புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, October 20, 2005

இடைவேளைக்குப்பின் காட்சியில்லை


எனைத்தவிர வேறொன்றை ரசிக்கவில்லை நீதான்
இவ்வுலகில் எனக்கான பெண்வடிவம் நீதான்

புகழுச்சியில் எனையேற்றி வைத்தவள் நீதான்
அடையாளம் காட்ட அருகிலில்லை நீதான்

என்னைப் பிறர் ரசிக்கச் செய்தவள் நீதான்
உன்னை நான் மறக்கச் செய்யவில்லை நீதான்

என் உயிருக்குச் சாட்சியாய் இருந்தவள் நீதான்
என் காதலுக்குச் சாட்சி சொல்ல மறுத்தவள் நீதான்

நாயகியாய் என் வாழ்வில் வந்தவளும் நீதான்
நாடகத்தில் மறுபாதி வரவில்லை நீதான்

என் கவிதையின் கருவாய் இருந்தவள் நீதான்
என் காவியத்தில் இல்லாத நாயகி நீதான்

கடந்தகால என் கனவை நிரப்பியவள் நீதான்
எதிர்கால என் வாழ்வின் வெற்றிடம் நீதான்

விண்மீனாய் என் வாழ்வை அலங்கரித்தாய் நீதான்
எங்கோ எரிகல்லாய் மறைந்துபோனாய் நீதான்

அன்று என்னைத்தேடி வந்தவளும் நீதான்
இன்று உன்னைத்தேட வைத்தவளும் நீதான்

உன் பேர் சொல்லக் கூசவைத்தாய் நீதான்
உன் பேர்சொல்லிக் கூப்பிட பக்கமில்லை நீதான்

என் பேருக்கேற்றபடி வாழவைத்தாய் நீதான்
உன் பேருக்கேற்றபடி முடித்துக் கொண்டாய் நீதான்

நான் சிரிக்க உடன் சிரித்தவளும் நீதான்
நான் அழுக மௌனமாய் இருப்பவளும் நீதான்

கரைதொடும் நுரைதொட நடுங்கியவள் நீதான்
நீராலே நுரையீரல் நிரப்பிக்கொண்டாய் நீதான்

உன் நாவால் என் வாழ்வைச் செதுக்கியவள் நீதான்
உன் வாய்க்குள்ளே உன் நாவைப் பதுக்கியவள் நீதான்

விரலோடு விரல் கோர்க்க மறுத்தவள் நீதான்
சுருட்டிய விரல் விறிக்க மறந்தவள் நீதான்

விழிதானம் செய்ய என்னைத் தூண்டியவள் நீதான்
சொருகிய விழிகள் திறக்காமல் போனவள் நீதான்

உயிரற்ற உன் உடலைக் காட்டவில்லை நீதான்
என்னுயிரும் நீதான் எனக் காட்டிவிட்டாய் நீதான்

கடற்கரையில் உனைத்தேடி காணவில்லை நான்தான்
ஒருபக்கம் வார்ப்பற்ற செல்லாக்காசும் நான்தான்

-ஞானசேகர்
(சுனாமியில் காதலி தொலைத்த காதலர்களுக்குச் சமர்ப்பணம்)

No comments: