புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, March 23, 2010

அந்த 52 வினாடிகள்

முனியாண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்

முனியாண்டி எவரென்பதும்
இந்தியா எதுவென்பதும்
யாருக்கும் தெரியாது.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)


அலறும் அலைபேசியை
அவசரமாக அடக்கி
அழப்போகும் குழந்தையை
அதட்டி வாய்மூடி
ஒட்டிவந்த காதலைத்
தட்டி உதறிவிட்டு
ஒத்திசைக்காத அடுத்தவனை
அஃறிணை வசைசெய்து
இருட்டறையில் அனிச்சையாய்
விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்
தேசபக்தியை நிரூபிக்க
ஒரு சந்தர்ப்பம்!

சிரமசைத்து
கரமாட்டி
கண்மூடி
அமர்ந்து
நடந்து
பாடி
இசைத்து
நகைத்து
திரை நிழலாடுபவர்க்கெல்லாம்
தொழில் நிமித்தம்
ஒரு சந்திப்பு!

- ஞானசேகர்

Tuesday, March 09, 2010

ஆதிசேசன் படுக்கை


பணக்கார சாமி
விஐபி வரிசைகளில்
உண்டியல் சேர்கிறது
முழங்கு முரசுடைச் செல்வம்!

யார் பெற்ற தெங்கம்பழம்
இந்த உள்ளூர் சாமிகள்?

- ஞானசேகர்

Sunday, February 14, 2010

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது

'மரத்துக்கு அடியில் யாரும் இல்லாத போதுதான் தென்னை மட்டையைக்கூட கடவுள் கீழே விழவைக்கிறார்'. இப்படி ஒரு பழமொழி உண்டு. தென்னைமட்டைக்கே இப்படி ஒரு நம்பிக்கை என்றால், அண்டவெளியில் இருந்து திடீரென விழும் விண்கற்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சகமனிதன் உண்டாக்கிய அணுவாயுதங்களுக்கிடையே வாழும் மக்களுக்கு, வலிக்காமல் சாகடிக்கத் தெரிந்த இயற்கையின் இந்த யுத்திகள் எல்லாம் சொற்பம்! அப்படியொரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான ஏரி ஒன்று, மகாராஷ்டிராவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணிக்கத் தயாரானேன். புனே (Pune) - அவுரங்காபாத் (Aurangabad) - ஜால்னா (Jalna) - லோனார் (Lonar) கிராமம் - Lonar crater lake.

பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏரியைச் சென்றடைய பெயர்ப்பலகைகள் இருந்தன. விண்கல் உண்டாக்கிய பள்ளத்தின் மாபெரும் கரையின், உடைந்தோ அல்லது அரிக்கப்பட்டோ சிதிலமடைந்திருந்த ஒரு பகுதியில் பெயர்ப்பலகைகள் கொண்டுபோய்ச் சேர்த்தன. சிவன், ஹனுமான், பிள்ளையார் உருவம் தாங்கிய சில இந்துமதக் கோவில்கள் இருந்தன. அதற்கு அடுத்தபடியாக என்ன மதம் என்று ஊகிக்க முடியாதபடி சிலமடைந்திருத்த இன்னொரு கோவில். சிவன் கோவிலின் நேரெதிர்புறமுள்ள மலையிலிருந்து எடுக்கப்பட்ட அக்கோவிலின் புகைப்படம்:

சிவன் கோவில் வாசலில் ஒரு நீருற்று இருந்தது. உள்ளூர்மக்கள் சிலபேர் அதிலிருத்து குடிநீர் எடுத்துச் சென்றனர். அவ்விடத்திற்கு வரும் மக்கள் எல்லாரும் அந்நீரில் குளித்தனர். அந்நீரில் குளிப்பதற்காகவே மக்கள் பலபேர் வந்தனர். குளிப்பவர்களின் ஈர அங்கங்களைப் பார்ப்பதற்காக சிலபேர் உயரமான இடங்களில் நின்றிருந்தனர். நீரூற்றின் பிறப்பிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ஓர் ஆராய்ச்சியாளர் அதனுள் நுழைத்த கம்பி முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது எனவும் விசாரித்ததில் தெரிந்தன. சிவன் கோவிலுக்கு இடமிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்:

சிவன் கோவிலில் இருந்து ஏரியின் புகைப்படம்:

சிவன் கோவிலிலிருந்து நீரின் பாதையில் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த நீருடன், ஒரு குகை நீரும், இன்னொரு சிறுகோவிலிலிருந்து வடியும் நீரும் சேர்ந்து ஒரே நீராக ஏரியை நோக்கிப் போயின. கரடுமுரடான பாதையையும், மரஞ்செடிகளையும், விளைநிலங்களையும் தாண்டி ஏரியை அடைந்தோம். நட்சத்திரங்களில் இருந்து வந்த நீரென மக்கள் நம்பும் அந்த ஏரி, கரைகளில் பாசிபடர்ந்திருந்தது. ஒரு பேரரக்கனின் இரத்தத்தை நீராகவும், சதையை உப்பாகவும் கொண்டிருப்பதாகப் சொல்லப்படும் அந்த ஏரி, பல பறவைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி, விண்கல் உண்டாக்கிய பெருங்கரைவரை முடிந்தவரையில் அகழப்பட்டிருந்த விவசாயநிலங்கள்!

ஏரிக்கரையோரம் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். விவசாய நிலங்களின் மொத்த பரப்பு 25 ஏக்கர். 10 பேர்களுக்குச் சொந்தமான நிலங்கள். அவர்கள் சொன்ன ஆச்சரியமான விசயம் என்னவென்றால், சிவன் கோவில் நீருடன் சேர்ந்துவரும் மொத்த தண்ணீரையும் 10 நாட்களுக்கு ஒருவர் என்றமுறையில் விவசாயத்திற்கு உபயோகித்துவிடுவார்களாம். அப்படியென்றால் ஏரித்தண்ணீர்? விவசாய நிலங்களின் கசிவுநீர் (Seepage water) ஏரியை அடைகிறது என்பது எனது கருத்து. ஏரிநீர் மனித உபயோகங்களுக்கு உகர்ந்ததல்ல எனவும், சில தோல்வியாதிகள் குணமடைய சிலபேர் அதில் குளிப்பதாகவும் சொன்னார்கள். நீரில் மிதக்கும் சில கற்கள் ஏரிக்கரையோரம் உண்டென்றும், அவை நட்சத்திரங்களில் இருந்து வந்ததென்றும் சொன்னார்கள்.


இணையத்தில் கிடைத்த சில அறிவியல் பூர்வமான தகவல்கள் உங்களின் வாசிப்பிற்கு:

1. உலகின் முன்றாவது பெரிய விண்கல் பள்ளம் (crater).

2. 90000 km/h வேகத்தில் பயணித்த 2 மில்லியன் டன் நிறையும் 60மீட்டர் அகலமுள்ள விண்கல் மோதி, பாசால்ட் பாறைகளின் மேல் உண்டான ஒரே ஏரி.

3. வயது 52000க்கு மேல்.

4. இன்றைய தேதியில் செயற்கையாக உருவாக்க 6 மெகா டன் அணுகுண்டு தேவை.

5. பள்ளத்தின் விட்டம் 1.8 km. பள்ளத்தின் வாயிற்குக்கீழ் 137 மீட்டர் ஆழத்திற்குக்கீழ் இருக்கும் ஏரியின் சராசரி விட்டம் 1.2 km. ஏரியின் ஆழம் 150 மீட்டர்.

6. ஏரியின் மையநீர் காரத்தன்மையும் (ph 11), அதைச் சுற்றி நன்னீரும் (ph 7) என இரண்டு மாறுபட்ட அடுக்குகள் உண்டு. இவ்விரண்டு அடுக்களிலும் வாழும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.

7. ஏரிக்கு நீர் தரும் சிவன்கோவில் ஊற்றுக் கூட்டணிகளும், மழைநீரும் நன்நீர் உடையவை. மையநீரீன் காரத்தன்மையின் ஆதிமூலம் இதுவரை மர்மம்.

8. பள்ளத்தின் கரையின் சாய்வு (slope) 75 டிகிரி.

9. பள்ளத்தின் சரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்குத் தேக்கு, புளியம் என ஒரு குறிப்பிட்ட மரங்களின் வரிசை இருக்குமெனப் படித்தேன். தேக்கு மரங்களை வெட்டுபவர்களைப் பார்த்தேன். ஆனால் மரங்களின் அப்படியொரு ஒழுங்கு வரிசையைக் காணமுடியவில்லை.

10. ஒரேயொருமுறை இவ்வேரி வற்றியதாகவும் மின்னும் படிகங்கள் தென்பட்டதாகவும் தகவல் உண்டு.

தாய்நீரில் சோப்பென்ற நச்சு கலத்தல், காக்கும் வனம் அழிக்கப்படுதல், விவசாயம் என்ற பெயரில் முகம் கிழிக்கப்படுதல் என்று கொல்லப்படும் இந்த ஏரியைக் குரங்கு, பாம்பு, மொழி, தூரம் எல்லாத் தடைகளையும் தாண்டிப் பார்த்துவிட்டேன்.

'52000க்கு முன் ஓர் 26' என்ற அற்ப சந்தோசம் தேடும் சொற்ப ஆயுள் கொண்ட சாதாரண மனிதன்!

- ஞானசேகர்

Wednesday, January 13, 2010

வட்டத்துள் குவியங்கள்

(எழுமகளிர், ஆறறிவு என்ற எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படாத இருவரின் தீண்டப்படாத எல்லை பற்றிய சிறுகுறிப்பிது)

இவ்வுலகில்
நீ யாரோ ஒருத்தி.
யாரோ ஒருவனுக்கு
நீதான் உலகம்.
- யாரோ


புலம் பெயரும்
ஓர் அகதியின் வலியுடன்
ஈன்று புறந்தள்ளி
தலைக்கடன் முடித்ததில்
தவறேது மில்லையென
அம்மா சொல்வாள்.

உரக்குழியில் தலைபுகுத்தி
கால்பிடித்துத் தலைகீழாக்கி
இடவலம் சுற்றிச்சுற்றி
ஒரு குயவனின் நேர்த்தியுடன்
கபாலம் குழைத்ததில்
சறுக்கலெல்லாம் சாமானியம்
சாமிமேல சத்தியம்
சட்டையில்லாப் பாட்டி சொல்வாள்.

வழியில் நின்ன முனி
கவட்டிக்குள்ள நடந்ததால
வயுத்துப் புள்ளய வாட்டிருச்சு
அகலாது அஞ்சு வருசம்;
அப்பிக மாசம் அம்மாவாச
ஐநூத்தியொண்ணு பரிகாரம்;
மின்சாரம் தொட்ட அதிர்வோடு
பவுர்ணமிபொட்டு சோசியக்காரி சொன்னாள்.

நரம்புக்குள் சிக்கல்
மூளைக்குள் மறியல்
உலகமே நிர்வாணம்
சாகும்வரை குழந்தை
சங்கிலிக்குள் வட்டம்;
உணர்ச்சியின்றி உண்மையை
இழவு சொல்லும் தொனியுடன்
பட்டணத்து டாக்டர் சொன்னார்.

என் அம்மணத்து உரோமங்கள்
மனிதரெல்லாம் விமர்சிக்க,
என்னுறுப்பின் மேல்தோல் வரை
சோப்புபோட்டு சுத்தம் செய்து,
பொட்டுவைத்து கண்ணாடிகாட்டி
சாமி ஒருத்தன் இருக்கானென
கதை அக்கா சொல்வாள்.

ஊனப்பட்ட இயற்கை போல்
பருவம் மறைத்து
பட்டம்விட்ட புத்தன் போல்
ஆசை விடுத்து
நூலைவிட்ட பட்டம் போல்
காலம் மறுத்து
என் சங்கிலியில்
அக்காவையும் கட்டிப்போடும்
விதியின் பேடித்தனம்
நிறுத்தும்படி யார் சொல்வார்?

- ஞானசேகர்
(பெண் பிரம்மச்சாரிகளுக்குச் சமர்ப்பணம்)

Sunday, October 04, 2009

வையத் தலைமை கொள்



'வன்முறை எதிர்ப்பு தினம்' என்று பிறந்தநாளை உலகமே மரியாதைப்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவனைத் தந்த இந்திய நாட்டின் முதல் தேசியக்கட்சி உடைந்துபோன புனே (Pune) நகரில் இருந்து இதை எழுதுகிறேன். பாரதம், இந்திய யூனியன், இந்தியா, ஹிந்துஸ்தான் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் புரியுமென நினைக்கிறேன். இன்றைய இந்தியா என்ற நாட்டைப் புவியியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால், பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட்டி இந்திய யூனியனில் இருந்து கழிக்கக் கிடைப்பது. இதே சமன்பாட்டைக் கழித்தல்கள் மட்டுமே வரும்படி எழுதி சிரில் ராட்கிளிப் அவர்கள் கிழித்த கோடுதான் இன்றையதேதிவரை உலகின் மிகப்பெரிய Genocide என்று கருதப்படுகிறது.

