புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, February 14, 2010

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது

'மரத்துக்கு அடியில் யாரும் இல்லாத போதுதான் தென்னை மட்டையைக்கூட கடவுள் கீழே விழவைக்கிறார்'. இப்படி ஒரு பழமொழி உண்டு. தென்னைமட்டைக்கே இப்படி ஒரு நம்பிக்கை என்றால், அண்டவெளியில் இருந்து திடீரென விழும் விண்கற்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சகமனிதன் உண்டாக்கிய அணுவாயுதங்களுக்கிடையே வாழும் மக்களுக்கு, வலிக்காமல் சாகடிக்கத் தெரிந்த இயற்கையின் இந்த யுத்திகள் எல்லாம் சொற்பம்! அப்படியொரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான ஏரி ஒன்று, மகாராஷ்டிராவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணிக்கத் தயாரானேன். புனே (Pune) - அவுரங்காபாத் (Aurangabad) - ஜால்னா (Jalna) - லோனார் (Lonar) கிராமம் - Lonar crater lake.

பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏரியைச் சென்றடைய பெயர்ப்பலகைகள் இருந்தன. விண்கல் உண்டாக்கிய பள்ளத்தின் மாபெரும் கரையின், உடைந்தோ அல்லது அரிக்கப்பட்டோ சிதிலமடைந்திருந்த ஒரு பகுதியில் பெயர்ப்பலகைகள் கொண்டுபோய்ச் சேர்த்தன. சிவன், ஹனுமான், பிள்ளையார் உருவம் தாங்கிய சில இந்துமதக் கோவில்கள் இருந்தன. அதற்கு அடுத்தபடியாக என்ன மதம் என்று ஊகிக்க முடியாதபடி சிலமடைந்திருத்த இன்னொரு கோவில். சிவன் கோவிலின் நேரெதிர்புறமுள்ள மலையிலிருந்து எடுக்கப்பட்ட அக்கோவிலின் புகைப்படம்:

சிவன் கோவில் வாசலில் ஒரு நீருற்று இருந்தது. உள்ளூர்மக்கள் சிலபேர் அதிலிருத்து குடிநீர் எடுத்துச் சென்றனர். அவ்விடத்திற்கு வரும் மக்கள் எல்லாரும் அந்நீரில் குளித்தனர். அந்நீரில் குளிப்பதற்காகவே மக்கள் பலபேர் வந்தனர். குளிப்பவர்களின் ஈர அங்கங்களைப் பார்ப்பதற்காக சிலபேர் உயரமான இடங்களில் நின்றிருந்தனர். நீரூற்றின் பிறப்பிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ஓர் ஆராய்ச்சியாளர் அதனுள் நுழைத்த கம்பி முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது எனவும் விசாரித்ததில் தெரிந்தன. சிவன் கோவிலுக்கு இடமிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்:

சிவன் கோவிலில் இருந்து ஏரியின் புகைப்படம்:

சிவன் கோவிலிலிருந்து நீரின் பாதையில் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த நீருடன், ஒரு குகை நீரும், இன்னொரு சிறுகோவிலிலிருந்து வடியும் நீரும் சேர்ந்து ஒரே நீராக ஏரியை நோக்கிப் போயின. கரடுமுரடான பாதையையும், மரஞ்செடிகளையும், விளைநிலங்களையும் தாண்டி ஏரியை அடைந்தோம். நட்சத்திரங்களில் இருந்து வந்த நீரென மக்கள் நம்பும் அந்த ஏரி, கரைகளில் பாசிபடர்ந்திருந்தது. ஒரு பேரரக்கனின் இரத்தத்தை நீராகவும், சதையை உப்பாகவும் கொண்டிருப்பதாகப் சொல்லப்படும் அந்த ஏரி, பல பறவைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி, விண்கல் உண்டாக்கிய பெருங்கரைவரை முடிந்தவரையில் அகழப்பட்டிருந்த விவசாயநிலங்கள்!

