புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, October 18, 2013

தனிமனிதம்

I am (have) become Death, the destroyer of worlds.
- Robert Oppenheimer (பகவத் கீதையில் இருந்து)

ஆயுதம் செய்தலால்
தூண்டிவிடக் கருவைச் சீண்டிவிடுதலால்
கருவில் வகை பிரித்தலால்
இயற்கை மீறி பிறத்தலால்
செயற்கையாய்ச் சாதலால்
செத்தும் கெடுத்தலால்
கெடுத்தும் கட்டிக் காத்தலால்

தோண்டி எடுக்கப்படுவதால்
எரித்துப் புதைக்கப்படுவதால்
புதைத்துத் தோண்டப்படுவ‌தால்

அட்டவணையில் அடங்குவதால்
கட்டுக்குள் அடங்காததால்
அந்நியரால் மட்டுமே பிளக்க முடிவதால்
தம்மவரால் தற்கொலை செய்வதால்
பட்டென பற்றிக் கொள்வதால்

அகப்பட்டவரைச் சுட்டெரித்தலால்
தூரக் கிடப்பவர் குளிர்காய்தலால்
தலைமுறைகளைத் துரத்திப் போவதால்
முதலாளிகளுக்கு முக்கியம் ஆதலால்
இந்தியாவில் அபரிதம் ஆதலால்

சிலர் பீடில் வாசிக்க‌
பலர் எரிவதால்
பலர் உயிர்த்தெழ‌
சிலர் சிலுவை சுமப்பதால்

கூடங்குளமோ தர்மபுரியோ
சகலரும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதால்
தனிமம் மனிதம் எரிக்கும்
தோரியம் ஆகுமாம் சாதியும்.

- ஞானசேகர்

Thursday, October 17, 2013

மாநகர் இடக்கை விதி

இடது கையின்
பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல்
ஆகிய மூன்றையும்
ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில்
வைத்துக் கொண்டு
போக வேண்டிய திசையைச்
சுட்டுவிரலும்
திருப்பி விடப்பட்ட திசையை
நடுவிரலும்
குறிப்பதாகக் கொண்டால்
போய்ச் சேரும் திசையைப்
பெருவிரல் காட்டும்.

- ஞானசேகர்

Wednesday, October 16, 2013

புறவினத்தார்

மரித்தவனைச்
சிலுவையில் அறைகின்றன‌
கல்லறைகளின் சாதிச் சுவர்கள்.

- ஞானசேகர்

Sunday, October 06, 2013

ஆணுக்கான‌ தீட்டுத்துணிகள்

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை
- கனிமொழி 

தாலியறுத்த பெண்ணொருத்தி
தாங்காத் துயரம் கொண்டு
பொட்டு மஞ்சள் குங்குமம்
முடிச்சிட்டு முச்சந்தி இட்டதை

தம்பி நீங்கள் அதைக்
கையால் எடுக்கவும் இல்லை
காலால் மிதிக்கவும் இல்லை
இன்னாருக்கென‌ இட்டதும் இல்லை
போகிற பாதையில்
இந்தக் காலால் எத்திவிட்டு
அந்தக் காலால் தட்டிவிட்டு
கடந்து போன தோசம்
எட்டு மாதமாய் வாட்டுகிறது

தம்பி நீங்கள் அதைக்
கண்ணால் பார்த்தும் செய்யவில்லை
மனதால் அறிந்தும் செய்யவில்லை
நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது
நடந்து க‌டந்து போய் இருக்கிறீர்கள்

தம்பி உங்களுக்கு
இந்த எட்டு மாதமாய்
தொட்ட காரியம் துலங்காமல் போகிறது
பட்ட காரியம் பஸ்பமாய்ப் போகிறது
சிந்தனை குரங்காய்த் தாவுகிறது
சொந்தம் தாமரைத் தண்ணீராய் நழுவுகிறது
சபையில் பேச்சு எடுபடாமல் போகிறது
பயிருக்குப் பாய்ச்சினால் பதருக்குப் போகிறது
அரசன் போல் மனதிருந்தும்
ஆண்டி போல் மனஸ்தாபம்

தம்பி உங்களுக்கு
உள்ள‌ கண்டம் மூன்று
தலைக்கு வந்தது ஒன்று
தலைப்பாகையோடு போனது
வாகனத்தில் வந்த ஒன்று
வணங்குகிற தெய்வத்தால் போனது
மூன்றாவதாய் ஒன்று மீதமுண்டு
முறித்து விட பரிகாரம் ஒன்றுமுண்டு
மூன்றூற்றியொன்று தட்சணை
பொட்டு மஞ்சள் குங்குமம்
அம்மனுக்கு ஒரு சேலை
கையை மடக்கிவிட்டு
சந்தேகம் ஏதுமெனில் தயங்காமல் கேளு தம்பி.

- ஞானசேகர்