காந்தியையும், நேருவையும், அஹிம்சையையும் சாடுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு அச்சமன்பாடு அமையக் காரணமான நூற்றாண்டுக் காரணிகள் அத்துப்பிடியாகக்கூட இருக்கலாம். ஏனெனில் ஓர் உண்மை நாத்திகன், ஆத்திகனைவிட கடவுளை அதிகம் தெரிந்திருக்க் வேண்டும். சரி என் தலைப்புக்கு வருகிறேன். உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி. இந்திய யூனியனில் இருந்திராத ஒரு பகுதி இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. 22 ஏக்கர் தீவு. கேள்விப்பட்டதும் பயணத்திட்டம் தயாரானாது. ரோஜாக்களின் நகரம் புனேயில் இருந்து, இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக - தென்னிந்தியாவில் ஈரப்பதமான லோனாவாலா (Lonavala) வழியாக (எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி புத்தகத்தில் ஒரு கதையுண்டு), எனது ஒரு கவிதைக்கு MH - 06 என்ற தலைப்பு தந்த பென் (Pen) என்ற ஊர் வழியாக அலிபாக் (Alibaug) நகரம் வரை பேருந்து பயணம். அங்கிருந்து ராஜ்புரி (Rajpuri) கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ. பாய்மரப்படகில் மூன்று கிலோ மீட்டர் கடலுக்குள் போனால், ஜன்ஜிரா கோட்டை (Janjira Fort). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தியர்களால் நுழையமுடிந்த இடம்.

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் ரத்னகிரி (Ratnagiri) என்ற மராட்டிய மாவட்டத்தைப் பற்றி செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அதன் வடஎல்லையிலுள்ள ராய்காட் (Raigad) மாவட்டத்தின் முருடு (Murud) என்ற கிராம எல்லைக்குட்பட்டது இக்கோட்டை. மேற்படி தகவல்களுக்கு இணையம். மும்பையின் Gate Way of Indiaல் இருந்து அலிபாக் அருகாமை வரை கடல்வழியாககூட செல்லலாம்.


ஜன்ஜிராவை அடைய அரபிக்கடலின்மேல் காற்றின்விசையில் செல்லும் பாய்மரப்படகுகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மராத்தி கலந்த ஹிந்தி பேசும் கெய்டைத் தவிர்த்து, கோட்டையின் இடுக்குகளெல்லாம் சுற்றி சமாதிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சிதிலமடைந்த சுவர்களையும் சுற்றிப் பார்த்தேன். கோட்டைக்கு நடுவில் 20 மீட்டர் விட்டத்தில் கடலின் உப்பு நீருக்கு நடுவே ஒரு நன்னீர் ஏரியும் இருக்கிறது. இன்னமும் தண்ணீர் இனிப்பாக இருக்கிறது என கெய்டு சொல்ல ஒவ்வொருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் தோற்றத்தில் இருந்த சிலர் அதை நம்பாமல் நின்றுகொண்டிருந்தனர். நிலத்தடி நீர் தத்துவம் தெரிந்திருந்தால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமில்லாமல் மூன்று பக்கம் கடலுக்கு நடுவில் தனுஷ்கோடி ஊர்மக்களோடு நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருடன் கையாலேயே குழிதோண்டி நல்ல தண்ணீர் குடித்த நான் ஆச்சரியப்படவில்லை.

காற்றின் சீற்றத்திற்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்கி வயிறு குலுங்க பாய்மரப்படகு சவாரி நல்ல அனுபவமாக இருந்தாலும், தக்க பாதுகாப்பு இல்லை. கோட்டைக்குள்ளும் ஆங்கிலத்தில் பேசும் சரியான கெய்டுகள் இல்லை. ASIம், சுற்றுலாத்துறையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், கோட்டைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் நூற்றாண்டுகள் பின்னால்போய், தண்ணீருக்குள் இருந்துகொண்டு மிகப்பெரிய சாம்ராச்சியங்களை மிரட்டிப் பார்த்த தைரியத்தைத் தலைகோதும் உப்புக் காற்றுடன் உணரமுடியும்.

அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தபோது சத்தம்போட்டு சொன்னேன்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்".

Incredible India!

- ஞானசேகர்

Friday, September 25, 2009

கோழை

(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)

சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட கூரைவீடுதான் வசந்தியின் இடம்.

