!

சாவுக்கும் வேலையில்லை
கலியுலகான் வாழ்க்கையைச்
சந்தோஷங்களில் புதைத்துப்போன
இயற்கையின் எதார்த்தம்!

சாவுக்குக் காலமில்லை
கவலையற்றவன் வாழ்க்கையை
சற்றே நிறுத்தி நகரவைத்த
இயற்கையின் சிறுவிபத்து!

சாவுக்குத் தேதிகுறித்து
முடிவறியா வாழ்க்கையைக்
கூட்டிக் கழித்துக் கட்டம் போட்ட
இயற்கையின் இருபத்தியாறு!

சாவுக்குத் தயாராகும்
மூன்றாம் கோளின் வாழ்க்கையை
அடியில் ஆட்டிவைத்த
இயற்கையின் அறுவைச்சிகிச்சை!

- ஞானசேகர்

Wednesday, December 21, 2011

அச்ச் சச்ச்சோ

சற்றே
நின்று துடிக்கும்
இதய‌ம்
தும்மலுக்கும்
ஆம்புலன்ஸ் சத்தத்திற்கும்.

-‍ ஞானசேகர்

அடக்கவிலை

திருச்சியில் இருந்து
விக்கிரவாண்டி வருவதற்குள்
இரண்டு ரூபாய்
விலையேறி விட்டது
மூத்திரம்.

‍- ஞானசேகர்

Wednesday, December 07, 2011

க'பாலம்'

மேலெல்லாம் ஓடும்
விழித்தே உறங்கும்
நீரிலே மிதக்கும்
சமிக்ஞை செய்யும்
கவசங் கேட்கும்
உயிர்ப் பிடிக்கும்

பக்க வாதஞ் செய்யும்
கடப்பதற்(கு) கப்பங் கேட்கும்
வேகம் தடை செய்யும்
அடைத்து நிறுத்தும்
ஓடினால் பள்ளமாகும்
ஓடாவிட்டால் குள்ளமாகும்

மூலையில் முடங்கும்
மூளையன்ன நம்மூர்ச் சாலை!

- ஞானசேகர்

சுவர்க்கடிகாரம்

நீ
பிறந்தகாலமே
எப்போதும்
நிகழ்காலமாய்.

- ஞானசேகர்