புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, December 13, 2005

110 கோடி முகமுடையாள்

('முதல் மற்றும் கடைசி வரிகள் 'விதை' என்ற வார்த்தையைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற கட்டுப்பாட்டுடன் எங்கள் கல்லூரிக் கவிதைப் போட்டியில் நான் எழுதிய கவிதை இது, கொஞ்சம் திருத்தங்களுடன்)

விதைக்க இடம் வாங்கி
இடமே அவனது என்றான்
குத்தகைகாரன்.

குத்தகை நீக்கி
உரிமை மீட்க
மக்களை அனுப்பினால்
என் மார் முட்டி
தலை பாதி
வெட்டிப்போனது ஒன்று;
இடது கை
வெட்டிப் போனது இன்னொன்று.
கூத்தாடி துண்டுபட்டான்
ஊருக்குக் கொண்டாட்டம்!

இருக்கும் மக்கள்
என்னுயிர் எடுப்பதற்குள்
சொத்தைப் பிரித்து
சமரசம் செய்தேன்.

சொத்தின் அளவை
வாயின் அளவே
தீர்மானித்துப் போனது.

இப்போது....

இடது கை
எடுத்துப் போனவன்
தாய்நாடி வருகிறான்.

தலை பாதி
எடுத்தவனின் அடுத்தவன்
தாய்விட்டுப் போகப்பார்கிறான்.

என் இதயத்தில் இடி,
வயிற்றில் விஷவாயு,
வலதுகையில் தீப்பந்தம்,
இடதுகையில் தொழு,
காலில் பித்தவெடிப்பு.

என் கண்ணீர் பசையில்
நனைந்தது வங்கக்கடல்.
என் பாதத்தை விசையில்
கரைத்தது வங்கக்கடல்.

ஐய்யகோ.....

மக்களைப் பிரித்து
மாதவறு செய்தேன்
மரிக்கும் வரையில்
மனம் நொந்து போவேன்.

மக்களைக் கூட்டி
சமரசம் செய்ய
மன்றம் போனால்
உச்சந்தலையில்
விதைக்கிறான் குண்டுகள்!

-ஞானசேகர்

Friday, December 09, 2005

Onychophagia

பழக்கம் என்பது கடினமான மலை; தகர்ப்பதும் கடினம்; தாண்டுவதும் கடினம்.
-மோகன்தாஸ் கரம்சந்த காந்தி

சாகும் நேரத்தில்தான்
மனிதன் வாழக் கற்றுக்கொள்கிறான்.
-யாரோ


"பிதுக்கித் தேடுகிறான்
கடித்துத் துப்புகிறான்
துண்டாக்கி விழுங்குகிறான்
கண்டிப்பவரைக் கண்டிக்கிறான்
அடியை ஆட்டிப் பார்க்கிறான்
நுனியை வெட்டிப் பார்க்கிறான்
முதல் மூட்டுவரை
தோலைக் கிழிக்கிறான்

இரு பத்து ஆண்டுகள்
நகம் கடிக்கும் பழக்கம்
இவனைவிட்டுப் போக
என் நண்பனைக் கொணர்ந்தேன்
கடவுளென உமை நம்பி!"

ஒரே ஒரு முறையென
கெஞ்சிக் கூத்தாடி
எனை இங்கு அமரவிட்டு
மனோதத்துவ மருத்துவரிடம்
என் நகவரலாறு கூறினான்
என்னுயிர் நண்பன்.

கிழட்டு மருத்துவனின்
மொழியற்ற விழிகளின்
ரகசிய அசைவுகளைப்
புரிந்து கொண்டவனாய்த்
தோளில் தட்டிவிட்டு
இருக்கை காலி செய்தான்.

கிழட்டு மருத்துவனின்
ஆங்கில வாயின்
ரகசிய அசைவுகளைப்
புரிந்து கொண்டவனாய்
வலதுகை மூடிவிட்டு
இடதுகை முன் நீட்டினேன்.

ஐந்து விரல்களிலும்
விரலின் உச்சிக்கும்
நகத்தின் உச்சிக்கும்
இடையே இருந்தன
என் வாய் செதுக்கிய
கணவாய்கள்!

"இது ஒன்றும்
கெட்டதல்ல.
தவறென்று வருந்த
பாதிப்பும் மற்றவருக்கல்ல.
குற்ற உணர்வுவர
பாதிப்பு மனதிற்குமல்ல."

இடதுகை பெற்றுக்கொண்டு
வலதுகை கொடுத்தேன்.

கிழட்டு மருத்துவன்
மூக்குக் கண்ணாடியைக்
காதில் நிறுத்தினான்.
புருவம் நெருக்கிப்
பார்வை விரித்தான்.
இருக்கையின்
உச்சிக்கு வந்தான்.
உச்சியைத் தாண்டி
அடிவரை போனது
நான் செதுக்கிய கணவாய்!

"எப்போதிலிருந்து
இந்தப் பழக்கம்?"

"முதலில் தொட்ட மண்ணைத்
தட்ட முயன்றதில் இருந்து"

"தவறென்று
தோன்றவில்லையா?"

"தவறென்று வருந்த
பாதிப்பு மற்றவருக்கல்ல"

"எம்மாதிரி நேரங்களில்
இம்மாதிரி செய்கிறாய்?"

"மூச்சைக் கவனிப்பது
முடியாத காரியம்"

"உள்ளத்துக் கோபங்கள்
வெளிக்காட்ட முடியாதவர்கள்
வடிகால்கள் பல தேடுவர்.
கைப்படும் பொருளைக்
குத்திக் கிழிப்பர்.
வாயில்லாப் பிராணியைப்
பேசச்சொல்லி அடிப்பர்.
கிடைப்பவர் மேல்
கோபமிறக்கி வைப்பர்.
இப்படி பல வடிகால்கள்.

உன் வடிகால் உத்தமமே.
யோசனைகள் சில
கூறுகிறேன்.
உனக்குப் பிடித்ததைப்
பின்பற்று போதும்.
உனக்காக இல்லாவிடினும்
உன்நல விரும்பிகளுக்காக"

தலையாட்ட நானொன்றும்
தஞ்சாவூர் பொம்மையில்லை.

"வாயிற்கு விரல் போனால்
பிடித்த மிட்டாய் சாப்பிடு"

"ஒரே வாயில்
மூவித வேலைகள் செய்ய
மூவித பற்கள் இருக்க
இரு வேலைகள் செய்வது
எனக்கொன்றும் சவாலில்லை"

"வடிகாலை மாற்று.
வாயிற்கு விரல் போனால்
எழுதுகோல் எடுத்து
பிடித்த பாடல் எழுது"

"மறுகை
பூப்பறிக்கப் போவதில்லை"

"நகத்தைக் கடித்தால்
கழிவைச் சுவைப்பதாய்க்
கற்பனை செய்துகொள்"

"கோக் குடிக்கிறேன்
கழிவெல்லாம் காசுக்கு"

வெகுநேரம் யோசித்த
கிழட்டு மருத்துவனுக்கு
நானொரு யொசனை சொன்னேன்.

"மருதாணியோ
நகப்பூச்சோ போட்டு
நகத்தை அழகு செய்தால்?"

"இது நல்ல சிகிச்சை!"

"ரோசாதான் கிள்ளுப்படும்.
கொழுத்த கன்னம்தான்
கிள்ளப்படும்.
எண்ணை நகரம்தான்
போர் தொடுக்கப்படும்.
அழகு முகம்தான்
காதலிக்கப்படும்.
அழகு பொருட்களில்
வன்முறை செய்வதே
மானிடன் புத்தி!"

கிழட்டு மருத்துவனின்
அனுபவத்தை
அவமானப்படுத்திவிட்டு
தொடர்ந்து கடிக்கலானேன்
என் கைநகங்களை!

தவறென எதிர்த்தவர்கள்
விதண்டா வாதத்தில்
அடி பணிந்தார்கள்.

நியாயம் பேசியவர்கள்
நான் சொன்ன தர்மத்தைப்
பேசாமல் ஏற்றார்கள்.

சிகிச்சை செய்ய வந்தவர்கள்
தொற்றிவிடுமென
பயந்து ஒதுங்கினார்கள்.

ஆனால்,
நான் உயிர்கொடுத்த
எனது சந்ததிகளில்
இதே பழக்கம்
முளைவிடத் தொடங்கும்போது
அனிச்சையாய்த் தட்டிவிட
நீளும் என் கரங்கள்..........
அறைந்ததுபோல்
சொல்லிப் போகின்றன......

இச்சை இதுவென
உணர்ந்து திரியும் நான்
வாழ்வுதேடும் அகதி!

இச்சை இதுவென
உணராமல் போனால்
வாழமறந்த அடிமை!

-ஞானசேகர்

Friday, November 18, 2005

அத்தைமார் முத்தம்

(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)

அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினை, கட்டிக்கொடுத்த அக்காவின் நகைகளைக் கடன்வாங்கி தங்கச்சி கல்யாணம், முப்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உறவுகளைச் சுருக்கிக்கொண்டு சொந்தமண்ணே உலகம், விவசாயவேலை உறுதியானாலும் பள்ளிக்கூடப்படிப்பு, கோழிச்சண்டை, அருவாள் சண்டை, இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு சராசரி கிராமம்தான் எனக்கு சொந்தமண். மற்ற ஊர்களைப் போல் திருவிழா எடுத்து சொந்தபந்தங்கள் பார்க்க முடியாத சின்ன கிராமம், திருச்சியில் குடியேறின ரெயிவேகாரரையும் சேர்த்தாலே மொத்தம் எட்டு குடும்பங்கள். "அந்தக் கல்லாங்குத்துலபோய் இடுப்பொடிஞ்சு சாவுரதுக்கா?" என்று வெளியூர் சொந்தங்களே பெண்தர மறுக்கும் ஓரிடம். "அந்த ஊரு பொண்ணுக்குத்தான்யா கஷ்டம்னா என்னான்னு தெரியும்" என்று வெளியூர்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண்ணெடுக்கும் ஓரிடம். அரசியல்வாதிகூட ஒட்டுக்கேட்காத ஓரிடம்.

அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாங்கள் 25 கி.மீ. தள்ளி புதுக்கோட்டையில் குடியேறினோம். இப்போது சித்தப்பா மட்டும்தான் எங்கள் ஊரில் இருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரே அத்தை, இன்னொரு கிராமத்தில், அதுவும் சீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை இல்லை. சொந்தபந்தம், ஆறுதல் பேச்சு, பாட்டிமார் கதைகள், தாத்தாக்களின் காமக்கதைகள் எதுவும் இல்லாமலே முடிந்து போனது எனது 13 வருடங்கள்.