வசந்தி என்னைவிட ஒருவாரம் மூத்தவள். எங்கள் வயதொத்தவர்கள் ஊரில் யாரும் இல்லாததாலோ என்னவோ, இருவரின் வாழ்க்கைகளும் ஒரே பாதையில் பயணித்தன. பக்கத்துக் கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, எங்களின் கல்விப்பயணங்களை அருகிலுள்ள ஒரு பேரூராட்சி ஊரின் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இலக்காக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அந்தப் பேரூராட்சி பள்ளியின் எங்கள் வகுப்பில், முதல் இரண்டு ரேங்குகளை நானும் வசந்தியும் தக்கவைத்துக் கொண்டிருந்தோம். நன்றாகப் படிப்பதாலும், இன்றைய வகுப்புத் தலைவன் - நாளைய மாணவத் தலைவன் என்ற காரணத்தாலும் மாணவர்கள் மத்தியில் எனக்கு மதிப்பிருந்ததெனவும், வசந்திக்கும் சேர்த்தே எனவும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். குக்கிராமவாசிகள் தங்களூர் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவதை உள்ளூரின் சில மாணவர்கள் விரும்பாததையும், அப்பொறாமை உணர்வு புற்றுநோய்க்கட்டி போல் சேகர் - வசந்தி நட்பைக் கொச்சைப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தது எனவும் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஐந்து வருடங்கள் என்னோடு முழங்காலுரச படித்தவளும், முன்றரை வருடங்களாக தினமும் தோளுரச பஸ்ஸில் பயணிப்பவளுமான வசந்தி என்னிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவள் என்று அந்த 19ம் தேதியன்றுதான் தெரிந்தது. முதல்நாள் இரவு என்னோடு தந்திக் கம்பத்திற்கடியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி குவியதூரமும் கானல்நீரும் படித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் குடிக்கப் போனவள் திரும்பவேயில்லை. புத்தகங்களை அவளின் அம்மா வந்து எடுத்துப் போனாள். நான் சிறுவனா என்று தெரியவில்லை; ஆனால் அன்றிலிருந்து வசந்தி சிறுமியில்லை.

வசந்தி இல்லாத முதல் வாழ்நாள் அது. பஸ்ஸில் சாந்து சட்டியுடன் ஒரு பாட்டி தோள் சாய்ந்தாள். வசந்தியைப்பற்றி வகுப்பாசிரியர் கேட்டது முதல், அன்றைய எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாதென பதில் சொன்னேன். தமிழாசிரியை சலசலத்தது எல்லாம் இரட்டைக்கிளவியாகவே கேட்டன. இங்கிலிஷ் டீச்சர் கோர்த்தெழுதியதெல்லாம் நேர்மறையும் எதிர்மறையும் சேர்ந்தே திரியும் Cleave ஆகவே தெரிந்தன. நாண்களெல்லாம் இணைகோடுகளாயின. புத்திரனாய் போர்தொடுத்த அவுரங்கசிப்,புத்தமாகி போர்தடுத்த அசோகரானார். ஓர் எலக்ட்ரானுக்காக அலையும் குளோரினுக்கு, ஹீலியத்தின் அஹிம்சை போதித்தேன்.

வசந்தி இல்லாமல் இரண்டு நாட்களாகத் தனியனாய்ப் படித்துக் கொண்டிருந்த எனக்காக தந்தி மரத்தின் டியூப்லைட் தலைகுனிந்து வருத்தப்பட்டது. தவிர்க்க முயலும் பார்வைச் சந்திப்புடன் என்னை வசந்தி சந்தித்தாள். எச்சலனமும் இல்லாமல் என்தலைமேல் இருந்த பூச்சியைத் தட்டிவிட்டு அதே பழைய இடைவெளியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி நடத்தப்பட்ட பாடங்கள் கேட்டாள். ஒற்று மிகும் இடங்கள் பற்றியும், தாலஸ் என்றால் தலைகால் புரியாதது எனவும், ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல்மனைவி இல்லை எனவும் சொன்னேன். மறுநாள் அதே பஸ்ஸில் ஒரே சீட்டில் அமர்ந்து என்னைச் சிறுவன் என நிரூபித்தாள். அவளும் சிறுமியில்லாமல் இல்லை.

இரண்டு நாட்களை நிமிட நேரத்தில் புரிந்துகொள்ளும் வசந்திக்கே புரியாமல், கண்ணுக்குத் தெரியாமல் அவள் வீட்டினுள் அப்படியொன்று இருப்பது அன்றுவரை யாருக்குமே தெரியாது. படித்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் குடிக்க எழுந்தவளைப் போனமாதம் இதே தேதியில் தண்ணீர் குடிக்கப்போய் திரும்ப வராததைக் கிண்டல் செய்தேன். முன்பற்கள் கடிந்து, புருவம் சுருக்கி, தலைதாழ்த்தி முறைத்துவிட்டுப் போனாள்.

