புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, March 29, 2008

ஹோமோசெப்பியன்ஸ்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
- திருவள்ளுவர்

இனி
மிருகநேயம் என்றொரு
வார்த்தை தேவைப்படலாம்
- பிரேம்குமார்


(வழக்கம்போல் ஒருதேதி - ஓர் இடம்- பெயரில்லாத ஒரு பெண் கதாபாத்திரம் - இவற்றுடன் இன்னொரு கதை. அர்த்தத்தையே மாற்றிவிடும் அளவிற்கு எழுத்துப்பிழைகள் எதுவும் இக்கதையில் இல்லை)

இன்னக்கி தைமாசம் ரெண்டாந் தேதி. மாட்டுப் பொங்க. எனக்கு தெரிஞ்சி மாட்டுப்பொங்க அன்னக்கெ மாட்டுவேடிக்க நடக்குறது சோசன் அண்ணனோட அக்கா ஊர்ல மட்டுந்தான். வருசக்கடேசில மாசிபோயி பங்குனிமாசம் மாடுவுட்ற ஊரெல்லாங்கூட இருக்கு. ஆனா மொத நாளே மாட்டுவேடிக்கை பாக்குறதுங்குறது ஒரு தனிசொகங்க. மாட்டுவேடிக்கங்கறது உசுருல கலந்துபோயிட்ட ஒண்ணு. பொங்கலுக்கு ரிலீஸான ரஜினிபடமானாலும் சரி, செத்துப்போன ஊர்ப்பெருசானாலும் சரி, வயசுக்குவந்த மொறப்பொண்ணானாலும் - எல்லாம் தை மூணாந்தேதிதான். மாட்டுவேடிக்க டிவியில பாக்குறவங்களுக்கு அது ஒரு கொடுரமாத்தான் தெரியும். எனக்கும் மொத ரெண்டு வருசம் பாக்குறப்ப அதே நெனப்புதான். அப்பறம் பழகிடுச்சி.

மார்கழி மாசமே மாட்டுவேடிக்க நடக்கப்போறதுக்கு ஒத்திக பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நாயித்துகெழம நாயித்துக்கெழம ஒரு அரமணிநேரத்துக்குச் சும்மா சாத்ரப்புக்கு ஒரு ரெண்டு மாட்ட விட்டு எறிப் பாப்பாக. பொதுவா மாடு ஓட்டிக்கிட்டு வர்ற ஆளு, தொணையாளு ரெண்டு பேத்தோடத்தான் வருவாப்புள்ள. மால, கயிறு, கொம்பு ஜோடன, பெயிண்ட்டு, கலருபொடி இவ்வளவுதான் மாட்டுக்குன்னு செலவு ஆகும். ஆனா தொணையாளுக்கு ஆகுற செலவுல இன்னொரு மாடே வாங்கிடலாம். காலச்சாப்பாடு, சாராயம், மத்தியானச் சாப்பாடு, கைக்காசு. இருந்தாலும் தலச்சம்புள்ள பெத்த தம்பதிக மாதிரி, நம்மாளு நம்பிக்கைய தளரவிடாம ஒவ்வொரு வருசமும் கூட்டணியத் தொடருவாப்புள்ள.

எல்லா வருசமும், சோசன் வீட்டுக்குப் போயி வண்டியில அவரக் கூட்டிக்கிட்டுத்தான் வேடிக்க பாக்கப் போறது. சோசனோட போகலன்னா எங்க வீட்டுல விட மாட்டாக. தொணயாளு இல்லன்னா சோசன அவரு பொண்டாட்டி விடாது. ஆமாங்க, சோசன் கல்யாணம் ஆனவரு. அவருல பாதி வயசுதான் எனக்கு. ஓடிக்கிட்டு இருந்த ஒராளுதண்டி பாம்பு வாலப் புடிச்சி, வரப்புல அடிச்செ கொன்னாரு. அதுல இருந்து சோசன் என்ற அர்ச்சுனனுக்கு, சேகர் என்ற கிருஷ்ணன் தான் தைமாசம் ரெண்டாம் தேதியன்னக்கி டிரைவரு.நான் வார் டவுசரு போட்டுருந்த காலத்துல, சோசன் அண்ணனும் ஒரு மொரட்டு பாச்சமாடு வச்சுருந்தாரு. அந்த மாட்டுக்குச் சினிமா சான்ஸெல்லாம் வந்துச்சு. சேரன் பாண்டியன் படத்துக்குத்தான். மாட்டக் கொல்லுற சீனமட்டும் எடுக்காத, என் மாடு கண்டிஷனா நடிக்குமுன்னு ஒரே பேச்சா சொல்லிடாரு. அப்புடி வளத்த மாட்ட, வெவசாயமுல்லாம் பாக்கமாட்டேன்னுட்டு சிங்கப்பூரு போறதுக்கு அந்தக்காலத்துலேயே 5 ரூவாக்கி வித்துட்டாரு. போன ஆறே மாசத்துல, ஏஜெண்டு பண்ணுல பிராடுல, சிங்கப்பூரு கவர்மண்டு சோசனோட சேத்து பத்துபேத்த திருப்பி அனுப்பிருச்சு.

சோசன் வீட்ல இல்ல. அந்த அக்கா, எனக்கு டீ போட்டு கொடுத்தாங்க. மாட்டுமடி, அடுப்படி, ஏன் வயிறு இப்புடி எங்கையும் தண்ணியத் தொடாம பாலு பாழ போச்சு. மாட்டுக்காரா ஆளும், தொணையாளுகளும் தண்ணிப்போடுல இன்னக்கிப் பண்ணப்போற கூத்த நெனச்சி சிரிச்சிக்கிட்டு இருந்தேன். நேரந்தான் போகுது சோசனக் காணாம். கீழத்தெரு தம்பிராசோட பசுமாடு ஒண்ணு செனையா இருக்காம். குட்டி தல பொறண்டு வலியில துடிக்கிதுன்னு வெள்ளனா விடியக்காலையில போனவரு இன்னும் வல்லையாம். வண்டிய எடுத்துக்கிட்டு தம்பிராசு வீட்டுக்கே போயிட்டேன்.

மாடு தரையில படுத்து இருக்கு. வாயிக்குள்ள சோசன் கையி. பின்னங்காலு ரெண்டும் தம்பிராசு கையி. முன்னங்காலு ரெண்டும் இன்னொரு ஆளு கை. இருங்க இருங்க. கொஞ்சம் இருங்க. அந்த மாட்டோட கண்ண நீங்க பாக்ககலல்ல. கொஞ்சம் இருங்க. சோசன் மாட்டோட கழுத்த, என்ன புடிக்க சொல்றாரு.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

எல்லா ஊருலயும் பொறக்குற வழியும், பொறுக்குற வலியும் ஒண்ணுதாங்க. பாஷ மாறலாம்; படைப்பாளி மாறலாம்; ஜீவராசி மாறலாம்; காயீனப் பெத்த பொண்ணுல இருந்து, வருசப்பொறப்புக்கு டைம் வெச்சு பெத்துக்குற பொண்ணுவரைக்கும் வலிங்கிறது ஒண்ணுதான். கள்ளிக்காட்டு இதிகாசத்துல வைரமுத்து சொல்லாததையா நான் புதுசா சொல்லப் போறேன். வேடிக்கலுக்கு நேரமாச்சு.

"சோசா, ஒனக்கு வேற தனியா சொல்லணுமா? வேடிக்கலுக்கு நேரமாச்சுயா. ரொம்ப சாப்புடாதையா, அப்பறம் மத்தியானம் கரிச்சோறு எறங்காது".
மாட்டு வேடிக்கலுக்குப் போற புருஷனுக்கு பொண்டாட்டி, சொல்ற அதே பாரம்பரிய டயலாக்க இந்த அக்கா வருசாவருசம் ஒலிபரப்பிறும். ஒரு பிரசவத்தின் காரணமாக அவ்வொலிபரப்பு இரண்டு மணிநேரங்கள் தாமதமாகியது. என்னைத்தவிர வேறு யாரும் தடங்கலுக்கு வருந்தியதாகத் தெரியவில்லை.
"அந்தச் சட்டய வெய்ங்க. நேத்துதான் தொவச்சேன். வேடிக்க முடிஞ்சோடன நேரா பொழுது சாயிறதுக்குள்ள வீடுவந்து சேந்துடுங்க. சேகரு, ஒன்ன நம்பிதான் அனுப்புறேன். மந்தைக்குள்ள போகாதீக. கண்டது கடையத தின்னு வயித்த கெடுத்துக்காதீக". ஒவ்வொரு பித்தானுக்கும் ஒரு அட்வைஸ்.
"யக்கா, நாங்க என்ன சின்னபுள்ளயா. சீக்கரம் அனுப்புக்கா"
"இவரு பையில பத்தாயரம் ரூவா வெச்சுருக்காரு. இவரு அக்கா வீடு போன ஒடன, அவங்ககிட்ட அத மறந்துடாம கொடுக்கச் சொல்லு"
"யோவ், ஏன்யா கும்பல்ல பணமெல்லாம் எடுத்துக்கிட்டு?"
"விட்றா சேகரு. இவ சொன்னா கேக்க மாட்டா"

ஒருவழியா கெழம்பியாச்சு. இப்புடி நாங்க போன ஒடனயே, பதுனோரு மணி பஸ்ஸீக்குப் பொம்பள ஆளுகளோட சோசன் பொண்டாட்டியும் வந்துடும். அதே நெனப்புலதான், நானும் ஒண்ணும் சொல்லிக்காம போனேன். ஆனா,....