அன்று ஒரு உயரமான பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள். வாசலில் நின்றிருந்த என் கன்னம் கிள்ளி, ஐந்து விரல்களையும் சேர்த்து அவள்வாயில் ஒட்டிக் கொண்டு, "என்னப் பெத்தவரு" என்று சொல்லிக் கொண்டாள். கன்னத்தின் வலியிலும் ஏதோ ஒரு சந்தோஷம். அதன் அர்த்தம் பிற்காலத்தில் 'அத்தைமார் முத்தம்' என்று வைரமுத்து சொல்லித்தான் புரிந்தது. 'பல அம்மாக்களுக்கு இதெல்லாம் ஏன் செய்யத் தெரியவில்லை?' என்று இன்னும் குழப்பம். எழுதிக்கொடுத்தைப் படிக்கும் பிள்ளை போல அம்மா ஒப்பித்தாள்:
"வாங்க அண்ணி"
"அண்ணின்னா என்னம்மா?"
"சும்மா இருடா........அண்ண வல்லங்களா? கமலா எப்புடி இருக்கா?"
"கமலான்னா யாரும்மா?"
"இவன் இப்புடித்தான் அண்ணி. சும்மாவே உம்முன்னு கெடப்பான். ஒரு புது ஆளு வந்துட்டா சும்மா நொய்யிநொய்யின்னுட்டு"
"இந்தாடா சேகரு, மிச்சரு. நல்லா படிக்கிறியா? சித்தப்பா வீட்டுக்குப் போனியா?"
மிக்சரை வாங்கிக்கொண்டே 'நல்லா படிக்கிறேன்' என்று தலையாட்டினேன்; 'சித்தப்பாவா?' என்று புரியாமல் நின்றேன்.
"வா டம்ளர்ல கொட்டித் தர்றேன்" என்று சொல்லி என்னைச் சமையலறைக்குள் அம்மா இழுத்துச் சென்றாள். ஏற்கனவே வீட்டில் இருந்த மிக்சர் எனக்குத் தரப்பட்டது. அந்தப் பெண் கொடுத்ததை, சீனி டப்பாவிற்குள் அம்மா ஒளித்து வைத்தாள். நான் மீண்டும் அந்தப் பெண்ணிடம் வந்தேன். அவள் என்னைக் கவனிக்கவில்லை; வீட்டின் உத்திரத்தை உட்கார்ந்து கொண்டே சுற்றிப் பார்த்தாள்.
"நீங்க யாரு?"
அவள் என் பக்கம் வந்து, சுவற்றில் இருந்த அம்மா-அப்பாவின் கல்யாணப் போட்டோவைக் காட்டி,
"ஒங்க அம்மா நெத்தியில கயிறு கட்டுறது நாந்தான்" என்றாள்.
புரியவில்லை. எங்களுக்குக் காபி தரப்பட்டது. நான் பக்கத்து மாமி வீட்டுக்குச் சென்றுவிட்டு, 'கிழக்குச் சீமையிலே' படம் பார்த்துவிட்டு, இரவு எட்டு மணியைப்போல் வந்தேன்.

அப்பா வரும் நேரம். ஆயிரம் காலடி ஓசைகளில் அப்பா காலடி ஓசையை அறிந்துகொண்டவளாய், அவரை வரவேற்க அம்மா தயாரானாள். அந்தப்பெண் மூலையில் போய் நின்றுகொண்டாள். அப்பா அவளைப் பார்த்துவிட்டார். செருப்பைக் கழட்ட தடுமாறினார்.
"வாப்பா! மச்சான் வல்லையா? நல்ல இருக்கீங்கல்ல. மூத்தபய புதுநன்மைக்குக்கூட இந்த அண்ணனக் கூப்புடல. தாய்மாமன் என்னா செத்தாப் போயிட்டேன்?"
அப்பா அழவில்லை. அந்தப் பெண் அழுதாள்.
"என்னண்ணே பண்றது? பொண்ணாப் பொறந்துட்டேனே? கட்டுனவன் சொல்லறதுதானே பத்துக்கட்டள"
யாருக்கும் முகம் பார்த்து பேச துணிவில்லை. அழுகை பயமா? குற்ற உணர்ச்சியா? சொல்வது பொய்யா? அவ்வயதில் புரியவில்லை. அப்பாவின் கையிலிருந்து Little Hearts பிஸ்கட்டை நைஸாக உறுவினேன்.

மூக்கு சிந்தி முந்தானையில் துடைத்துவிட்டு, அவளே மௌனம் கலைத்தாள்.
"ஏன் புருஷன் பாவிப்பய செஞ்ச தப்புக்கெல்லாம் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேண்ணே. ஏன் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னுதான் ஏன் பொண்ணு சடங்குக்குத் தாய்மாமன அழைக்க வந்திருக்கேன்"
"கமலாவா அண்ணி? மேஜராயிட்டாலா?" என்றாள் அம்மா.
"மேஜர்னா என்னாம்மா? மேஜர் சுந்தர்ராஜன் மாதிரியா?"
கொஞ்சம் சிரித்தார்கள், அழுத இரண்டு பேரும். வெற்றிலை பாக்கில் ஐந்து ரூபாயைத் திணித்து அப்பாவிடம் அவள் நீட்டினாள். அதை வாங்கும்போது தாய்மாமன் தெனாவெட்டு அழுகையிலும் லேசாகத் தெரிந்தது அப்பாவிடம்.

அப்புறம் எல்லாரும் ஒன்றாக அமர்ந்தோம். ஒவ்வொருத்தரும் பாவமன்னிப்பு கேட்பதுபோல் "நான் அப்புடி பண்ணியிருக்கக் கூடாது? நீ செஞ்சது தப்பு?" என சமாதானம் செய்து கொண்டனர். இடையில் பேச்சைத் திசை மாற்ற "ஏன் மருமகன் எனக்கிட்ட பேசவே மாட்டேங்கிறாண்ணே" என்றாள் அவள். "ஏன் தங்கச்சிடா. ஒனக்கு அத்தை. புதுசுல. பயப்புடுறான். பழகிட்டான்...... தலக்கி ஏறிருவான்".
"அத்த" என்று சொல்லிப் பார்த்தேன்.
மீண்டும் கிடைத்தது ஒரு அத்தைமார் முத்தம்.
"எத்தனாவது படிக்கிற"
"எட்டாவது படிக்கிறேன். டி.ஈ.எல்.சி.ல"
"ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா? கமலா பத்தாவது படிக்கிறா? அண்ணன் சம்பந்தம் எனக்குக் குடுத்து வெக்கல"
சாப்பாட்டு நேரம். நான்கு தட்டுகள்.
"அண்ணே, நம்ம தங்கச்சி செத்த அன்னக்கி நாம சாப்புட்டது மாதிரி சாப்புடுவோமா?"
அப்பா அவர் தட்டைத் தள்ளி வைத்துவிட்டு, அத்தையின் தட்டுகளில் பிணைய ஆரம்பித்தார். என் கையையும் சேர்த்து ஒரே தட்டில் மூன்று கைகள்.
"அப்புடியே எங்கண்ணன் மாதிரி"
மீண்டும் ஒரு அத்தைமார் முத்தம். கன்னத்துச் சோற்றைத் துடைக்கவில்லை. சாப்பிட்ட சோறு கொஞ்சம் வித்தியாசமாய் உப்புக் கரித்தது.

இரவு முழுவதும் அப்பாவும், அத்தையும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தூங்கும் என்னை யாரோ கன்னத்தில் கிள்ளுவது தெரிந்து எழுந்தேன். அத்தையை அம்மாவும், அப்பாவும் வழியனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

சில நாட்கள் கழித்து, ஒரு புதன் கிழமையில், ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நாங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றோம். பின்னால் ஒரு ஆட்டோவில், வாழைத்தார், இனிப்பு வகைகள், இன்னும் பல பாத்திரங்கள் எங்களைத் தொடர்ந்து வந்தன. அந்த ஓட்டுவீட்டின் முன்பந்தலில் இருந்து அத்தையும், ஒரு மீசைக்காரரும் எங்களை வரவேற்றனர். அத்தையின் பக்கம் போனேன். அத்தை புரிந்து கொண்டாள். மீண்டும் அத்தைமார் முத்தம்.

எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தனர். அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் நாங்கள் மூவரும் அமர்த்தப்பட்டோம். முன்னால் இருந்த சின்ன மேடையில் "அ.கமலா" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு உயரமான பெண் அதற்குமுன் நகைகளுடன் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளை அத்தை எங்களிடம் அழைத்துவந்து அம்மா-அப்பா காலில் விழச் செய்தாள். எங்களை அறிமுகப்படுத்தியும் வைத்தாள். நான் பலூன் வைத்து விளையாடும் என்போன்ற பயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு பையனின் பலூன் கூரையில் மாட்டிக் கொண்டது. அதை எடுத்துத் தந்தேன். எனக்கு விவரம் தெரிந்து இரண்டாவது முறை என் அம்மாவிடம் அடி வாங்கினேன். ஏன் என்று தெரியவில்லை. அப்பா தனியாக அழைத்துப்போய், என்னிடம் சொன்னார்:
"அவனுக்கு ஏன்டா பலூன எடுத்துக் கொடுத்த? அவன்பேரு இருதயராசு. ஏன் தம்பி மகன். ஒனக்கு தம்பி. இந்தா 100 நூபா, அம்மாவுக்குத் தெரியாம அவனும் நீயும் எங்கையாவது கடக்கிப் போயி ஏதாவது சாப்டுட்டு வாங்க"
அவனைத் தேடினேன். அவன் கிட்டத்தட்ட என் அப்பா சாயல் உள்ள ஒரு ஆளின் மடியில் அமர்ந்திருந்தான் பலுன் வெடித்துப்போய் இருந்தது.
"ஓன்பேரு இருதயராசா?"
"ஆமா"
"நீதான் சேகரா?" ஒரே தொனியில் கேட்டனர் அவனது அம்மாவும், அப்பாவும்.

அவனது அம்மா என் கன்னம் கிள்ள வந்தாள். நான் விலகிப் போனேன்.
"இருதயராசு, நான் பலூன் வாங்கித்தாரேன் வாடா"
அவன் அப்பா காசு தேடினார்.
"எங்க அப்பா காசு கொடுத்துருக்காரு"
அவன் அப்பா அவனை மடியில் இருந்து தூக்கிவிட்டார். அவன் அம்மா அவன் கையைப் பிடித்தார். நான் மறுகையைப் பிடித்தேன். இருவரும் பலூன் வாங்கப் போனோம். இருவரின் அம்மாவும் எங்களைப் பார்த்தார்கள். இருவரின் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனோடு வந்து அப்பா-அம்மா பக்கத்தில் அமர்ந்தேன். அவன் அப்பா மடியில் அமர்ந்தான். தகப்பனுக்குப் பாடம் சொன்ன முதிர்ச்சி எனக்கு அப்போது தெரியவில்லை.

