புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, September 09, 2008

மனிதக்கோயில்

மதமென்னும் மதமோயட்டும் - வைரமுத்து

This world would never be at peace until the last Priest is strangled by the entrails of the last King - George Bernard Shaw


(என்றைக்கு நான்கு பேர் ஒருவனின் எழுத்தைப் படிக்கிறார்களோ, எதைச் சொல்லவேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்ற மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு அன்றுமுதல் வந்துவிடுகிறது. அப்பொறுப்புள்ள ஒரு மனிதனாக, எந்தக் காலத்திலும் இறந்து தொலைக்காத ஒரு கருவை உங்கள் முன் வைக்கிறேன். எல்லா விஷயங்களையும் உள்ளது உள்ளபடி சொல்ல, எனது பெரும்பொறுப்பு என்னை அனுமதிக்கவில்லை. அதனால், இக்கவிதையின் தலைப்பு, கவிதைக்குள் வரும் இடத்தில் மட்டும், அதை ஆங்கிலப்படுத்திப் படிக்கவும்)

காலம்: அடுத்த கவிதையில் உள்ளவர்கள் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகள்

பசிக்கு அழுகும்
பச்சைக் குழந்தை.
ஆண்பெண் வித்தியாசம்
பின்னிரவில் அறிமுகமான
புதுமணத் தம்பதிகள்.
இடப்பக்கம் வளர்த்தவர்கள்
வலப்பக்கம் வளர்ப்பவர்கள்.

இந்நேரத்தில்
பாசம் பார்த்தால்
ஒரே இடத்தில்
918 பேர் விஷம் குடித்து
வரலாறு படைக்க முடியமா என்ன?

காலம்: போன மற்றும் அடுத்த கவிதைகளில் இறந்தவர்களுக்கு இடைப்பட்ட காலம்

ஒற்றை மயிரிழையில்
3 கிலோகிராம்
சுமக்கும் அற்புத மனிதன்!
சுமக்கும் பூமியைச்
சொற்பமாய் மிதித்து
துப்பாக்கிக் குழலுக்குள்
53 கிராமங்கள்!

சுட்டுச் செத்தால்
சொர்க்கம் கிட்டும்
அற்ப நம்பிக்கை!

அப்படியே ஆவதானாலும்
கைப்பிடி களிமண்
ஒருவனின் விலாவெலும்பு
கடவுளுக்குக் காலவிரயம்!

காலம்: போன கவிதையில் உள்ளவர்கள் இறந்தபின் ஓர் ஆண்டு

நொடிக்கு ஒருமுறை
15 மில்லியன் செல்கள்
அழித்து போகும்
அற்புத மனித உடலை
அனலுக்கு அர்ப்பணித்தனர்
அற்பமாய் 48 பேர்!

அடுத்த பிறவியில்
அற்புத வாழ்வை
அடையும் நம்பிக்கை!

அப்படியே அடைந்தாலும்
அவ்வுடலுக்கும்
100 டிரில்லியன் அற்புதங்கள்
நொடிக்கொருமுறை 15 மில்லியன்!

காலம்: ஒரிசா முதல் காஸா வரை பூமியை எப்படி சுற்றினாலும் மதம் நம்மைச் சுற்றும் காலம்

கோயிலுக்குள் மனிதனோ
மனிதனுக்குள் கோயிலோ
கும்பிடத் தவறில்லை
மனிதக்கோயில்கள்
மறுபடியும் தோன்றாதவரை!

சொர்க்கம் காட்டுவது
கடவுள் காட்டுவது
என்பதெல்லாம் பழைய கதைகள்!
நீயே சொர்க்கம்
நீயே கடவுள்
என்பதுதான் புத்திலக்கியம்!

இப்போதெல்லாம்
உயிருக்கு உத்திரவாதம்
பெரும்பாலும் இருப்பதாகப்படுகிறது.
உறுபொருள்
கன்னிமை
காலம்
சுயமரியாதை
ஆறாம் அறிவு
இவை பத்திரம்!

-ஞானசேகர்

Friday, September 05, 2008

ஆண்சிசுக்கொலை

எனது சுதந்திர எல்லைக்குள் எனது உரிமைகளின் எல்லையை மீறாமல் இதோ கடவுளுக்கான எனது இலக்கணக்குறிப்பு. இது நமக்கான இலக்கணக்குறிப்பு என ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்களின் மூலம் தொலைந்துபோன தலைமுறைகளின் மதமற்ற ஆதரவு நமக்குண்டு.

காலம்: கிறிஸ்து பிறப்பிற்கு முன் 3ம் ஆண்டு, கிறிஸ்து பிறந்தபின் 33ம் நாள்

(இரண்டு மாதக்குழந்தை முதன்முதலாய்ப் பேச முடியாமல் அழுத வார்த்தைகள் இவை. மறு பிறப்பென்று ஒன்று இருக்குமெனில், நம்மில் ஒருவரின் குரலாகக்கூட இது இருந்திருக்கலாம்)

மார் முட்டி
பால் குடிக்கிறேன்
வெடுக்கென பிடுங்குகிறான்
மன்னனின் படைவீரன்.

கச்சை கழட்டி
பாலினம் பார்க்கிறான்
பொக்கை வாயில்
சிரிப்பைப் பார்க்கிறான்.

துள்ளிக் குதிக்குமுடல்
செஞ்சூடு உணர்கிறான்
கட்டற்று ஊற்றும்
சிறுநீர் உணர்கிறான்.

எல்லாருக்கும்
கழுத்தில் கீறினான்
எனக்கு மட்டும்
குறியில் கீறினான்.

கண்ணில் நீர் நிற்க,
வாயில் பால் நிற்க,
குறியில் குருதி நிற்க,
எனக்கான சந்ததி நிற்க,
தாயின் இதயம் நிற்க
அவன் நடக்கலானான்
அடுத்த ஆண்குறிதேடி.

ஆண்டு ஆயிரம்
காலம் ஓடியது.
ஆண்டு நூறு
போர் ஓடியது.
வயிற்றுக்கடுப்பில்
மலம் ஓடியது.
நூறு ஆயிரம்
உயிர் ஓடியது.

மக்கள் காக்க
கடவுள் வந்ததாய்
மதம் வந்தது.
மதம் காக்க
ஆண்டு நூறாய்ப்
போர் வந்தது.

ஆணாய் மட்டுமே
பிறப்பவன் கடவுளா?
ஆணாய்ப் பிறந்ததற்காக
கத்திமுனையில் கொல்லப்பட்டு
கடவுள் எனப்பட்டவனையும் காத்த
நாங்கள் கடவுளா?

அறிவு ஆறெனில்
கடவுள் யாரென
கட்டாயம் கண்டிருப்பீர்கள்!

-ஞானசேகர்