ஆனா,"யோவ், வண்டிய ஏன்யா அடப்பங்கொளத்துக்குள்ள விட்ற. சாராயமா? கிழிஞ்சது. கீழு கீழப்பா கீழ விட்டு ராயப்பாங்குற கதயா, இன்னிக்கி வேடிக்க பாத்தது மாதிரிதான்". கர்ணனப் பாடினவங்களும், அடப்பங்கொளத்துக்குக்குள்ள போனவங்களும் வெறுங்கையா திரும்பினதுல்ல. சோசனும் அதுக்குத் தப்பல. இந்த வருசம் கொஞ்ச அதிகந்தான். ஆலமரத்திடில ஒக்காந்து, ஒரே மடக்குல எல்லாத்துலயும் முடிச்சுட்டாரு.
"ஒரு பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா? சின்னப் பையனா இருந்தாலும், நீயே ஞாயம் சொல்லுடா சேகரு"
ஏதோ ஒரு விபரீதத்த அடப்பங்கொளத்து வெடிச்ச சகதில வெதக்கிறது புரிஞ்சது. சில நேரங்கள்ல உண்மையான சாட்சிகள மறக்கிறதே உத்தமுன்னு, செல்லாத சாட்சிகள்ன்னு ஊருக்கே கத சொன்னவன் நானு. வாயத் தொறப்பனா? மூச்.

"வேடிக்கலுக்கு வரமாட்டாளாம். கேட்டா வீட்டுக்குத் தூரமாம். எங்க அக்கா மூஞ்சில முழிக்க மாட்டாளாம்; நானும் முழிக்கக்கூடாதாம். நேத்து வந்தவடா இவ. எச்சிப்பாலு சொந்தத்தப் பிரிக்கிறதுக்கு இவ யாருடா?"
சோசனுக்குத் தலகாலு தெரியல. எனக்குத் தலகாலு புரியல. ஊசிப்போன கடலைய விரும்பிச் சாப்டேன்.
"சொல்றா சேகரு? பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா"
தப்பிக்க வழி கெடச்ச மாதிரி, அந்த வழியா வேடிக்க மாட்ட ஓட்டிக்கிட்டு போயிக்கிட்டு இருந்த, சின்னதம்பியப் பார்த்து கத்தினேன்.
"என்னண்ணெ, இந்த வருஷம் எவ்ளொ பந்தயம்?"
"ஐனூறு ரூவா. கொம்புல முடிஞ்சிருக்கேன். எந்தக் கொம்பன் எடுக்குறான்னு பாப்போம்"
"பாப்போம்டா கெம்புளி". சோசன் ஏந்திருச்சாச்சு. வண்டிய ஒர்ர்ரே தட்டு, சோசன் அக்கா வீட்டு வாசப்படில தட்டிக்கி முன்னாடிதான் நிப்பாட்டுனேன். நாலு வயசு பேரன் தட்டியத் தொறந்தான். கறிக்கொளம்பு வாசனை, தட்டிய திரும்ப சாத்திடுச்சு. வண்டிய வீட்டு ஓரத்துல வழக்கம்போல நிப்பாட்டிட்டு, திரும்பிப் பாத்தா, சோசன் இன்னும் வெளியவே நின்னுக்குட்டு இருக்காரு. சோசனுக்கு நேராத்தான், அவரு அக்கா குடும்பம் முழுசுமே பொணய ஓட்டிக்கிட்டு இருந்துச்சு. யாரும் சோசனக் கண்டுக்கல. செல சொந்தக்காரங்க, சோசன போயி கூப்புட்டாக. அவரு அசஞ்ச பாடில்ல. செல மாதிரி நிக்கிறாரு.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

தரயெல்லாம் சோதன போடுறவ மாதிரி, மண்ணப் பாத்துக்கிட்டே சோசனுக்கிட்ட போனா அக்கா. தட்டியத் தொறந்தா.
"உள்ள வா சோசா"
"நான் வர்றது இருக்கட்டுங்க்கா. நீங்க கேட்ட பணத்தக் கொண்டாந்து இருக்கேன். ஏன் மாட்டக் குடுத்துடுங்க. பாத்து ரெண்டு நாளாச்சு"
"மொதல்ல உள்ள வா. திருவிழா கூட்டமுல்லாம் ரோட்டுல வரப்போக இருக்கு. சாப்டுட்டு பொறுமையாப் பேசுவோம்"
"வாயில்லா சீவன...."
"என்னா சோசப்பு. வம்புழுக்க வந்துருக்கியா?" இதுதாங்க அக்கா புருசன் - சோசன் மாமா. பொணய ஓட்டிக்கிட்டு இருந்தவரு, சட்டுனு மாட்ட விட்டுட்டு, சோசனப் பாத்தாரு. அவரு பையன், மாட்டுக்கயிறு தரையில விழுறதுக்குள்ள, அதப் புடிச்சு பொணயலத் தொடந்து ஓட்டுனாரு.கண்ணசைவுக்கு வேல பாக்குறது ரெண்டு ஆம்பள சிங்கக்குட்டிகளப் பெத்து இருக்குறதுனால, எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு சல்லிவேரு இவருதான். ஒரு பொம்பள சிங்கக்குட்டியும் இருக்கு. அதுக்குக் கல்யாணமாயி, ஒரு சிங்கக்குட்டி முக்கா தயாரிப்புல இருக்கு.

"சோசா..." மருதூரு பெருசு ஞாயம் சொல்ல
த ருச்சுச்சு.
ள் தி
ளா ந்
டி ஏ
ச்சே. என்ன மட்டமான சரக்குய்யா இது? வாய் இந்த நாத்தம் நாறுது.
"சோசா, மாமாவும் அக்காவும் எல்லா விசயத்தையும் ஏற்கனவே எனக்கிட்ட சொல்லிட்டாக. நல்ல நாளும் பெரிய நாளுமா, அதப்பத்தி இப்பப் பேச வேணாம். வேடிக்க முடியட்டும். ரெண்டு பெரிய மனுசங்கள வெச்சு ஞாயம் பேசுவோம்"
"இந்த ஆளுக்கிட்ட என்ன மாமா ஞாயம் பேச வேண்டி இருக்கு"
"இந்த ஆளு". இந்த வார்த்தக்கிப் பலவெதமான பின்விளைவுகள். அக்கா மண்பரிசோதனையை விட்டுவிட்டு, சோசனைப் பார்த்தாள். நல்லவேள! அவளுக்கும் ரெண்டு கண்ணுதான். நெத்தில பொட்டுமட்டும்தான் இருந்துச்சு. அக்காவிட்ட வேலைய மாமா தொடர்ந்தார். வேறென்ன? மண்பரிசோதனை. பொணய ஓட்டுற மகன், ஒரு மாட்டை ஓங்கி அடித்தான். இன்னொரு மகன் எழுந்திரிக்கையில், கட்டில் கம்பியில் மாட்டி, கைலி கிழிந்தது. பாம்ப்புக்கறி திங்கிற ஊர்ல வாக்கப்பட்டா, நடுமுண்டம் எனக்குத்தான்னு எனக்கு லேச ஒறக்க ஆரம்பிச்சிச்சு. தட்டிக்கி வெளில வண்டியோட வந்தேன். சோசனுக்குப் பின்னாடி, லேசா அவரப் புடிச்சிக்கிட்டு நின்னேன்.

"சோசா, ஓன் பக்கமே ஞாயம் இருக்குறதா வெச்சுக்குவோம். பொண்ணக் குடுத்துருக்கியல்ல? நீதான் பணிஞ்சு போகனும்" மருதூரு பெருசு.
"எத்தன வருசம் மாமா பணிஞ்சு போறது? பொண்ணக் கட்டி குடுத்துருக்கோம்; தாய்மாமன் இல்லாத எனக்கு தாய்மாமன் மொற எடுத்து சீரெல்லாம் செஞ்சாரு. அதுக்காக எத்தனநாளுதான் பணிஞ்சு போறது?"
சோசன் தோளப் புடிச்சு சட்டென ஏன் பக்கம் திருப்புனேன். யாருக்குமே அடங்காத மாடு, தொத்த எசமானுக்கு மடங்குற மாதிரி, சோசனுக்கு ஒறக்கிற மாதிரி எனக்குப் பேசத் தெரியும். சோசனத் தனியாக் கூட்டிக்கிட்டுபோய் அமைதிப்படுத்துனேன். என்ன சொன்னேன்னு எல்லாம் கேக்காதீங்க?

"சரி மருதூரு மாமா. நல்ல நாளும் பெரிய நாளுமா, ஞாயம் பேச வேண்டாம். வேடிக்க முடிஞ்ச கையோட, இதெ எடத்துல பஞ்சாயம் பண்ணாம நான் போறதில்ல"
"நானே பண்ணி வெக்கிறேன்யா. இந்தாம்மா, ரெண்டு தம்பிக்கும் எல போடு"
"நீங்க இதுல தலயிட வேண்டாம் மாமா. சொந்தங்கெறதே சொதப்பல்ன்னு ஏன் ஒடன்பெறப்பு எனக்கு கத்துக் கொடுத்துருச்சு. இதெ ஊர்ல இருந்து, ஒடயாத்தெருல ஒரு பெரிய மனுசன், வெள்ளாளத்தெருல ஒரு பெரிய மனுசன், குடியானத்தெருவுல ஒரு பெரிய மனுசன் நீங்களே கூட்டிக்கிட்டு வாங்க. ஞாயம் பேசுவோம்".

சோசன் சொன்னதுக்கு யாருமே சரின்னு சொல்லல. ஆனா, அதுதான் முடிவுன்னு நாங்க ரெண்டு பேரும் வண்டிய எடுத்துக்கிட்டு, மந்தக்கிப் போய்ட்டோம். ரெண்டு மணிக்கு மொத தொழு தொறக்குறது. ஒரு மணிக்கெல்லாம் சனங்களும், போலீஸும், ஐஸ்காரனும் கூட ஆரம்பிச்சாச்சு. வண்டிய ஏதோ ஒரு வீட்டு வாசப்படில நிப்பாட்டிட்டு, மந்தைக் கடலில் இரு மழைத்துளிகள் கலந்தன. அதுல ஒண்ணு அமிலமழை.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

நாங்க ரெண்டுபேரும் வேடிக்கலுக்குன்னே தனிசட்டயும், கைலியும் வெச்சிருப்போம். அந்த ஒருநாள் மட்டும்தான் அதப் போடுறது. தொழு தொறக்குறதுக்கு, அரமணி நேரத்துக்கு முன்னாடியே, மொத தொழுவோட வாசல்ல மொத ஆளா நிப்போம். அடப்பாவிகளா, அவுத்துவிட்ட மாடு, மொதல்ல ஒங்களத் தாண்டித்தானே போகணும். குத்திக்கித்தித் தொலக்காது? இப்படியெல்லாம் எங்களப் பாக்குறவங்க பயப்படலாம். எங்களுக்குப் பயங்கெடையாது. வளத்தியான வாத்தியாரு வகுப்புல மொத பெஞ்சு பய தூங்குறது மாதிரி, வெளில வர்ற மாடு தொணையாளுக தொந்தரவுல இருந்து தப்பிசோம்டான்னு நேராத்தான் ஓடும். அப்புடி போற எல்லா மாட்டயும் தொட்டுப் பாக்குறது. செல சமயம் மாடு எங்கள நெருங்குனா, தென்னாப்பிரிக்காவுல குதிரங்களுக்குக் காந்தி செஞ்ச அதெ டெக்னிக்குதான்; கீழ படுத்துக்க வேண்டியது. இதுமாதிரி பல விஷயம் இருக்குதுங்க. ஜீவரசிகளுக்குப் பயந்துபோய், வீட்டுல அடஞ்சு கெடக்காம, மந்தையில வந்து நின்னுபாத்தா, காலா ஏன் கவட்டிக்கிக் கீழ வாடா, இப்புடி தைரியமா சொல்லலாம். இதத்தவர எங்க எங்க தாவணி போட்ட தீபாவளி நிக்கிதுன்னு பாத்து வெச்சுக்கிறது. ஒவ்வொரு மாட்டையும் தட்டிவிட்டுட்டு, ஒரு சிரிப்பு சிரிக்கிறது. தொழு மாறுரப்ப, துண்ட உருவி தலக்கிமேல சுத்துறது. தீபாவளி ஐஸ் வாங்குனா, நாங்களும் வாங்குறது. வேணும்னே மைக்குகாரங்கிட்ட போயி, பத்துரூவா குடுத்து, ராமராஜன் ரசிகர் மன்றமுன்னு சொல்லச் சொல்றது.

இது எதுவுமே இந்த வருசம் நாங்க பண்ணல. மடியில கணம், வழியில பயம். 10000 ரூவா. ரெண்டு மணில இருந்து, அஞ்சு மணிவர ஒரு கோயிலு கோபுரத்து சாமிமேல ஒக்காந்துகிட்டு, மாடு பாத்தோம். மந்தக்குள்ள நின்ன குடிகாரப் புருசன, ஒரு பொம்பள அடிச்சு இழுத்து வந்துச்சு. மந்தைக்குள் ஒரு பெண் என நாங்கள் வெட்கப்பட்டோம். போன வருசம் கைலியோட மாடு புடிச்சவன் ஒருத்தன், புதுப் பொண்டாட்டியோட கொடக்கிக் கீழ பஞ்சாயத்து ஆபீஸ் மொட்ட மாடில நின்னான். அடக்கியவன் அடக்கப்பட்டான் என நாங்கள் சிரித்தோம். ஒருவருக்கு மாடு முட்டி, குடல் சரிந்தது. நாங்கள் வருத்தப்பட்டோம். மூன்று யுகங்கள் சோகமாக முடிந்தன.

சோசன் அக்கா வீட்டுக்குத் திருப்புனோம். கட்டில்ல நாலஞ்சு கெழடுக. ரெண்டு காப்பி சாப்புட்டுச்சு. ரெண்டு எற்கனவே சரக்கு சாப்புட்ட சாயல். யாரும் சோசனை வாயால் அழைக்கவில்லை. மண்ணப் பாத்துக்கிட்டே கைகூப்பினார்கள். சோசனும். பஞ்சாயத்து ஆரம்பமானது. சோசப் என்ற மீசை வைத்த ஆண், சேகர் என்ற மீசை வழித்த ஆண். மற்ற எல்லா ஆண்களுக்கும் அமர இருக்கை இருந்தது. என்ன பிரச்சனை என்று எனக்குப் புடிபடவே இல்ல. ஆனா சோசனுக்கு யாருமே ஞாயம் பேசவில்லை என்று மட்டும் புரிந்தது. ஒரு பாக்யராஜ் படத்தில் வருவதுபோல், முடிவு எடுக்கப்பட்ட ஒரு விவாதம் அது. பஞ்சாயம் புரியாததாலா, அங்கிட்டும் இங்கிட்டும் பிராக்கு பாத்துக்கிட்டு இருந்தேன். சண்டைக்கு நடுவே, போதிமரம்போல ஓர் அழகான காட்சி கண்ணில் பட்டது. அழகான தமிழிலேயே சொல்கிறேன்.

சோசப்பின் அக்காவின் மூத்த பையனுக்கு இரண்டு பிள்ளைகள்; இளையவனுக்கு ஒன்று. மூன்றும் மாடிப்படியின் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தன. கீழ் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு அக்காபேரப்பிள்ளைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூத்தவனின் மூத்த மகனை, இளையவனின் மகன் மாடிப் படிகளில் தள்ளிவிட்டான். யார் தள்ளியது என்று நான்கு பேருக்குத்தான் தெரியும். எனக்கு, சோசப்பின் அக்காவுக்கு, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு. என்னாச்சு என்று சில மைக்ரோ வினாடிகள் வித்தியாசத்தில் வெவ்வேறு வாய்களில் இருந்து வார்த்தை வந்து, பிறகு பஞ்சாயத்து தொடர்ந்தது. மூத்த மருமகள் யார் தள்ளியதென்று விசாரித்தாள். சோசப்பின் அக்கா, மூத்தவனின் இரண்டாவது மகனென்று சொன்னாள். எனக்குத் தூக்குவாரி போட்டது. அக்குழந்தை எவ்வளவோ மறுத்தும், அடி தவிர்க்கப்படவில்லை.


இவ்வளவு நேரம் அமைதியாகவும், பித்துக்குளி போல சிரித்துக்கொண்டும் இருந்த சேகர் நேராய் சோசப்பின் அக்காவிடம் சென்றேன். அவளுக்கு மட்டும் கேட்கும்படி, "சின்னப்புள்ளகிட்ட ஓரவஞ்சன காட்டுறியே, என்ன மாதிரி பொம்பள நீ? ச்ச்சீ" வந்துவிட்டேன். அவள் என்னிடம் வந்து தண்ணீர் கொடுப்பதுபோல் சொன்னாள், "புருசனும் தம்பியும் அடிச்சிக்கையில நான் அமைதியா இருக்கேன். இதே மாதிரி நான் அமைதியா இருந்திருந்தா நாளக்கி ஏன் மகனுங்க ரெண்டுபேரும் அடிச்சிக்க இந்தமாடிப்படியே காரணமா இருக்கலாம்". தனது தவறுகளுக்கும், ஒருசார்புக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் மனிதன் கொடுக்கும் நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்குச் சுறுக் என்றால், அந்த மற்றவர்களும் அவன் சார்பு. இந்நிகழ்வை இப்படி மறுப்பதா? இல்லை, ஒரு பெண்ணின் பிறந்த வீடு - புகுந்த வீடு இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கை என்று ஏற்பதா? சீரணிப்பதற்குள், வீட்டுக்குத் தூரமுன்னு சொன்ன சோசப்பின் மனைவி வந்துவிட்டாள்.

அவள் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை,
"வேடிக்கலுக்குப் போன மனுசன் இருட்டியும் வீடு வல்லான்னா, ஒண்டியா இருக்குற பொம்பள என்னய்யா நெனப்பா?"
"நீ எதுக்கு வந்த? நம்ம மாட்டத்தான் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கேன்"
"என்ன பேச்சு வேண்டிக்கெடக்குது. பத்தாயர ரூவாய மூஞ்சில வீசிட்டு மாட்ட மகாராசன் மாதிரி ஓட்டிக்கிட்டு வரவேண்டியதுதானே?"
"இந்தாம்மா, சபைக்கி மரியாத குடு" மருதூரு பெருசு.
"நீயெல்லாம் பெரிய மனுசங்களாய்யா? ஒங்களுக்கு எல்லாம் மகளுக இருக்கா இல்லையா?"
த்தூ என்று துப்பினாள். சோசனின் மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் துப்பு. சோசனின் மாமா என்ற பெரிய மனுசனுக்கும், 10000 ரூவாய்க்குமான கதையை அவள் சொன்னாள். அப்படியே அவள் சொன்னால் குழப்பும். நான் சொல்கிறேன்.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