மீண்டும் அத்தை எங்கள் பக்கம் வந்து அமர்ந்தாள். இங்கிருந்தே கமலாவிற்கு ஏதேதோ சைகையெல்லாம் காட்டினாள். திடிரென ஏதோ ஞாபகம் செய்த அத்தை, ஒரு அத்தைமார் முத்தம் கொடுத்து, கமலாவிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு திப்பெட்டியைக் கொடுத்தார்.

(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

கமலாவிடம் வந்தேன், ஒரு தீண்டத்தகாதவன் கருவறைக்குள் நுழைவதுபோல் ஒரு தயக்கத்துடன். தோழியர் கூட்டத்திற்கு நடுவில் அவள் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
"கமலா, இந்தா தீப்பட்டி. அத்த குடுத்தாங்க"
"இத்துனூன்டு இருந்துட்டு என்ன பேர் சொல்லிக் கூப்புடுற" என்று ஒருத்தி Adam-teasingஐ ஆரம்பித்து வைத்தாள்.
"ஏ மெரட்டாதீங்கடி, அவன் எங்க பெரிய மாமா பையன். சேகர். இப்பத்தான் மொதமொதன்னு எங்க வீட்டுக்கு வர்றாங்க"
தீப்பெட்டி கைமாறியது.
"என்ன சேகரண்ணே, நீங்கதான் இந்த கமலாவக் கட்டிக்கப் போறீங்களோ?"
"நல்ல ஜோடிடி. சரியான குட்டையன். நீ ஒரு ஒட்டகச்சிவிங்கி"
நான் கமலாவிடம் பேசிய ஒரு வாக்கியத்துடன் விருட்டென்று வந்துவிட்டேன். நான் ஏதாவது போட்டுக் கொடுக்குறேனா என்று தோழியர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுநாள் மாமன் விருந்து முடிந்தவுடன், அத்தை குடும்பம் நன்றாகப் பழக்கமாயிருந்தது, கமலாவைத்தவிர. சித்தப்பா விஷயம் முன்னேற்றமில்லை.

"ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா?" என்ற ஏக்கத்துடன் அத்தைமார் முத்தம் வாங்கி கொண்டு வீடு திரும்பினோம். என்னிடம் பேசிய-எனக்காகப் பரிந்து பேசிய முதல் பெண் என்ற முறையில் கமலா மறக்கப்படாமல் இருந்தாள். அந்த வருடம் நடந்த அத்தை ஊரின் திருவிழாவிற்கு அப்பா மட்டும் போய்வந்தார். என்னை கமலா ரொம்பா விசாரித்ததாகச் சொன்னார்.

பத்தாம்வகுப்பு லீவில் சும்மா இருந்த என்னை அந்த வருடம் அத்தை ஊர் திருவிழாவிற்கு தனியாக அனுப்பி வைத்தார். எனக்கு பலத்த வரவேற்பு. போனவுடனேயே சாப்பாடு. அன்று என்னோடு அப்பா இருந்ததால் பேச பயந்த கெழவிகள் எல்லாம் என்னைச் சுற்றி உட்கர்ந்துகொண்டு நொய்நொய் என்று கேள்வியாய்க் கேட்டுக் குடைந்தன. நான் கமலாவை மட்டும் எதிர்பாத்துக் கொண்டே இருந்தேன். வந்தே விட்டாள்.
"என்ன மாப்புள்ள. மாமா அக்கால்லாம் வல்லையா?"
"அவுக வல்லைங்கவும்தான் நான் வந்தேன்"
கிழவிகளுக்குப் புரியவில்லை. அவள் கண்களை புருவத்தில் சொருகிப் பார்த்தாள். நான் சோற்றைப் பார்த்தேன்.

திண்ணைக்கு வந்தேன். மீண்டும் கூட்டம். இருதயராசு வீதியில் விளையாடிகொண்டு இருந்தான். என்னைப் பார்த்தும் அவன் பலூன் கேட்கவில்லை. கமலா எல்லாரையும் விலக்கிவிட்டு, என்னோடு தொடை உரசி அமர்ந்தாள். இவளைப் பார்த்தால் கேட்க வேண்டும் என இத்தனை நாள் பொதித்து வைத்திருந்த ஒரு ஆசை இப்போதும் என் சிந்தனையில் இருந்தது. ஒருவேளை அவமானம் ஆகிவிட்டால்? அதனால் தனியாகக் கேட்கலாம் என்று காத்திருந்தேன்.
"பப்ளிக்ல எவ்வளவு மார்க் வரும்?"
"410 ஒட்டி"
"அடேயப்பா?"
"அப்புடின்னா? பாசுதானே" இது அத்தை.
"ஆமா அத்த. பாசுதான். என்ன கமலாவக் கடக்கிக் கூட்டிப்போகச் சொல்லுங்க"

அத்தையின் சம்மதத்துடன் இருவரும் நடந்தோம். வழியில் ஒரு கருவேளக்காடு. இதுதான் சரியான இடம். கேட்டு விடலாமா? சுற்றிப் பார்த்தேன். எங்கள் பின்னாலேயே ஒருவன் வந்துகொண்டிருந்தான்.
"டேய், இருதய ராசு இங்க என்னடா பண்ணுற"
"அண்ணே, பலூன் வாங்க காசு குடுண்ணே"
"அத அங்கேயே கேட்டிருக்கலாம்லே"
"அம்மா அடிக்கும்ணே"
அவன் கையில் 50 ரூபாய் திணித்துவிட்டு, கடை நோக்கி நடந்தோம், சித்தப்பா ஞாபகத்தில் பேச்சுவரவில்லை. ஆளுக்கொரு கலர் குடித்துவிட்டு, மீண்டும் நடந்தோம். ஏதோ சேசிக்கிட்டு வந்தோமே என்று யோசித்து,,,, "ஆமா, இதுதான் சரியான நேரம். கேட்டு விடலாம்"
"உங்கள நான் என்ன சொல்லிக் கூப்புடுறது?"
"பேர் சொல்லித்தானே கூப்புடுற. அப்புடியே கூப்புடு"
"பேர் சொல்லிக் கூப்புட ஒருமாதிரி இருக்கு. சரி கமலா. நான் ஒண்ணு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது"
"சொல்லுடா"
"மொதல்ல டா போடுறத நிறுத்து. பேர் சொல்லிக் கூப்புடு"
"சரிங்க சேகர் சார். சொல்லுங்க தப்பா நெனக்கல"
"பக்கத்துல வா"
"இது போதுமா"
"மேட்டுல நிக்காம, கொஞ்சம் கீழ எறங்கி, இன்னும் பக்கத்துல வா"
"போதுமா"
"தோளோட தோள ஒரசி நில்லு"
"போதுமா"
"அப்பா, போய் ஓன் கூட்டாளிங்கக் கிட்ட சொல்லு. நான் குட்ட இல்லன்னு. ரெண்ருபேரும் ஒரே ஒயரம்தான்"

வீட்டுக்குச் சந்தோஷமாக வந்தேன்-வந்தோம். மீண்டும் அதே திண்ணை, அதே கிழவிகள் கூட்டம். ஒரு பெருசு ஆரம்பித்தது:
"பெரியவரு மகனுக்கு ரொம்ப தெகிரியந்தான்"
"ஏன்"
"ஒரு வயசுப் புள்ளையோட சுத்திட்டுவர்ற"
"ஒனக்கு ஒரு வயசா கமலா?"
அவள் மட்டும் சிரித்தாள். அவளே கேட்டாள்.
"ஏன் கெழவி, மாமா பையந்தானே கூடப்போனா என்ன?"
பெரியவங்களக் கெழவின்னு மரியாதை இல்லாமல் கூப்பிடலாம் போல!
"இல்ல அவருக்கு ரெண்டு வயசு கொறச்சு. ஒத்து வராது. ஊரு தப்பா பேசும்"
சின்னவங்கள அவருன்னு மரியாத போட்டுக் கூப்பிடலாம் போல!
பூட்டோவ விட அவரு பொண்டாட்டி 15 வயசு மூத்தவங்கன்னு சொல்லி, ஜோக் அடிக்கலாம்னு பார்த்தேன். பூட்டோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று விட்டுவிட்டேன்.

"இவுக அம்மாவ நான் அக்கான்னு கூப்புடுறேன். இவன் எனக்கு அக்கா பையன்", என்றாள் கமலா. அவள் தொடைமேல் முதல் முறையாகக் கைவைத்தேன். மறுகையை வாயில் வைத்துக் கொண்டு, தலை குனிந்து, குருகுல மாணவன் போல, காதோரமாய்,
"சரிங்க சித்தி"
"நீ கமலான்னே கூப்புடுடா"
"இல்ல சித்திதான், சித்தி"
"சித்தின்னா அர்த்தம் வேற. சரி அத்தாச்சின்னு கூப்புடு"
"இல்ல சித்திதான், சித்தி"
நான் அவளை, இல்லை அவங்களைச் சித்தின்னு குப்புட்டது எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.

திருவிழா முடியும்வரை நாங்கள் இருவரும், ஒன்றாகவே திரிந்தோம். நான் "சித்தி" எனக் கூப்பிட்டுத் திரிவதை யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் கிளம்பும்போது, தூங்கிக்கொண்டு இருந்ததால், போர்வை விலக்கி, "போய்ட்டு வர்றேன் சித்தி" எனக் காதில் ரகசியம் சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட 100ரூபாயுன் திரும்பினேன். அது அப்படியே இருதயராசு கைக்கு இடம் மாறியது. ஏதோ விட்டுச் செல்வதுபோல் மனம் பதபதைத்தது. பஸ் ஏறும்போதுதான் ஞாபகம் வந்தது, வேகமாய் ஓடிவந்து வாங்கிக் கொண்டு திரும்பினேன், அத்தைமார் முத்தம்.

(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன், இரண்டு வருடங்கள் திருச்சியில் படிப்பு. மீண்டும் நல்ல மதிப்பெண். திருச்சியிலேயே பொறியியல் படிப்பு. வாழ்க்கை திருச்சியிலேயே அமைந்துவிட்டதால், அதிகம் வீட்டுக்குச் செல்வதில்லை. இடையில் எதர்த்தமாக ஒருமுறை அப்பாவுடன் சித்தி பேசிக்கொண்டு இருந்தபோது, நான் பக்கத்தில் இருந்தும், சித்தி என்னுடன் பேச விரும்பவில்லை.

