புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, March 30, 2006

வைரமுத்து பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'

(தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும்)

இங்கு வந்து பார்


உன்னைச் சுற்றி
புகைமண்டலம் தோன்றும்

ஹிந்தி அர்த்தப்படும்
தாய்மொழி தூரப்படும்

பிரபஞ்ச நீளம்
விளங்கும்

கை, எழுத்தை
மறந்து போகும்

ஆட்டோக்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் பார்ப்பதே
ஆபூர்வம் ஆகும்

கண்ணிரண்டும்
பற்றாக்குறை ஆகும்

சாம்பார் இனிக்கும்
மீன் புளிக்கும்
தண்ணீர் மணக்கும்

திங்கள்
ராகு காலமாகும்
வெள்ளி
சுப முகூர்த்தமாகும்


இங்கு வந்து பார்


திசைகள் மறப்பாய்

தாய்மாமன் மகள் கூட
உன்னை மதிக்க மாட்டாள்
'தாங்க முடியவில்லை
பெண்கள் தொல்லை' என
நண்பரை நம்ப வைப்பாய்

குஷ்பூ சொன்னால்
உண்மை என்பாய்
காதல் எல்லாம்
பொய் என்பாய்

பைக் இருந்தால்
பிகரும் அட்டு என்பாய்
நடராஜன் நண்பன் என்றால்
அட்டும் பிகர் என்பாய்

இந்த கிரெடிட் கார்ட்,
இந்த ஸ்போர்ட்ஸ் ஷீ,
இந்த கேர்ள் ஃப்ரண்ட்
எல்லாம்
தலைமுறை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்


இங்கு வந்து பார்


வியர்வை
கானல் நீராகும்
வாழ்க்கை
சோலையாகும்
உறைவிடமோ
பாலைவனமாகும்

பரோடிட்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
அட்ரினல்
காவிரியாய்
வறண்டு போகும்
பர்ஸ் மட்டும்
சகாராவாகும்
தேவைகள்
சமுத்திரமாகும்

பிறகு
திராட்சைத் துளிக்குள்
சமுத்திரம் நிரம்பும்


இங்கு வந்து பார்


இம்சையின் அஹிம்சையை
அடைந்ததுண்டா?

சிரிக்கின்ற துக்கம்
அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குத்
தேடத் தெரியுமா?

பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?


இங்கு வந்து பார்


புலன்களை வருத்த
புலம் பெயர வேண்டுமே

அதற்காக வேணும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகநானூறு சொல்லாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காக வேணும்

அமிர்தம் என்பது
பாற்கடலில் இல்லை
அம்மா வைக்கும்
புளி ரசம்
உண்மை புரியுமே

அதற்காக வேணும்

இருக்கும் இடத்தில்
அகதியாய் உணர்ந்தாலும்,
சொந்த ஊரில்
அரசனாய் தெரிவாயே

அதற்காக வேணும்

ஓடி மறைந்தது
திரை கடலில் என்றாலும்
திரவியத்துடன்
திரும்புவாயே

அதற்காக வேணும்


இங்கு வந்து பார்


உன் பிம்பத்திற்கும் சேர்த்து
வாடகை கட்டினாலும்

ஒளி ஆண்டு வேகத்தில்
உறவுகள்
விலகி ஓடினாலும்

பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்

பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்

வேர்கள் ஊன்றிவிட்டு
விழுது பிடித்து திரும்புகையில்
சொல்லாத காதலி
தாயாகிப் போயிருந்தாலும்

நிலை மாறாத காகிதம்
பணமாய் மாறுவதில்லை


இங்கு வந்து பார்


கூட்டுப் புழுவோ,
பட்டுப் பூச்சியோ
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்


இங்கு வந்து பார்


-ஞானசேகர்