இன்றும்கூட வசந்தி சீக்கிரம் திரும்பவில்லை. Direct - Indirect Voiceகளை மூடிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றேன். நிலைப்படியில் குனிந்து தலைநிமிர்ந்தபோது நான் கண்ட காட்சி என்னை உலுக்கிப் பார்த்தது. சட்டென திரும்பப்போய் நெற்றியில் இடித்துக்கொண்டேன். நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றும்கூட வசந்தி ஒன்றுமே பேசாததிலிருந்து, எனக்கு அங்கு வேலையில்லை என்று உணர்ந்து கொண்டவனாய்த் தந்திமரத்தடியில் தஞ்சம் கொண்டேன்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். பேரமைதி. ஓர் அந்நிய மொழி வாக்கியங்களை Simple-Compound-Complex எனப் பிரித்துப் போடவும், இடதுபக்கங்கள் எல்லாம் வலதுபக்கங்களுக்குச் சமமென நிரூபித்துக் காட்டவும் சொல்லித்தந்த கல்வி, அறிவு, அது, இது எல்லாமும் சேர்ந்தும்கூட, எனக்குப் பக்கத்தில் இருப்பவளின் தாய் வெற்று மார்புடன் படுத்துக் கிடந்த காரணத்தை நேரிடையாக கேட்கும் பக்குவத்தைத் தந்திருக்கவில்லை.

"அம்மாவுக்கு ஒரு வாரமா ரொம்ப முடியல. திடீர்னு இன்னக்கி இருமல் சாஸ்தியாயிடிச்சு. நெஞ்சு கரிக்குதுன்னு சொல்லி அமர்த்தான்ஜனம் (Amrutanjan) தடவச் சொன்னுச்சு ".
வசந்தி சிறுமியில்லை.
"அப்பா சனிக்கெழம ராத்திரிதான் வருவாரு. நான் அம்மாவ நாளைக்கிப் புதுக்கோட்ட பெரியாஸ்பத்திரி கூட்டிட்டுப் போய்த்து வரேன். லீவு சொல்லிடு. எதுவும் மனசில வெச்சிக்கிடாதே".
நான் சிறுவனில்லை.
"ஸ்கூல்ல யாராவது கேட்டா எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்லு. அம்மாவப் பத்தி ஏதும் சொல்லாதே".
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திரும்பிப் போனாள்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

வசந்தி இல்லாத இரண்டாவது 19ம் தேதி அது. இருட்டிய பிறகே வசந்தி தனது தாயுடன் திரும்பினாள். தந்திக்கம்பத்தில் சாய்ந்துகொண்டிருந்த என்னைத் தவிர எல்லாரும் வசந்தி வீட்டில் கூடினார்கள். TB, நெஞ்சுருக்கி, காசம், எலும்புருக்கி, Tuberculosis என்ற வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களுடன் பேசி, தனது தாயுடன் யாரும் பழகவேண்டாம் என் சொல்லி அனுப்பிவைத்தாள்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியைவிட இன்னும் கொஞ்சம் தூரத்தில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். அன்றைய பாடம் கேட்டாள். நான் எந்தவொரு சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விளக்குமென காந்தவியல் சொன்னேன். ஒற்று மிகா இடங்கள் சொன்னேன். ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலை ஷாஜகான் தூரப்பார்த்தே இறந்துபோனதைச் சொன்னேன்.

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி சானடோரியத்தில் மாதாமாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வசந்தியின் அம்மாவுக்கு டாக்டர்கள் சொல்லியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி என்பது வசந்திக்கு எழுதப்படாத விடுமுறை நாளானது. என்னையும் வசந்தியையும் பிடிக்காத மாணவர்கள் உண்மைநிலை தெரியாமல், எல்லா 19யும் முதல் 19தோடு முடிச்சுபோட்டு, வசந்திக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனையென கதைகட்டிவிட்டார்கள். மாதவிலக்குச் சரியாக வருவதில்லை எனவும், அதைச் சரிசெய்யத்தான் தஞ்சாவூர் பக்கம் ஏதோவொரு லாட்ஜ் டாக்டரிடம் பிரதிமாதம் இன்ன தேதி இன்ன நேரத்திற்குப் போய்வருவதாகவும் வசந்தியின் பெயரில் வதந்தி. இதெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது.

டிசம்பர் 19. மார்கழிப்பனி நோயைத் தீவிரப்படுத்தி இருந்ததால், அன்று சானடோரியம் செல்லவில்லை. வேல்ஸ் என்ற இடம் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்காக நண்பன் ஒருவனிடமிருந்து அட்லஸ் புத்தகம் வாங்கி வந்திருந்தேன். நான் இடதுபக்கங்களிலும், வசந்தி வலதுபக்கங்களிலும் இந்தியாவிற்கு வெளியே தேடினோம். ஏதோ உணர்ந்தவளாய்ச் சட்டென வசந்தி வீடு புகுந்தாள்.

"ஐயோ வேல்ஸ் இங்க இருக்கு பாரு". மெய்மறந்து சொன்ன பொழுதில் வசந்தி அருகிலில்லை. உலகம் தூக்கிய அட்லஸ் தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். நிலைப்படியின் மேல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். வீட்டை இருள் பூட்டி இருந்தது.