நான் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, ஒருமுறை வீட்டுக்குத் திரும்பும்போது, சித்தி ஒருவருடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, பேருந்தில் போய்க்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்ததும், அவரை எழுந்திருக்கச் சொல்லி, என்னை அமரச் செய்தாள். அவர் முன்னால் சென்று ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டார். நான் "ஏன் என்னிடம் போனில் பேசுவதில்லை?" என சித்தியைத் திட்டினேன். அவள் நான் எதிர்பார்க்க முடியாதவகையில், ஓர் உண்மைக்கதை சொன்னாள்.

திருவிழா முடிந்தவுடன், எங்கள் சொந்தக்காரர்களில் யாரோ ஒருவன் எங்க அப்பாவிடம் நாங்கள் சுற்றியதைப்ப்ற்றி தவறாகப் போட்டுக் கொடுக்க, எங்க அப்பா அத்தை வீட்டுக்குப் போய், "நல்லா படிக்கிற ஏன் பையன வளச்சுப் போடலாம்னு பாக்கிறீங்களா? இதுக்குத்தான் சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்தீங்களா?" என்று காட்டுக்கத்து கத்த, மீண்டும் சொந்தம் விட்டுப்போகக் கூடாது என அத்தை சமாதானம் பண்ணி, அவசர அவசரமாய் தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பட்டதாய்ச் சொன்னாள். பக்கத்தில் இருந்தவர்தான் கணவன் என்றும், ரெண்டு மாதம் ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.
"அழாம சொல்லுங்க சித்தி, இது உண்மையா?"
"உண்மைதான். இந்தக் கதையும், சித்தி என்கிற உறவும். சித்தின்னு நீ கூப்புடுறது எனக்கு மாதிரி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல"
"இது அவருக்குத் தெரியுமா?"
"நான் சொன்னதில்ல. அவரும் கேட்டதில்ல. ஆனா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்"
நான் பஸ்ஸைவிட்டு இறங்கிவிட்டேன், ஏதோ ஒரு இடத்தில்.

அப்பாவிடம் இரவு முழுவதும் சண்டை. அவர் பதிலே பேசாமல் தலை குனிந்து நின்றார். நம்பிக்கை இல்லாத அவர்களிடம் பேசவே பிடிக்கவில்லை. ஆனால் ஊரை நம்பும் பெற்றோர் அவர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் படிப்பிலும், நடத்தையிலும் பூர்த்தி பண்ணி வைக்கும் தன் மகன் மீது நம்பிக்கை வைக்கவில்லையே ஏன்? என்று ஒரே ஏக்கம்தான். எல்லா பெற்றவர்களுக்கும் வரும் ஒரு குருட்டுபாசம் அது என்பது எப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன்பிறகு, சித்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அப்பா சொன்னார். நான் கண்டுகொள்ளவில்லை.

நான் கல்லூரி முடிக்கப் போகும் நேரத்தில், ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தேன். கடைவீதியில், நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, சித்தி ஒரு குழந்தையுடன் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.
"சித்தி, என்ன இங்கே? இது யாரு பாப்பாவா? கொஞ்சம் இருங்க வர்றேன்"
பாப்பாவின் கையில் மாட்டிவிட்டேன், கடன் சொல்லி வாங்கி வந்த வளையல்களை.
"சொல்லுங்க. ஏன் எளச்சிப்போயிட்டீங்க சித்தி?"
"கையில பொறப்பாடு வந்திருக்கு. மந்திருக்க. ஒங்க சித்தப்பா கூட்டிட்டு வந்தாரு"
கையை நீட்டினாள். நான் கையைப் பற்றி இங்கே சொல்ல விரும்பவில்லை (கரு திசைமாறிவிடலாம்).
"சித்தப்பாவா?"
"ஏன் புருஷந்தான். அதுக்குத்தான் அப்பவே சொன்னேன், அத்தாச்சின்னு கூப்புடச் சொல்லி..."
இருவரும் சிரித்தோம். அவர் வந்தார்.
"வாங்க, தம்பி. ரொம்ப நேரமா ஆட்டோ கேக்குறேன். தூரம்னு யாரும் வரமாட்டீங்கிறாங்க. நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க"
"அப்பாட்ட வண்டி வாங்கிட்டு வர்றேன்"
"எனக்குன்னு கேக்காத. ஓன் பிரண்டுக்குன்னு கேளு" என்றாள் சித்தி.
நான் "கமலாவுக்கு முடியல. வண்டி வேணும்னு" எடுத்துட்டு வந்தேன்.

கிழம்பிய என்னை அவர்,
"எனக்கு மனசு சரியில்ல. நீங்களே ஓட்டுங்க"
"சரி"
நான் ஸ்டார்ட் செய்துவிட்டேன். இருவரும் ஏறாமல் நின்றனர்.
"நீ ஒக்காரு கமலா"
"இல்ல"
ஏதோ சித்தி அவர் காதில் சொன்னார்.
"சீ. நீ ஏன் பொண்டாட்டிடீ. அவன் ஓன் தம்பி மாதிரி. ஒக்கரு" அவர்தான்.
"எறங்கு கீழ. ஒரு பக்கம் ஒக்கந்தா பேலன்ஸ் பண்ண முடியாது. ரெண்டு பக்கம் கால் போட்டு ஒக்காரு" அவர்தான்.
மறுத்த அவளை எப்படியோ இருபக்கம் கால்போட்டு அமரச் செய்தார். அவள் என்னை முடிந்தவரை தொடாமல் அமர்ந்தாள், தொடைமேல் கைபோட்ட அதே கமலா சித்திதான். மனதைக் கல்லாக்கி ரோட்டின்மேல் கண்போட்டு, எங்கள் உறவை யார் தப்பாய் புரிந்து கொண்டால் என்ன? சித்தியின் கணவர் என்னைத் தெய்வமாகப் பார்க்கிறாரே அது போதும். அவர்களை 30 கி.மீ. தள்ளி ஒரு கிராமத்தில் விட்டுவிட்டு, "மந்திரிக்கிறது எல்லாம் சரிப்படாது. ஆஸ்பத்திரி போங்க" என்று சொல்லிவிட்டு, சித்தி என்று சொல்லவந்த வாயைக் கட்டுப்படுத்திவிட்டு,
"போய்ட்டு வர்றேங்க" என்று சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

பின் நானும் படிப்பில் மூழ்கிவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, சித்தியும் இறந்து போனாள். எனக்கு சித்தியின் மரணம், தகனம் முடிந்து மூன்று நாட்கள் கழித்தே சொல்லப்பட்டது. இந்த முறை நான் வாதம் செய்யவில்லை. இதே மனநிலையுடன் இருக்கும்வரை நான் வாதம் செய்யப்போவதுமில்லை.

எல்லோர் முன்னிலையிலும் "சித்தி" என்று இப்போது கூப்பிடத் தயார்; சித்தி இல்லை. சித்தியின் மகள், பாப்பா இருக்கிறாள்; நான் வளையல் போட்டால், உலகத்திற்கு அது என்ன அர்த்தமோ? அத்தை இருக்கிறாள். அதே பழைய நம்பிக்கையுடன் கிடைக்குமா, மீண்டும் ஒருமுறை ஒரு அத்தைமார் முத்தம்?

-ஞானசேகர்

Thursday, November 17, 2005

தர்மம் வெல்லும் ?

ஒடித்துப்போடுங்கள்
போதையில் ஆடும்
உங்கள் தராசின் முட்களை!
-பிரேம்குமார்
(http://premkalvettu.blogspot.com/)

நம்பியா தொலைத்தீர்கள்
போதையில் ஆடும்
உங்கள் கண்களின் காட்சிகளை?
-ஞானசேகர்


(இந்த நெடுங்கவிதையில் முதல் பாதியில் போதையில் கண்கள்; இரண்டாம் பாதியில் போதையில் தராசின் முட்கள். நீளம்-அவை-அடக்கம் கருதி சில விஷயங்கள் இலைமறைகாயாக. முயலுங்கள்!)

(இதைத் திரௌபதி (பாஞ்சாலி) சொல்வதாகப் படிக்கவும்)

இடம்: ஏதோவொரு அரண்மனை

பிறந்த வீடு விட்டு
விளக்கேத்த வேண்டி
கணவர் வீடு புகுந்தேன்.

அங்கோ
குடும்பம் என்ற குத்துவிளக்கில்
ஐந்து படுக்கைகள்
ஒற்றைத் திரியாய் நான்!

ஈருடல் ஓருயிர்
என்ற மண்ணில்
ஆருடல் ஓருயிராய்
மாதச்சிக்கல்களையும்,
சகோதரச் சிக்கல்களையும்
சமரசமாய் நடத்தி வந்தேன்!

செய்கையில் இன்று
அதர்மம் இருக்க
பெயரில் மட்டும்
தர்மம் வைத்து
பதிகள் ஐந்தும்
கதியென வந்த
சதி என்னைச் சூதாட
ஓராடையும் உரித்துப் போனான்
நூற்றில் ஒருவன்
சபைக்குள்ளே!

ஏதோ புண்ணியம்!
எனக்குக் கிடைத்தன
கண்ணன் சில்க்ஸின்
கண்ணன் திருடாத
தள்ளுபடி புடவைகள்!

ஆடை களைப்பது அதர்மம்,
களைய வைத்தது தர்மம்!
மலுங்கிய புத்தியில்
முடி விரித்து
சபதம் செய்தேன்.

இரத்தம் சீகையாக்கி
தலை குளித்து
முடி முடித்து
சபதம் முடித்தேன்.
வரலாறு பேசுகிறது
"தர்மம் ஒருநாள் ஜெயிக்கும்"!

(இதை ஒரு பாலியல் தொழிலாளி சொல்வதாகப் படிக்கவும்)

இடம்: சோனாகஞ்ச் போல் ஓர் அங்கீகரிக்கப்பட்ட இடம்

பிறந்த வீடு விட்டு
விளக்கணைக்க வேண்டி
மாமா வீடு புகுந்தேன்.

அங்கோ
இளமை என்ற குத்து(ம்)விளக்கால்
சிலபல படுக்கைகள்
ஒற்றைத் திரியாய் நான்!

ஈருடல் ஓருயிர்
என்ற மண்ணில்
ஈருடல் நான் பிணமாய்
மாதச்சிக்கல்களையும்,
பெண்மைச் சிக்கல்களையும்
சமரசமாய் நடத்தி வந்தேன்!

இரைப்பை இன்று
மூடாமல் இருக்க
கருப்பை மட்டும்
திறந்து வைத்து
உணர்வுகள் ஐந்தும்
சரணெனக் கிடக்க
விதி என்னைச் சூதாட
இன்னொருமுறை உதிர்த்துப் போனான்
முப்பது கோடி உயிரணுக்கள்
ஆணுறைக்குள்ளே!