ஒரு அஞ்சாறு தலமொறைக்கி முன்னாடி ரெண்டு குடும்பம் குடியேறி, இன்னக்கி ஒரு பத்து தலக்கட்டு இருக்குற ஊருதான் சோசன் ஊரு. அந்த ஊருல பொறந்த கொழந்தங்க எல்லாத்துக்கும், தாய் தகப்பன் வயல்ல எறங்கி வெள்ளாம பாக்குறப்ப, தொட்டில்ல தூங்குறதுக்குத் தாய்மடியா இருக்குறது ஒரு மரம். குரும்ப மரம். அந்த சுத்துவட்டாரத்துல வேற எங்கயும் கெடையாது. சோசனோட கெணத்து மேட்டுல இருக்கு. அது நடவுநேரம். பக்கத்து வயக்காரங்காரங்க எல்லாம் கடல போட்டு இருந்ததால, மத்தியானச் சாப்பாட்டுக்கு வேற யாரும் குரும்ப மரத்தடியில கூடல. சோசனும் சோசன் பொண்டாட்டியும் மட்டும், ரெண்டு நாளக்கி முன்னாடி பாம்புகடிபட்ட ரஞ்சிதத்தப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாக.

"ரஞ்சிதம் புருசன ஆடுதின்னாபால ஒடிச்சிட்டு வரச்சொல்லி வைத்தியரு சொல்லி இருக்காரு. அந்தக் குடிகார முண்ட, ஆடுதின்னு மிச்சமிருக்குற பாலைன்னு போயி விசாரிச்சு இருக்கான்"
கருவாட்டு இடைவெளி.
"ஊரு பெருசு ஒண்ணு, தமிழே மறக்குற அளவுக்கு குடிச்சிருக்கான்னு அவனுக்கு வெளக்கம் ஒண்ணு சொன்னுச்சாம். அது ஆடுதின்னுன பாலை இல்ல. ஆடுதின்னாபாலை. அப்புடின்னா, ஆடு திங்காததுன்னு அர்த்தம்"
பழயசோறு இடைவெளி.
"கடைசியில வெறுங்கையோட வந்த அவனப்பாத்து, வைத்தியரு சொன்னாராம்: அட குடிக்காரக் குப்பா, ஆடு கடிச்சதுமில்ல; கடிக்காததுமில்ல. அது ஒரு தனி மூலிகடா. அப்புடின்னாராம்"
"அட சண்டாலா. பொண்டாட்டியக் கொல்லப்பாத்தான் பாருங்க"
"ரஞ்சிதம் வீடுதிரும்புறப்ப வைத்தியரு சொன்னாராம்: ஓம் புசனுக்கிட்ட ஒரு வேல தர்றதும், எலக்ட்ரிக்க நம்பி எல போட்றதும் ஒண்ணுதான். தெளிவா இருந்தாத்தான் உண்டு. இல்லன்னா, மைசூர் பாக்கு வாங்க, மைசூரே போயிருவாப்புள்ள".
சோசன் மனைவிக்குப் பொறையேர்ற அளவுக்குச் சிரிப்பு. வயக்காட்டுத் தனிமையில், சோசனும் சேர்ந்து சிரிச்சாரு. தனிமை என்ற நிலைமை அவசரமாக விடைபெற்றுக் கொண்டது.
"குடுத்த காசத் திருப்பித் தரத் வக்கில்ல. என்ன சல்லாபம் வேண்டிக் கெடக்கு?" சோசனின் அக்கா புருசன்.
மாமா என்ற உறவிடம் இருந்து முதல்முறையாக கரடுமுரடான வார்த்தைகள், அறிமுகம்கூட இல்லாமல். இருவரும் நிதானமாக சுதாரித்தார்கள்.
"என்ன மாமா வந்ததும் வராததுமா காசுப்பத்தி பேசுறீங்க"
"தோள்ல தூக்கிவளத்த புள்ள நல்லா இருக்கட்டுமேன்னுதான், அன்னக்கி நீ சிங்கப்பூரு போகனும்னு கேட்ட ஒடனேயெ, 10000 ரூவா குடுத்தேன். அத வச்சி பொழக்கத் தெரியல. ஒன்ன எப்புடி நம்புறது?"
"மாமா, ஒங்களுக்கு அவசரமா பணம் தேவன்னா, இன்னும் ரெண்டு நாளக்குள்ள தந்துடுறேன்"
எதுவும் பேசாமல், தென்னமரத்தடியில் கட்டி இருந்த ரெண்டு ஒழவு மாடுகளைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்..
"பணத்தக் குடுத்துட்டு மாட்ட வாங்கிக்க"
"மாமா இது ஞாயம் இல்ல மாமா"
"எனக்கு ஞாயம் சொல்லித் தர்றியா?"
அதுக்கப்பறம் சோசன் பேசவில்லை. சோசனின் மனைவி பேச்சை நிறுத்தவில்லை.
"அப்பா அப்பா மாட்ட விட்டுருங்க. எங்க தலய வீட்ட வயல எதையாவது அடமானம் வெச்சு சாயந்தரத்துக்குள்ள ..."
"ரெண்டு நாள்ல பொங்க வர்து தெரியுமுல்ல"
ஊரார் பார்க்கும் கோலம், உடையவன் பார்க்காத கோலத்தைச் சோசனின் மனைவி சோசனுக்குக் காட்டினாள். தங்கத்தாலியக் கலட்டி, சோசனின் மாமா காலடியில் வைத்தாள். சோசன் மனதால் செத்தார். ஊதாரி புருசனைவிட மாடே மேல்.

சைக்கிளின் பின்னால் மாடுகளைக் கட்டிக்கொண்டு 15 கிமீ தொலைவில் இருக்கும் தனது ஊருக்குச் சோசனின் மாமா, எதையும் கண்டுகொள்ளாமல் புறப்பட்டு போய்விட்டார். அடிக்கடி சோசன் வீட்டுக்கு வந்து பழக்கப்பட்ட ஆள் என்பதால், அடம்பிடிக்காமல் மாடுகளும் பின்சென்றன.

மதிய ஒழவு இல்லாம, பொழுது கருக்குற வரைக்கும், குரும்ப மரத்துக்குக் கீழ வழக்கம்போல அழுகை சத்தம். ஆனால், அந்த பிற்பகலில் மட்டும் அழுகைகளுக்குச் சொந்தமானவர்கள் குழந்தைகள் அல்ல. மறுநாள் காலை குரும்பமரம் அழுதது. யாருக்கும் கேட்கவில்லை. அந்த அழுகையின் விலை 10000 ரூவா.

சோசபின் மாமா திடீரென மாடுகளைக் கண்வைத்து பிடித்துக்கொண்டு போனதன் காரணம் - அந்த மாடுகள் இப்போது எங்கே - இப்போது நடக்கும் பஞ்சாயத்தில் சோசப்பிற்கு நியாயம் கிடைக்குமா - சோசப்பின் அக்கா தலையிட்டால் சுமூகமாகும் இப்பிரச்சினையில் அவள் மௌனமாய் இருப்பதேன் - இப்படி நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சோசப் 10000 ரூபாயை அவர் மாமாமேல் வீசி எறிந்தார்.
"நாளக்கிக் காலையில ஏன் செவக்காட்டுல நடவு. கண்மாதிரி என்னோட ரெண்டு மாடுகளும், காலையில் ஆறுமணிக்கி அங்க இருக்கணும். சேகரு வண்டிய எட்ற"
மூன்றுபேரும் வெளியேறினோம்.

நானும் சோசன் வீட்டிலேயே தங்கிவிட்டேன். சோசன் சொன்னபடியே மாடுகள் வந்துசேர்ந்தன. மூத்தமகன், சைக்கிளில் கொண்டுவந்து விட்டுப்போனார். சோசனுக்கு மாமன் பயந்துவிட்டார்; நெசம் ஜெயிக்கும்; அவனும் ஒரு வெவசாயிதானே; அவனுக்கும் ஒரு பொம்பளப்புள்ள இருக்குல்ல. இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நான் நினைத்த ஒரே காரணம், "சோசனின் அக்கா பேசி இருப்பாள்".

மாடுகள் வந்ததில் பெருமகிழ்ச்சி; பச்சைமிளகாய் பூத்திருப்பதில் மகிழ்ச்சி; இன்றைக்குக் காலை கரண்ட் வந்ததில் மகிழ்ச்சி; செவ்வெளநீர் மரம் குருத்துவிட்டதில் மகிழ்ச்சி; கெட்ட ரத்த சம்மந்தம் ஒன்றை வெட்டிவிட்டதில் மகிழ்ச்சி. இப்படி சின்னச்சின்ன விசயங்களுக்கு எல்லாம் சோசப் சந்தோசப்பட்டார். எல்லாம் சரிதான். மத்தியானச் சோற்றுக்குக் பந்தல்தந்த - குழந்தைகளைத் தாயைவிட அதிகநேரம் தாலாட்டிய - மழை பயிர்களின் மூச்சடைத்தபோதும், வெயில் பயிர்களின் வேர்நுனி பிளந்தபோதும் மக்களுக்குக் குடைபிடித்த குரும்பைமரம் இன்று இல்லை.

மனிதன் சந்தோசத்திலும், துயரத்திலும், ஆத்திரத்திலும் மரங்களின் மேலும், மிருகங்களின் மேலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி பீடுநடை போட்டுக் கொள்ளலாம். தக்கன பிழைத்தல் மட்டும் பரிணாமம் என்பதில்லை.

-ஞானசேகர்