"என்ன ஆச்சு வசந்தி? இங்க பாரு வேல்ஸ். நீ பாத்த பக்கத்துலதான் இருந்துச்சு"
"ஒண்ணுல்ல. ஒண்ணுல்ல. அந்த சன்னல்ல டார்ச் லைட் இருக்கு. கொஞ்சம் எடு"
எடுத்துக் கொடுத்தேன்.
"கத்தி பிளேடு அருவா எல்லாத்தையும் பூட்டி வெச்சேன்"
பின்பக்க மூடி திறந்தாள்.
"மண்ணென்ன வாங்குறத நிப்பாட்டுனேன்"
பேட்டரியைத் திருப்பிப் போட்டாள்.
"பூச்சி மருந்து அரளி வெத சாமானியமா கெடைக்காதுன்னு நெனச்சேன்"
பின்பக்க மூடியை மூடினாள்.

"பனியில நனையிதுன்னு தாவணிய வீட்டுக்குள்ள காயப்போட்டது என்னோட விதியா?"
"என்ன ஆச்சு வசந்தி?"
"தாவணியில என்னப் பாக்கனும்னு சொல்லுவியே. நான் கட்டுன மொத தாவணிப் பாரு"
வீட்டுக்குள் டார்ச் அடித்தாள்.
தாவணி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. 'அது' தாவணியில் தொங்கிக்கொண்டிருந்தது. அட்லஸ் நழுவியது. உலக நாடுகள் காலடியில் சிதறின. உதவிக்குக் கூப்பிடக்கூட யாருமில்லை. பஞ்சாயத்து தலைவர் சபரிமலை குருசாமியாகி பதினெட்டாம் வருஷ மலைக்குப் போகும் விஷேசத்திற்கு ஊர் சென்றிருந்தது.

எவ்வளவு நேரம் அழுதோம் எனத் தெரியவில்லை. இந்தியப் பெருங்கடல் நனைந்திருந்தது. கொஞ்சம் தைரியம் வரவழைத்து டார்ச் எடுத்து உள்ளேபோக எத்தனித்தேன். டார்ச்சைப் பிடுங்கினாள். அழுகை பீறிட சொன்னாள்.
"நீ பாக்க வேணாம் சேகரு. ஒத்த சேலமட்டுந்தான் கட்டியிருக்கு".

எந்த வெளிச்சமும் இல்லாமல் அரிவாள்மனையால் தாவணியை நான் அறுக்க, வசந்தி தன் தாயைச் சுமந்து இறக்கினாள். முத்திரக் கவுச்சையும், கட்டில்லாமல் வடிந்திருக்கும் உடல் திரவங்களையும் காலடியின் பிசுபிசுப்பில் உணர்ந்தேன். நடுவீதியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷோடனை செய்து தற்கொலையை மறைத்தாள் வசந்தி. மூன்று மணிநேரம் பிணத்துடன் அமர்ந்திருந்தோம். ஊர் திரும்பியது. நோய் தொற்றும் பயத்தில் யாரும் நெருங்கவில்லை. அதன்பிறகு எல்லா நாட்களும் வசந்தி பள்ளி வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்குள், ஒரு செருப்புக் கடைக்காரருக்கு இரண்டாம் தாரமாகியிருந்தாள்.

வசந்தி இல்லாமல் போனபோதுதான் அவள் என்னிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. அவள் இறந்தால் எரிப்பார்கள்; நான் இறந்தால் புதைப்பார்கள். சமூகத்தில் அவள் வினைச்சொல்; நான் பெயர்ச்சொல். வாழ்க்கை என்னைத் தசமப்புள்ளிக்கு இடதுபுறம் பயணிக்கச் சொல்கிறது; அவளை வலதுபுறம் அனுப்புகிறது. சுருக்கமாக என்னை ஆண் என்கிறது; அவளைப் பெண் என்கிறது.

வசந்தியின் தாய்க்குப் பிறகு எனக்குத் தெரிந்து இதே காரணத்திற்காக இதே போல் ஆறுபேர் இறந்துகொண்டார்கள். இந்தியா முழுவதும் இதே காரணத்திற்காக நான்கு லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது கூட ஏறத்தாழ இதே எண்ணிக்கைதான். பெரியம்மை ஒழித்தோம்; போலியோவைக் காலியாக்கினோம்; விமானமேறி வரும் வியாதிகளைச் செய்தியாக்கி பக்கத்தில் இருமுபவனையும் தும்முபவனையும் மறந்துபோனோம்.