ஏதோ புண்ணியம்
எனக்கும் கிடைக்கின்றன!
காமக் கறைபூசிக்கொண்டு
ஊரின் சுத்தம் காக்கும் இந்தத்
தள்ளுபடி வாழ்க்கையில்!

கருப்பை காப்பது அதர்மம்,
இரைப்பை காப்பது தர்மம்!
மலுங்கிய புத்தியில்
மடி விரித்து
சபலம் தணிக்கிறேன்.

இரத்தம்
வெளிவந்தால் சிவப்பாக,
வெளி வந்ந்ந்தால்ல்ல் வெள்ளையாக,
மூச்சிறைக்க முட்டுப்பட,
உடல் முழுக்க முத்திரை வாங்க,
உடல் ஒழுக்கம் நித்திரை வாங்க,
ஒற்றை இருட்டறையில்
பல உயிர் பரிமாற,
ஓருயிர் வசிக்காதிருக்க
வழக்கப்போல் காத்திருக்கிறேன்
தோற்றுப்போன தர்மத்தை நம்பாமல்!

ஒரு கண்ணன் வருவானா?
கருப்பை திறக்க.....
இரைப்பை மூடுவதற்குள்!

(முதல் பாதியில் போதையில் இருப்பது திரௌபதியின் பதிபக்தி, ஒரு தனிப்பட்ட போதை. இரண்டாம் பாதியில் போதையில் இருப்பது ஒழுக்கம் என்ற வார்த்தைக்குச் சமூகம் காட்டும் அளவை, ஒரு சமூகப்போதை. இதைப் படிப்பவர்கள் தெளிவாக இருந்தால் சரி)

-ஞானசேகர்

Sunday, November 13, 2005

கடவுளிடம் பேட்டி

கடவுளைப் பேட்டி கண்டு, இவற்றைப்பற்றி என்ன நினைக்கிறார் எனக் கேட்டால்? ஒரு கற்பனைதான்.

புனித நூல்
என்னைக்
கதாநாயகன் ஆக்கிக்கொண்ட
சில கற்பனைக் கதைகளின் தொகுப்பு.
விற்பனையைக் கூட்ட
சில ஆபாசங்களும் உண்டு.
அதிக பிரதிகள் உண்டு.
தயவுசெய்து எரிக்காதீர்கள்!

கோயில்
எனக்கு
மனிதர்கள் தந்த புகலிடம்.
ஆறாம் அறிவின் புதைவிடம்.
அவரவர் கற்பனைக்கேற்றபடி
ஒவ்வொரு வரலாறு!
எனக்கு போட்டியாய்
சினிமாக்காரர்கள்!

சாமியார்
போலிகளைக் கண்டு
ஏமாற வேண்டாம்.
எனக்கு வேறெங்கும்
கிளைகள் இல்லை.
உடைமைகளுக்கும்,
கற்புக்கும்
நான் பொறுப்பல்ல!

மெழுகுவர்த்தி
ரகசியங்கள்
என் மெய்க்காப்பாளர்கள்.
இருள் இருக்கும்
மட்டும்தான் மதிப்பு.
விட்டில் பூச்சிகள் மனிதர்கள்!

ஊதுபத்தி
மறுமையின் கருமை
விலகும் என நம்பி,
இம்மையில்
வாசனையில் மயங்கி,
சாம்பலாவது தெரியாமல்
வரம்கேட்டு ஒற்றைக்காலில்
நிற்கிறான் மனிதன்!

உண்டியல்
சுயநலப் பாத்திரம்
பொதுநலம் என்ற பெயரில்
சுயநலத்தின் எச்சத்தால்
நிரப்பப்படுகிறது!
தயவுசெய்து தமிழர்கள்
சரியாகப் படிக்கவும்
இதன்மேலுள்ள
ஆங்கில வார்த்தையை!

மொட்டை
பொடுகு தலையனின்
கடைசி மருத்துவம்.
இறந்த செல்கள் மேல்
மனிதன் கொண்ட
மகத்தான நம்பிக்கை.
மூடநம்பிக்கைகளின்
உச்சிக்கட்டம்.
எனது அடுத்தக் குறி
புருவ முடிகள்!

காதல்
நான் (கடவுள்),
நான்ன்ன்ன்ன்ன (அதிகாரம்),
நாகரீகம்,
அணுசக்தி,
ஆணுறை
மனிதன் தவறாகப் புரிந்துகொண்ட
இந்தப் பட்டியலில்
இப்போது காதலும்!

சொர்க்கம்
பார் நடனங்கள்
தடை செய்யப்படாத இடம்!

மரணம்
(தாமதிக்கும் நீதி-அநீதி)
நீதி தவறாத
விசாரணை கமிஷன்!

-ஞானசேகர்
(கடவுள், உங்கள் ஒவ்வொருவரைப் போலவும்)

Tuesday, November 08, 2005

கேட்க மறந்த வரம்

மறக்க முடியாதது
முதல் காதலும்
முதல் முத்தமும்.
-யாரோ


முத்தம்.

அவ்வளவாக அறிமுகம் அற்ற
சொற்ப மனிதர்களில்
நானும் ஒருவன்.

மூளையின் மூலையெல்லாம்
தேடிப் பார்த்தேன்
முத்தம் என்னும் முத்திரை
பதிக்கவில்லை
பதிக்கப்படவில்லை

அப்பாவிடம் வாங்க நான்
பிடித்தபிள்ளை இல்லை.
அம்மாவிடம் வாங்க நான்
பிரிந்திருந்த நாட்கள் அதிகம்.
காதலியிடம் வாங்க
காதலும் ஜெயிக்கவில்லை.

இயேசு கிறிஸ்து போல்
தருணம் காத்திருந்தேன்
எனக்கு கிடைக்கும்
முதல் முத்தத்திற்கு.

கடைசி ஆசை சொன்ன தாத்தா
என் முதல் ஆசை முத்தம்
நினைவாகத் தந்து போனார்.
அந்த ஆஸ்துமாக் கிழவனின்
கோழை கலந்த எச்சிலை
என் கன்னத்தின் கரையோரம்
அழுது கழுவாமல்
ஒன்றரைநாள் வாழவிட்டேன்.

காதலி திரையரங்கு இருட்டில் தரும்
முதல் திருட்டு முத்தம்,
மனைவி முதல் இருட்டில் தரும்
முதல் வசிய முத்தம்
இரண்டும் மறக்கப்படலாம்.
கிழவனின் முத்த ஆசை
தீர்த்து வைத்த
அந்த முதல் முத்தம்
நான் கடைசி ஆசை சொல்லும்போதும்
நினைவுபடுத்தப்படும்.

முத்தம் அறிமுகம் ஆகிவிட்டது.
அடுத்து எனது முறை
அறிமுகப்படுத்த.

யாருக்குக் கொடுப்பது?
அம்மாவுக்கு?
பெண்தேட ஆரம்பித்துவிட்டால்?

பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு?
பெற்றோரிடம்
போட்டுக் கொடுத்துவிட்டால்?

நண்பனுக்கு?
இருக்கிற பட்டப்பெயர்
போதாதா?

யூதாஸ் காரியோத் போல்
தருணம் காத்திருந்தேன்
நான் கொடுக்கும்
முதல் முத்தத்திற்கு

இன்னமும்
பரிணாமம் இல்லாமல்
பதுங்கித்தான் இருக்கிறது
எனது முத்த வரலாறும்.

பொறுத்தது பொறுத்தோம்
இத்தனை வருடம்?
இன்னும் கொஞ்சம்
பொறுத்து விட்டால்
ஒரே நேரத்தில்
இருஜோடி உதடுகளில்
ஒரு முத்தம் பதிக்க
எனக்கென ஒருத்தி ஒதுக்கப்படுவாள்.

அதற்குள் மரணம்
என்னை முத்தமிட்டால்?
அடுத்த கணமே
அறுத்தெரியச் சொல்வேன்
யாரும் தொடாத
என் ஜோடி உதடுகளை!
-ஞானசேகர்

Sunday, October 30, 2005

தலைப்பில்லாமல்

உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.
-இயேசு கிறிஸ்து


குழந்தைகள் பசியாற
பயங்காட்டும் வேடங்களில்,
ஆண்மை தொலைத்தவனின்
அராஜக அடக்குமுறைகளில்,
பெண்பித்தன் பதிக்கும்
சொல்லமுடியா காயங்களில்,
பருவம் திறக்கப்படாதவர்கள் செய்யும்
பருவம் மீறிய பரீட்சைகளில்,
பிரம்மச்சாரிகள் சிலரின்
பிரம்மாஸ்திர சோதனைகளில்,
சலித்துப்போன சம்சாரிகளின்
மாற்றம் தேடும் தேடுதல்களில்,

ஆட்டுச் சந்தை நடக்கும் உடைந்த
பிள்ளையார் கோயில் சந்துகளில்,
உடையின் உபயோகம் அறியாமல்,
கெடுக்கப்படும் கொடுமை அறியாமல்,
சுத்தம் சுற்றம் ஏதும் அறியாமல்,
"கொழந்தயக் குடு" என்பது தவிர
வேறு வார்த்தை தெரியாமல்
உடைந்த பிள்ளையார் சிலையுடன்
ஒவ்வொரு நாகரீக ஊரிலும்
வாழ்ந்து வருகிறாள் ஒருத்தி!
-ஞானசேகர்

Friday, October 28, 2005

நிழல் சொல்லும் நிஜங்கள்


சிலிர்த்த சில முடிகள்,
சிமிட்டிய இரு கண்கள்,
எடுப்பற்ற வண்ணப் பின்னணி,
குறைபட்ட ஆடை அலங்காரம்,
பிடித்தவரின் தூரம்,
பிடிக்காதவரின் அருகாமை,
உதடு சொல்லாத சிரிப்பு,
அழகு குறைக்கும் அழுகை,
ஆயுள் குறையும் பயம்,
தொழில்நுட்பக் குறைபாடு
இவற்றுடன் பதிவு செய்யப்படுவதால்
எப்போதும் எடுக்கப்படுவதில்லை
நான் விரும்பியபடி
என்னுடைய புகைப்படம்!
-ஞானசேகர்

Wednesday, October 26, 2005

நிலாக்காதலன்

In the doorway of my heart I hang a board saying, 'It is not a common way'. But Love entered into me and said, 'I can enter anywhere'.

நேற்றிரவு
தூக்கம் கலைத்த
குணா திரைப்படத்தின் முடிவுக்காட்சி....