ஏரிக்கரையோரம் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். விவசாய நிலங்களின் மொத்த பரப்பு 25 ஏக்கர். 10 பேர்களுக்குச் சொந்தமான நிலங்கள். அவர்கள் சொன்ன ஆச்சரியமான விசயம் என்னவென்றால், சிவன் கோவில் நீருடன் சேர்ந்துவரும் மொத்த தண்ணீரையும் 10 நாட்களுக்கு ஒருவர் என்றமுறையில் விவசாயத்திற்கு உபயோகித்துவிடுவார்களாம். அப்படியென்றால் ஏரித்தண்ணீர்? விவசாய நிலங்களின் கசிவுநீர் (Seepage water) ஏரியை அடைகிறது என்பது எனது கருத்து. ஏரிநீர் மனித உபயோகங்களுக்கு உகர்ந்ததல்ல எனவும், சில தோல்வியாதிகள் குணமடைய சிலபேர் அதில் குளிப்பதாகவும் சொன்னார்கள். நீரில் மிதக்கும் சில கற்கள் ஏரிக்கரையோரம் உண்டென்றும், அவை நட்சத்திரங்களில் இருந்து வந்ததென்றும் சொன்னார்கள்.


இணையத்தில் கிடைத்த சில அறிவியல் பூர்வமான தகவல்கள் உங்களின் வாசிப்பிற்கு:

1. உலகின் முன்றாவது பெரிய விண்கல் பள்ளம் (crater).

2. 90000 km/h வேகத்தில் பயணித்த 2 மில்லியன் டன் நிறையும் 60மீட்டர் அகலமுள்ள விண்கல் மோதி, பாசால்ட் பாறைகளின் மேல் உண்டான ஒரே ஏரி.

3. வயது 52000க்கு மேல்.

4. இன்றைய தேதியில் செயற்கையாக உருவாக்க 6 மெகா டன் அணுகுண்டு தேவை.

5. பள்ளத்தின் விட்டம் 1.8 km. பள்ளத்தின் வாயிற்குக்கீழ் 137 மீட்டர் ஆழத்திற்குக்கீழ் இருக்கும் ஏரியின் சராசரி விட்டம் 1.2 km. ஏரியின் ஆழம் 150 மீட்டர்.

6. ஏரியின் மையநீர் காரத்தன்மையும் (ph 11), அதைச் சுற்றி நன்னீரும் (ph 7) என இரண்டு மாறுபட்ட அடுக்குகள் உண்டு. இவ்விரண்டு அடுக்களிலும் வாழும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.

7. ஏரிக்கு நீர் தரும் சிவன்கோவில் ஊற்றுக் கூட்டணிகளும், மழைநீரும் நன்நீர் உடையவை. மையநீரீன் காரத்தன்மையின் ஆதிமூலம் இதுவரை மர்மம்.

8. பள்ளத்தின் கரையின் சாய்வு (slope) 75 டிகிரி.

9. பள்ளத்தின் சரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்குத் தேக்கு, புளியம் என ஒரு குறிப்பிட்ட மரங்களின் வரிசை இருக்குமெனப் படித்தேன். தேக்கு மரங்களை வெட்டுபவர்களைப் பார்த்தேன். ஆனால் மரங்களின் அப்படியொரு ஒழுங்கு வரிசையைக் காணமுடியவில்லை.

10. ஒரேயொருமுறை இவ்வேரி வற்றியதாகவும் மின்னும் படிகங்கள் தென்பட்டதாகவும் தகவல் உண்டு.

தாய்நீரில் சோப்பென்ற நச்சு கலத்தல், காக்கும் வனம் அழிக்கப்படுதல், விவசாயம் என்ற பெயரில் முகம் கிழிக்கப்படுதல் என்று கொல்லப்படும் இந்த ஏரியைக் குரங்கு, பாம்பு, மொழி, தூரம் எல்லாத் தடைகளையும் தாண்டிப் பார்த்துவிட்டேன்.

'52000க்கு முன் ஓர் 26' என்ற அற்ப சந்தோசம் தேடும் சொற்ப ஆயுள் கொண்ட சாதாரண மனிதன்!

- ஞானசேகர்