எங்கோ ஒருவன் இருமினால், இன்னொருவன் பதறவேண்டுமென்பதெல்லாம் பாரதியார் பாடலில்தான் என உதாசீனப்படுத்தினால், வரலாறு இன்னொருமுறையும் சிரிக்கும். ஒருவன் காறித் துப்பியதை உதாசீனப்படுத்தியதால் வந்ததுதான் முதல் உலகப் போர்!

- ஞானசேகர்

Sunday, August 23, 2009

மதுரை காந்தி மியூஸியம்

Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood.
- Albert Einstein

ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.

விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.

காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.

1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,

2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,

3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.

காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.

எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....

- ஞானசேகர்
(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)

Thursday, August 20, 2009

தாய்மாமன் கதை

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)


(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழும் மலை
இடுக்கெல்லாம் அடைகட்டி
தேனடையும் குன்னமலை.

குன்னமலை முகத்தில்
வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்
ரயில் பாத்த சிறுவயசு
மகனே நெனவிருக்கா?

ஒருகை முட்டுதந்து
அக்காவ நான் நிறுத்த

அஞ்சு வெரலும்
அடுத்தடுத்து கொடுத்துனக்குப்
பால் அழுக நான் நிறுத்த

போலீசுக்குப் பயந்துபோய்
என் அழுக நான் நிறுத்த

எறப்பும் பொறப்பும்
எங் கூடவந்த
சாமத்துக் கார்சவாரி
மருமகனே நெனவிருக்கா?

அம்மா போத்து
நான் படுக்க
பாழாப் போன
கொப்பளமும் தான்வலிக்க
அம்மாவப் போலநீயி
அங்கமெல்லாம் கழுவுனியே
அய்யா நெனவிருக்கா?

காலைக்கடன் தொடச்ச கல்லப்
பொதருக்குள்ள நாமெறிய
கலவிய ரெண்டு பாம்பு
சர்ர்ர்ருன்னு சீறிவர

டவுசர விட்டுப்புட்டு
தல தெறிக்க நீயோட
கைலிய கழட்டிப்புட்டு
காலால நான் பறக்க

செத்தபாம்பு சட்டைதுக்கி
வீராப்பா வீதியில
உலா போனோம் நெனவிருக்கா?

ஒண்ணா திரிஞ்சோம்
ஒரே துண்டில் துயில் கண்டோம்
ஒண்ணாவே இருக்க
ரெண்டுபேரும் யோசிச்சோம்

மகளப் பெத்த
வாழாவெட்டி நாங்கட்டி
மகள நீ கட்டி
மாமன் மருமகனா
ஒரேவீட்டில் வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

பத்தாவது பீசாகி
கல்லொடைக்க நான்போக
வாத்தியார அடிச்சிப்புட்டு
வீட்டவிட்டு நீ ஓட

சோசியஞ் சொன்ன
சாமியெல்லாம் தேடிப்போனேன்
ஏஞ் சாமி நெனவிருக்கா?

தாராபுரம் தாண்டிப்போயி
தாரங்கட்டி நீதிரும்ப
ஆசிர்வாதம் கேக்கயில
ஆயுசுக்கும் மொததடவ
மாமானியே நெனவிருக்கா?

திருமதியக் கூட்டிக்கிட்டு
திருப்பூரு நீபோக
வான்மதியும் புடிக்காம
மதியிழந்து நான்போக

ஓங்குடும்பம் ஓம்புள்ள
ஓம்பொழப்பு ஒன்னோட
எங்கக்கா அவபுள்ள
பழந்நெனப்பு என்னோட.

நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழ்ந்த மலை
டவுன்காரன் வீடுகட்ட
லாரியேறிப் போயிருச்சு!

- ஞானசேகர்
(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)

Thursday, August 06, 2009

உறுபசி

இதே இடத்தில்
மகனை இழந்தவள்
தூக்கியெறிந்த தேங்காய்ப்பழம்
திரும்பி வந்தது
அடுத்த அலையில்.

- ஞானசேகர்

Monday, August 03, 2009

பெய்யெனப் பெய்யாத மழை

கடிதம் போட்டு
திருடன் வந்தான்
அனுப்புநர்: மாப்பிள்ளை.
- யாரோ

கோட்டு போட்ட மாப்பிள்ளைக்கு
ரேட்டு கொஞ்சம் சாஸ்தியின்னா
இதுக்குப் பேரு என்ன?
ஆண் விபச்சாரம்.
- ABCD திரைப்படத்தில் பாரதியின் அறிமுகப் பாடல்


சொர்க்கத்தின் மனுமகன்
தொழுகிறாள்
ரொக்கத்தின் மணமகன்
தழுவாதவள்.

- ஞானசேகர்