ஈன்றவளின் இதயம் கேட்ட
இரக்கமில்லாக் காதலி போன்ற
முன்னுதாரணக் கதைகள்....

எப்போதாவது
கனவில் வந்து போகும்
Achilles என்ற கிரேக்க வீரனின்
கணுக்கால் காயங்கள்....

அடிக்கடி அசை போடப்படும்
குழந்தை பாடும் தாலாட்டு....

காதலிக்கும் என் நண்பர்களுக்கு
அய்யாத்துரை முதல்
எட்வர்டு வரை
நான் நீட்டிய பட்டியல்கள்....

இவை அனைத்தும்
என்னை எச்சரித்தும்....
அந்நகரின் வீதிகளில்
அலைந்து திரிகிறேன்...
குரல்கூட குறிக்கப்படாத
அந்த முதல் காதலின்
முகவரிதேடி....
-ஞானசேகர்

Monday, October 24, 2005

பெண்பாவம்

Fathers want their sons to follow their footsteps. Mothers want their daughters to live the life what they missed.

பக்கத்தில் திரும்பிப் பார்க்க
பார்க்க மனமில்லாதவளாய்
ஒரு தாய் படுத்திருக்க
முதல் மூச்சுக்காற்றை
உள்ளிழுக்கக் கஷ்டப்பட்டு
பீறிட்டு அழுது போனாய்!

ஒரு வாரம் கழித்து
மீண்டும் பள்ளி செல்ல
"ஒக்காந்த நீ
எப்ப எந்திருச்ச?" என்று
பயல்கள் கிண்டல் செய்ய
கூனிக் குறுகிப் போனாய்!

மூவேழுக்குள் பெண்களெல்லாம்
பிள்ளைகள் பெற்றிருக்க
முதிர்கன்னி பயம் வந்துவிட
அவசர அவசரமாய்
அதிக விலை கொடுத்து
ஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்!

ஆபத்தான காலம் என்று
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
பச்சை பிள்ளை போல
மண்டியிட்டு மன்றாடும்
கணவனின் காமத்தை
இயற்கை மீறி தணித்துப் போனாய்!

உயிர் கொடுத்த அப்பா
உயிர் பிரிந்து போய்விட
கஞ்சி ஊத்தா மகனெல்லாம்
சுடுகாடு கடைசிவரை போய்வர
அப்பாவுக்குச் செல்லப்பிள்ளை
முச்சந்தியில் திரும்பிப் போனாய்!

குடிகார புருஷன்
கிணற்றில் தவறி விழுந்து
மூச்சுத்திணறி செத்துப்போக
அமங்கலி பட்டத்துடன்
தம்பி கல்யாணத்துக்குப்
போகாமலே இருந்து போனாய்!

தன் பிள்ளைக்கு
முதல் ஆசிர்வாதம்
அக்கா கையால் என்று
தம்பி கேட்டுக் கொள்ள
வீட்டுக்குத் தூரம் என்று
ஆசிர்வாதம் மறுத்துப் போனாய்!

ஒதுக்கப்பட்டது நீதான்!
நகைக்கப்பட்டது நீதான்!
விற்கப்பட்டது நீதான்!
அடக்கப்பட்டது நீதான்!
மறுக்கப்பட்டது நீதான்!
நசுக்கப்பட்டது நீதான்!

உயிர் சுமக்கப் பெண்ணுக்கு
இயற்கை தரும் அங்கீகாரம்
உன் மகளுக்கும் திறக்கப்பட
ஊர் முழுக்கச் சொல்கிறாயே
நீ கூடவா உணரவில்லை
ஒரு பெண்ணின் சோகம்?
-ஞானசேகர்

Saturday, October 22, 2005

இதுதான் காதலா?

(இந்தியாவில் எல்லோராவிலும் (மஹாராஷ்ட்ரா), சித்தன்னவாசலிலும் (தமிழ்நாடு) மட்டும்தான் சமணர்களின் ஓவியங்கள் உள்ளன. சித்தன்னவாசலில் ஒருகாலத்தில் சமணர்கள் மறைவாய்த் தவம் செய்த குகைகள், இன்றைய நாளில் காதலர்கள் மறைவாய்க் கலவி செய்யும் புகல்கள்)

பல்லாண்டுகள் அழியாமல் இருந்த
சித்தன்னவாசல் ஓவியங்களைப் பார்த்து
நீ அதிசயித்தாய்.
உன்னை அங்கேயே விட்டுவிட்டு
மலையில் அலைந்து
ஓவியங்களில் உபயோகிக்கப்பட்ட
மூலிகைகள் கொண்டு வந்தேன்.
அவற்றை வைத்து நீ
நம் பெயர்களைப்
பாறையில் எழுதினாய்.
சில நாட்கள் கழித்து
மீண்டும் அங்கே வந்தோம்.
பாறையில் நம் பெயர்கள் இல்லை.
சோகத்துடன் கீழிறங்குகையில்
சமணர் படுக்கைகளில்
குத்திக் குதறப்பட்ட
சில காதலர்களின்
அழியாத பெயர்கள் இருந்தன.
என்ன செய்ய?
உண்மைக் காதலுக்கு
உருப்படியான சாட்சிகள் இருப்பதில்லை.
-ஞானசேகர்

Friday, October 21, 2005

காதல்

இவை இரு தலைப்புகளில் எழுதப்பட்ட ஒற்றைக் கவிதைகள். ஒரு தலைப்பு கவிதையின் மேலே, மற்றொன்று 'காதல்'.

சாமியார்
---------
கையில் விலங்குகள்
காலில் பக்தர்கள்!

கனடா (Canada)
------
இங்கு
ஒன்றுமில்லை!

சனிக்கிரகம்
-----------
அர்த்தமற்ற
மூன்று வளையங்கள்!

நகம்
-----
கடித்துத் துப்பினாலும்
சதைதான் வேண்டும்
என்கிற பிடிவாதம்!

ஆண்தேனீ
---------
பெண்ணை விட்டிருந்தேன்
கொட்டிப் பார்த்தது!
பெண்ணைப் பிடித்திருந்தேன்
சுற்றிச் சுற்றி வந்தது!

சுனாமி
------
உள்வாங்கி
வெளிகொடுத்து
உள்வாங்கிப் போனது!

அகராதி
-------
ஒரு வார்த்தைக்குப்
பல அர்த்தங்கள்.
பல வார்த்தைகளுக்கு
ஒரே அர்த்தம்.
உறுவார்த்தை வரும்வரை
உற்ற துணைவன்!

தமிழ்
-----
தனக்குமுன் மூத்த ஐவர் இருக்க
கல்லும் மண்ணும் இல்லாதபோதே
வாள் செய்துவிட்டு
மெல்ல செத்துக்கொண்டிருக்கும்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
என்ற திரைகடலோடும் திரவியம்!

பெண்
-----
வரலாறு பார்த்தும்
தானே பட்டும்
இன்னும் திருந்தாத
பலியும் பழியும்
செய்து வரும்
செம்மறி ஆடுகள்!

-ஞானசேகர்

Thursday, October 20, 2005

இடைவேளைக்குப்பின் காட்சியில்லை


எனைத்தவிர வேறொன்றை ரசிக்கவில்லை நீதான்
இவ்வுலகில் எனக்கான பெண்வடிவம் நீதான்

புகழுச்சியில் எனையேற்றி வைத்தவள் நீதான்
அடையாளம் காட்ட அருகிலில்லை நீதான்

என்னைப் பிறர் ரசிக்கச் செய்தவள் நீதான்
உன்னை நான் மறக்கச் செய்யவில்லை நீதான்

என் உயிருக்குச் சாட்சியாய் இருந்தவள் நீதான்
என் காதலுக்குச் சாட்சி சொல்ல மறுத்தவள் நீதான்

நாயகியாய் என் வாழ்வில் வந்தவளும் நீதான்
நாடகத்தில் மறுபாதி வரவில்லை நீதான்

என் கவிதையின் கருவாய் இருந்தவள் நீதான்
என் காவியத்தில் இல்லாத நாயகி நீதான்

கடந்தகால என் கனவை நிரப்பியவள் நீதான்
எதிர்கால என் வாழ்வின் வெற்றிடம் நீதான்

விண்மீனாய் என் வாழ்வை அலங்கரித்தாய் நீதான்
எங்கோ எரிகல்லாய் மறைந்துபோனாய் நீதான்

அன்று என்னைத்தேடி வந்தவளும் நீதான்
இன்று உன்னைத்தேட வைத்தவளும் நீதான்

உன் பேர் சொல்லக் கூசவைத்தாய் நீதான்
உன் பேர்சொல்லிக் கூப்பிட பக்கமில்லை நீதான்

என் பேருக்கேற்றபடி வாழவைத்தாய் நீதான்
உன் பேருக்கேற்றபடி முடித்துக் கொண்டாய் நீதான்

நான் சிரிக்க உடன் சிரித்தவளும் நீதான்
நான் அழுக மௌனமாய் இருப்பவளும் நீதான்

கரைதொடும் நுரைதொட நடுங்கியவள் நீதான்
நீராலே நுரையீரல் நிரப்பிக்கொண்டாய் நீதான்

உன் நாவால் என் வாழ்வைச் செதுக்கியவள் நீதான்
உன் வாய்க்குள்ளே உன் நாவைப் பதுக்கியவள் நீதான்

விரலோடு விரல் கோர்க்க மறுத்தவள் நீதான்
சுருட்டிய விரல் விறிக்க மறந்தவள் நீதான்

விழிதானம் செய்ய என்னைத் தூண்டியவள் நீதான்
சொருகிய விழிகள் திறக்காமல் போனவள் நீதான்

உயிரற்ற உன் உடலைக் காட்டவில்லை நீதான்
என்னுயிரும் நீதான் எனக் காட்டிவிட்டாய் நீதான்

கடற்கரையில் உனைத்தேடி காணவில்லை நான்தான்
ஒருபக்கம் வார்ப்பற்ற செல்லாக்காசும் நான்தான்

-ஞானசேகர்
(சுனாமியில் காதலி தொலைத்த காதலர்களுக்குச் சமர்ப்பணம்)

Tuesday, October 18, 2005

சாகாவரம்

Morality is a matter of money. Poor people cannot afford to have morals. So they have religion.
-Khushwant Singh


கடவுள் செய்தும்,
காதல் செய்தும்,
கடவுள்
காதல் செய்தும்,
கடவுள் காதல் செய்தும்,
காதல்
கடவுள் செய்தும்,
காதல்கடவுள் செய்தும்......
இந்த இரட்டைக் குவியங்களைத்
திருப்திப்படுத்தப் போய்
நீள்வட்டப் பாதையில்
தலைகுனிந்தே சுற்றுகிறது பூமி !
-ஞானசேகர்

Sunday, October 16, 2005

காதலை ஏமாற்று

"போன வருஷம்
இதே திருவிழாவில்தான்
உன் வித்தியாசமான
முகபாவனைகளைப் பார்ப்பதற்காக
வேண்டுமென்றே காணாமல்போய்.....
என்னைத் தேடிய உன் விழிகளைக்
கூட்டத்தில் இருந்து ரசித்தேன்.
அதேபோல் இந்த வருஷமும்....."
என்று மனதில் பேசிக்கொண்டே
அருகில் பார்த்தேன்.
உன்னைக் காணவில்லை!

ஒருமணிநேரத் தேடுதலுக்குப்பின்
என் முதுகு பற்றிய நீ,
"இவ்வளவு நேரமாய்
எங்கே போனீங்க?...."
என்று ஏதோ சொல்ல
எத்தனித்தாய்.
உன்னை மார்பில் சாய்த்து
கண்ணீர் துடைத்தபோது
நடிக்கத் தெரியாத
உன் விழிகள் சொல்லின:
"இவளும்
உன்போலத்தான்
ஏமாற்றப் பார்க்கிறாள்!".

தோளில் கைபோட்டுக்கொண்டு
வீடு திரும்புகையில்
வாயில் சொல்லாமல்
மனதில் சொன்னேன்:
"அடுத்த வருஷம்
நாம் முந்திக்கொண்டு
முதலில் காணாமல் போகவேண்டும்!".
-ஞானசேகர்

Friday, October 14, 2005

கோவிந்தா! கோவிந்தா!

தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும்,
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்தான்
தமிழன் செய்த தவறு!
-வைரமுத்து


"போனா போகட்டும்
கோழிக்குஞ்சுதானே?
'கருடா! கருடா!' என
துதிபாடிய வாயால்
ஏன் இவ்வளவு
கெட்ட வார்த்தைகள்?"

"பருவமழ பொய்ச்சாலும்
கறவமாடு ரெண்டையும் வித்து
கடனக்கொஞ்சம் வாங்கி
நாமுழுக்கக் கால்கடுக்க நின்னு
கண்ணு சிமுட்டுன நேரத்துல
பெருமாளப் பாத்த திருப்(ப)தியெல்லாம்
ஏழுமல தாண்டிப் போச்சுது
களவுபோன வீட்டப் பாத்தப்ப!"
-ஞானசேகர்

Wednesday, October 12, 2005

சரியான தவறுகள்

உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
-இயேசு கிறிஸ்து


அம்மாவின் கல்யாணப் புடவையில்
ஆதாமின் ஆப்பிளைக் கட்டி
கண்களை இறுகமூடி
வார்த்தைகள் கவனிக்காமல்
ஏதோ முனகிவிட்டு
உத்திரம் இருக்கும் உத்திரவாதத்தில்
நாற்காலிக்குக்கூட
சுமையாக இருக்க விரும்பாமல்
அதைவிட்டு விலக.....
துள்ளிக் குதித்தேன்
சந்தோஷமா?
யோசிக்க நேரமில்லை..

ஏதோ பார்க்க நினைத்தேன்.
கண்களுக்கு அனுமதி தந்த இமைகள்
பார்வைக்குத் தரவில்லை!
ஏதோ பேச நினைத்தேன்.
நாக்குக்கு அனுமதி தந்த உதடுகள்
வார்த்தைக்குத் தரவில்லை!
நான் செய்வது சரிதானா?
யோசிக்க நினைத்தேன்.
மூளைக்கு அனுமதி தந்த உடம்பு
கழுத்தருகே ஒடிந்துபோன
முதுகெலும்புக்குத் தரவில்லை!

இக்கணம் நான்
பூமிமீதும் இல்லை!
ஆகாயத்திலும் இல்லை!
இரண்யகசிபு போல....
இயேசுநாதர் போல....
இப்படித்தான் நானும்
செத்துப் போனேன்!
-ஞானசேகர்

Sunday, October 02, 2005

இதுவும் காதலா?

(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)

"காதல் யாருக்கும்
ராசியில்லை.
ஆனாலும் யாரும்
விடுவதாயில்லை!"
-யாரோ


"வாழ்ந்துகொண்டே செத்ததுண்டா?
செத்துகொண்டே வாழ்ந்ததுண்டா?
காதலித்துப் பார்!
ஐந்தங்குல தொலைவில் அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்துப் பார்!"
-வைரமுத்து


அக்டோபர் 2, 2003.
இன்றோடு என் தலையில் கிறிஸ்துமா தைலம் தடவி, எனக்குப் பெயர் வைத்து 18 வருடங்கள் ஆயிற்று. பெற்றவர் பல சுதந்திரங்கள் கொடுத்தும், திருச்சியைவிட்டு வெளியே நான் போனதில்லை.

19 வயதாகியும் வெளியுலக அறிவு இல்லாத என்னை, உலக கஷ்டங்கள் அறியவைக்க எனக்கே தெரியாமல் அப்பா ஒரு திட்டம் போட்டார். "இந்த வருடப் பிறந்தநாளை நான் மட்டும் தனியாக, தஞ்சாவூரில் உள்ள சித்தப்பா குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்" என்று கூறி என்னை மட்டும் தனியாக அங்கே அனுப்பி, சித்தப்பா குடும்பத்தை இங்கே வரச் செய்து, சில கஷ்டங்கள் நான் படவேண்டும் என்பதே அந்தத் திட்டம். நல்லதொரு விஷப்பரிட்சை! இத்திட்டம் தெரியாமல் நானும் சம்மதித்தேன். முதன்முதலில் தனியாகப் பேருந்தில் பயணம், மலைக்கோட்டை நகரிலிருந்து, தலையாட்டி பொம்மை நகருக்கு. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அடுத்த பஸ் எறி, சித்தப்பா வீடு போய்ச் சேர்ந்தேன்.

மாலை 4 மணி. பூட்டிய வீடு. பக்கத்து வீட்டு மாமியை விசாரித்தால், "சாந்தி தியேட்டருக்குப் படத்துக்குப் போகணும்னு சொல்லின்ட்ருந்தா. எதுக்கும் 6 மணிவர வெய்ட் பண்ணு" என பதில் வந்தது. மாடிவீட்டு அக்கா எவ்வளவோ கூப்பிட்டும் அவர்கள் வீட்டில் உட்காராமல், சித்தப்பா வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தேன். ஆறுமணியும் கைவிட்டது. இருட்டு கை பிடித்தது. பயப்படாமல் 3 மணிநேரம், திண்ணையிலேயே ஓட்டிவிட்டேன். எப்படி வந்தது இவ்வளவு தைரியமும், பொறுமையும்?

வீதியில் நடந்து போவதைப் போல, சில ஆண்களின் சந்தேகப் பார்வைகள் என்னைக் குத்திப்பார்த்தன. தெருமுனையில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துவிட்டு, மணி பார்த்தால் 7:30. நேரம் போவதற்குள் வீடு திரும்புவது நல்லது என யாரிடமும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாப் வரை சில வாலிபர்கள் எனக்கு பாதுகாப்பாக வந்தனர்.

இரவு 8 மணி. தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட். வசந்தபவனில் சாப்பிட்டுவிட்டு, திருச்சி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தேன். அது கொஞ்சம் ஓரமான இடம். சாய்ந்துகொள்ள ஒரு தூண் கிடைத்தது. ஏற்கனவே தாமதமாகி விட்டதால் திருச்சி சென்று, வீட்டுக்குப் போன் செய்யலாம் என நினைத்தேன்.

இரவு 8:30 மணி. லேசாகத் தூங்கப் பார்த்த என்னைத் தூண்தான் தாங்கிப் பிடித்திருந்தது. என் பின்னால் இருந்து திடீரென வந்த நான்கு வாலிபர்கள்-அதில் ஒருவன் திண்ணையில் என்னை முறைத்தவன்-என்னை மையமாக வைத்து ஒரு வட்டம் போட ஆரம்பித்தனர்.
"எங்கள்ல யாரப் புடிச்சிருக்கு?"
"இந்த நேரத்துல இப்புடி சுத்துறியே? தொழிலுக்கு வந்தியா?"
"திண்ணையில நல்லா லூக்கு குடுத்த. இப்ப கம்பெனி கொடுக்கிறியா?"
"திருச்சி திருச்சிதான்டா"
இவையெல்லாம் அவர்கள் மையம் நோக்கி வீசிய வார்த்தை அம்புகள்.

மூன்றுபேர் சில எழுதமுடியாத வார்த்தைகள் பேச, ஒருவன் மட்டும் ஒரு பாட்டிலுடன் என்னை நெருங்கினான். திடீரென சம்மந்தமே இல்லாமல் கருப்புச் சட்டையுடன் ஒருவன் வேகமாக வட்டத்தைத் துளைத்து வந்தான். அவனின் இடதுகை என் தோள்மேல்
இருப்பதுபோல், என் தாடை நகரவிடாமல் பிடித்தது. அவனின் வலதுகை என் தலை கோதுவதுபோல், என் தலையை அமுக்கியது. "என்ன கவிதா ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா? நீடாமங்கலம் வரைக்கும் போயிருந்தேன். அதான் லேட்டு. அப்பறம் நாளைக்கு........." என ஏதோ பேசிக்கொண்டே, வட்டத்தைத் துளைத்துக் கொண்டு என்னை ஒரு டீக்கடைநோக்கி இழுத்து வந்தான். "நான் கவிதா இல்ல. என்ன விடுங்க" என கத்தப் பார்த்தால் அவன் பிடிகள் பேச்சைத் தடுத்தன.

ரெண்டு டீ சொல்லிவிட்டு, தொடர்ந்து சம்மந்தமில்லாமல் பேசிக்கொண்டு இருந்தான். நான்கு பேரும் எங்கள் அருகே சம்பந்தமில்லாததுபோல் வந்து நின்றனர். பிடி தளர்த்தி டீ கொடுத்தான். ஒரு திருச்சி பஸ் வந்து நின்றது. அவன் கைகள் என் கையைப் பிடித்திருந்ததால் நான் நகரவில்லை. பஸ் போய்விட்டது. நால்வரும் தலை சொறிந்து தலை மறைந்து போயினர். வீட்டுக்குப் போன் செய்ய அனுமதி தந்து பிடி தளர்த்தினான். என்னைப் பற்றி ஏதும் கேட்காமல், என்னைத் திட்டாமல், யாரையோ பார்த்துவிட்டு வந்தாக ஏதோ விரக்தியாகப் பேசினான், துளிகூட சிரிப்பில்லாமல். ஒரு திருச்சி பஸ் போனது. நான் நகராமல் நின்றுகொண்டிருந்தேன். போன்பூத் அருகில் வேளங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். "இவர்களுடன் போய்க் கொள்கிறேன்" என்றேன். என் ஊர்கூடக் கேட்காமல் நடைகட்டி அவனும் இருட்டில் மறைந்து போனான்.

இரவு 9 மணி. ஒரு தனியார் பேருந்தில் அந்தக் குடும்பத்துடன் ஏறினேன். படிக்கட்டை ஒட்டிய சீட்டில் ஜன்னலோரத்தில் அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். என்ன ஒரு co-incidence? அவன் அருகில் அமர்ந்தேன். ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு வினாடி என் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான். நானே முன்வந்து முதன்முதலில் என் குரலை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன்.
"ரொம்ப தேங்ஸ்"
"கிருஷ்ணா! கிருஷ்ணா!ன்னு கத்துனா கிருஷ்ணன் வரவேமாட்டாரு. இதுக்கெல்லாம் இன்னொரு ஆள எதிர்பார்க்காம, நீங்களே...."
"உங்க பேர் என்ன?"
மறந்துபோனது போல ரொம்ப யோசிச்சு,
"சேகர்"
என் பெயர் கேட்கப்படவில்லை.
"ஊர்?"
திரும்ப அமைதி. பிறகு
"புதுக்கோட்டை"
"புதுக்கோட்டைன்னா?"
திரும்ப அமைதி. பிறகு
"ராணி ஆஸ்பத்திரி பக்கத்துல"
"புதுக்கோட்டைக்கு டேரக்ட் பஸ் இருக்குறப்ப, ஏன் சுத்திப் போறீங்க?"
பதிலே இல்லை. மீண்டும் ஜன்னல் பக்கம்.
கடைசி சீட்டில் இருந்து ஒருவன் எழுந்துவந்து என் முகம் பார்த்துவிட்டு எனக்குப் பின்னால் அமர்ந்தான். இவன் கருவேள மரங்களை ரசித்துக்கொண்டு இருந்தான். தூங்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் அவன் தோள் சாய்ந்தேன். NIT (REC) தாண்டியபிறகு விழித்துப்
பார்த்தால், அவன் அருகில் இல்லை.

"யாரையோ பார்த்ததாக என்னிடம் விரக்தியாகச் சொன்னானே. என்ன சோகமோ? இப்படி உதவி செய்த இவருக்கு, அவர் சொன்ன சோகம் கேட்காமல் போய்விட்டோமே" என நினைத்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன். அப்பாவும், சித்தப்பாவும் வெற்றிபெற்று
விட்டதாகப் பெருமிதப்பட்டனர். நடந்தது ஏதும் சொல்லாமல், அவன் ஞாபகமாய் இருந்தேன். தூக்கம் வராத அந்த இரவில் நான் யோசித்தபோது, என்னை உலகம் அறியச்செய்ய அப்பா போட்ட திட்டம், என் உலகமே அவன் தான் என்ற அளவுக்குக் கொண்டுபோய்விட்டது. சாது நான் மிரண்டு போனேன். மறுநாளே புறப்பட்டேன் அவன் இடம் தேடி. ப்ரண்டு வீட்டுக்கு என்று அப்பாவிடம் பொய். புதுக்கோட்டை ராணி ஆஸ்பத்திரி வீதியெங்கும் அலைந்தேன். அப்படி ஒருவன் இல்லை. அவன் கண்டிப்பாக என்னைச் சமாளிக்கத்தான் ஏதோ ஒரு இடத்தைச் சொல்லியிருக்க வேண்டும். இவ்வீதி பொய்யாகலாம். தூண் பொய்யல்ல. தஞ்சாவூர் புறப்பட்டேன். தூணில் வெகுநேரம் சாய்ந்து நின்றுவிட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொருமுறை சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதும், அவன் ஞாபகம்
அதிகமாய் வரும்போதும் தூணைக் கண்டிப்பாகச் சந்திப்பேன். நிறையமுறை தூண் சாய மட்டுமே சென்றுவிட்டு, சித்தப்பா வீட்டுக்குச் செல்லாமல் வந்ததுண்டு.

"இது காதலா?" என்னைக் கேட்டேன். நான் பதில் இல்லாமல் இருந்தேன். "தந்தையைத் தவிர என்னை அதிகம் பாதித்த ஆண் அவன்மட்டும்தான். இன்னும் உலகுடன் பழகிப் பார்த்தால் வெகு ஆண்களைச் சந்திக்கக் கூடும். இவனும் மறக்கப்படுவான்" என்றேன்
நான். "அவன் மறக்கப்படக்கூடிய ஆள் இல்லை" என்று பதில் சொன்னேன். "முகவரி இல்லாமல் தேடுவது, பெயரில்லாமல் தேடுவது, தூணைத் தேடுவது எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? பைத்தியக்காரத்தனம் இல்லையா?" எனக் கேட்டேன் நான். "சில நேரங்களில் இதயத்தைச் சமாதானப்படுத்துவதைவிட மூளைக்கு அடிமையாவதே உத்தமம்" எனச் சொல்லி வாதத்தை முடித்தேன். அவனும், தூணும் என்னுடைய முதல் ரகசியங்களாகத் தொடர ஆரம்பித்தன.

அக்டோபர் 2, 2004.
இன்று எனக்கு இருபதாவது பிறந்தநாள். தஞ்சாவூருக்குக் கிழம்பினேன். சித்தப்பா வீட்டுக்கு அல்ல. தூணுக்கு. இது ஏழாவது முறை என்று நினைக்கிறேன். மூன்று மணிநேரம் பொழுது ஓடிவிட்டது. வீடு திரும்பினேன். கோயிலுக்குக் கிழம்பினோம். அம்மா அப்பா முன்னாடியே கிழம்பி போய்விட்டனர். நான் புடவை கட்டிக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் தனியாக இருந்த எங்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டினர். கதவைத் திறக்காமல்,
"யாரது?"
"தண்ணி"
புடவை கட்டி முடித்துவிட்டு, செம்பு தேடினேன். அவசரத்தில் பாட்டி காலத்து செம்புதான் கிடைத்தது. முகம் பார்க்காமல் சொம்பைக் கொடுத்தேன். முகம் பார்த்திருந்தால் சொம்பின் கதி? அது அவனேதான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். சிரிக்க வந்தவன், சிரிப்பு அடக்கி தாகம் நினைத்து, குடிக்க ஆரம்பித்தான்.
"ஏன் புதுக்கோட்டைன்னு பொய் சொன்னீங்க?"
".........."
"பேராவது உண்மையா? சேகர்தானே?"
".........."
"இன்னைக்கு எனக்கு உண்மை வேணும்"
"தண்ணி"
"உள்ள வாங்க. எங்க வீடுதான்."
"போங்க வர்றேன்"

"தாயுமானசாமி கைவிடல. அவங்கிட்ட ராணி ஆஸ்பத்திரி வீதியில தேடினது முதல், எழுமுறை தூண் சாய்ந்தது வரை சொல்லி, ஏன் எனக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான வாழ்க்கை உன் விஷயத்தில் மட்டும்? இன்னக்குக் காலையில் கூட தூணுக்கு வந்தேன். கரக்டா இன்னொட நாம பாத்து ஒரு வருஷம் ஆகுது. ஓன் பேருல வேற யாரையுமே நான் பாத்ததில்ல. நீ வந்தால் மட்டும்தான் நான் சரியாக முடியும். நீ இல்லாமலே உன்னைப் பற்றி ஒரு வருடம் நினைத்திருந்தேன். நீ மட்டும் வந்துவிட்டால்?". இன்னும் ஏதேதோ பேச, கேட்க வேண்டும் என சொம்பை நிரப்பிக்கொண்டு ஓடிவந்தேன். வீட்டுக்குள் அவன் வரவேயில்லை. வாசலிலும் இல்லை. அவன் நின்ற இடத்தில் சோனா தியேட்டர் டிக்கட் மட்டும் கிடந்தது.

நான்கு பேரால் ஏமாற்றப்படாமல் காப்பாற்றப்பட்ட நான், ஒருவனால் அவனுக்கே தெரியாமல் அடிக்கடி ஏமாற்றப்பட்டேன். மீண்டும் எனது பைத்தியக்காரத்தனம் தொடர்ந்தது, இப்போது அதிக வீச்சில், இன்னும் நம்பிக்கையுடன்.

அக்டோபர் 2, 2005.
இன்று எனக்கு இருபத்தி ஒன்றாவது பிறந்தநாள். போலந்தின் மன்னர் ஜானுக்கு அடுத்து, ஒரே தேதியில் பிறந்து, பெயர் சூட்டப்பட்டு, இறந்து, வாழ்க்கைத்துணை சந்தித்து, திருமணம் செய்துபோனது நானாகத்தான் இருக்கும். ஆம், பெற்றோரின் கட்டாயப்படி கல்யாணமும், என் விருப்பப்படி ஒரு தஞ்சாவூர் மாப்பிள்ளையும் என் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டனர். கல்யாணம் தஞ்சாவூரில். முதலிரவு திருச்சியில்.

இரவு 9 மணி. கல்யாணம் முடிந்துவிட்டது. முதலிரவுக்குப் பாட்டியின் செம்பை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தநாள் முடிய இன்னும் மூன்று மணிநேரம் இருக்கிறது. நான் மட்டும் மணமாலையுடன், கழுத்து நகைகளுடன், இறந்தகாலத்தை இறக்கவிட மனமில்லாமல், எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில், தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டில் அந்த ஒற்றைத்தூணில் சாய்ந்துகொண்டு நிற்கிறேன்.

திருச்சி தனியார் பஸ் ஒன்று என்னைக் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. டீக்கடையில் T.ராஜேந்தரின் "வாசமில்லா மலரிது" என்ற பாடல் பாடிக்கொண்டு இருக்கிறது. "என்ன சுகம் கண்டாய் இன்றுவரை தொடர்ந்து உனக்கேன் ஆசை?" என்ற வரிகள் எனக்கு நன்றாகவே கேட்டன. அதை
நான் என்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் செய்வது வார்த்தைகளில், எழுத்துகளில் சிக்காத மனுவல்லாத தர்மம்!

அக்டோபர் 2, 2006: ?யா? இல்லை !யா? இல்லை .யா?

-(இக்கதையில் வரும் நான் என்ற வார்த்தை, என்னைக் குறிக்காததால், இவ்விடத்தில் என் பெயர் போடவில்லை)

"நாம் நமக்கே தெரியாமல், எதிர்பார்க்க முடியாத வகையில், யாரோ ஒருவரால் உன்னிப்பாக அன்பு செய்யப்படுகிறோம்"
-ஞானசேகர்