புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, May 21, 2012

மனிதன் இணைத்ததை இறைவன் பிரிக்காதிருக்கட்டும்



'எதா இருந்தாலும் இங்கெ சொல்லுங்கைய்யா. சும்மா வீட்டு வாசல்லெ நின்னுக்குட்டு காலு காலு கீலு கீலு வாலு வாலுன்னு... பத்து இருவது பேரு கூட்டமா வந்துட்டா இந்த ஊருக் காரங்க்யெ பயந்து போயிருவாய்ங்க‌ன்னு நெனச்சீங்களோ?'
'அய்யா நீங்க தப்பா நெனச்சீட்டிங்க. அந்தாளு களுக்கும் எங்களுக்கும் தான் தகராறே. வேணும்னே நாங்க வந்த கார்லேயே வந்து பிரச்சனை பண்றானுங்க'
'ஓ ஓ ஓ நீங்க ரெண்டு கோஷ்டியா? ஏன்யா நேரா எங்க ஊருக்குள்ள வந்து நேரா ஏன் வீட்டு வாசல்ல நின்னு காச்சுப் பூச்சுன்னு கத்துறீங்க? நீங்க வந்த அதே கார்லதான் ஏன் பெரிய பொண்ணும் வந்து எறங்கினுச்சு. அதுக்கிட்ட என்னா ஏதுன்னு பேசறதுக் குளியும் திடுதிடுப்புன்னு இப்படி வந்து நிக்கிறீங்களேய்யா'
'அய்யா நாங்க பொறந்தப்பட்டி. அந்தா செவப்புத் துண்டுப் போட்டு நிக்கிறானே தாயிலி... அவன் புகுந்தப்பட்டி. சனியன்... சொந்த மாமன் மகனாப் போயிட்டானேன்னு ஒரே அக்காவே இந்தாளுக்குக் கட்டிவெச்சு இன்னும் வருசந் திரும்பல... அதுக்குள்ள இந்தத் தொடெ ந‌டுங்கிக் கூ...'
'அத்தோட நிறுத்துடா... மச்சான்னுகூட பாக்க மாட்டேன்'
'இன்னும் என்னாடா மச்சான் மாப்புள்ளன்னு பொசக்கெட்ட தாயிலி'
'கட்டியாரு'
'நெக்கியாரு'
'ஏய் ஏய் ஏய் நிறுத்துங்கப்பா நிறுத்துங்கப்பா. ஒங்க சண்டயெ போடனும்னு தான் கவர்மண்டு கார் ஏறி டிக்கட்டு வாங்கி வந்திகளா? போங்கப்பா. போயி வேற ஊருல அடிச்சுக்குங்க. ஏதோ நாங்க அந்த மகமாயி புண்ணியத்துல நல்லா இருக்கோம். எங்க ஊர் எல்லையிலெ சண்டெ போடாதீங்க‌ப்பா. அப்பிடியே அடுத்த காருல திரும்பிப் போயிருங்க'
'அது எப்புடிங்க வெறுங் கையோட போக முடியும். பொணங்கிட்டு வந்த எங்க அக்கா ஒங்க வீட்லதானே இருக்கு. அதக் கூப்புடுங்க. நான் கூட்டிட்டு திரும்பிப் பாக்காம போறேன்'
'கட்டுனவன் நான் இருப்புறப்ப ராசா மாதிரி கூட்டிட்டுப் போவாராம். மானங்கெட்ட மலங்காட்டு ராசுக்கோலு'
'கொம்ம்மாலெ...'
'கொக்காலெ...'
'கொப்பனெ...'
'கொப்புச்சியெ'
'அடடடடா ஒரு ஆளு மட்டும் பேசுங்கப்பா. சும்மா ஆளாளுக்குக் காட்டுக் கத்துக் கத்தாதீங்க‌. நீங்க நிக்கிறது எங்க மண்ணு. எங்க ஊரு மக்களுக்கு மொதல்ல‌ மரியாதெ குடுங்க. ஏன் வயசுக்கு மரியாதெ குடுங்க. சும்மா வாயிலெ வந்த கெட்டக் கெட்டப் பேச்சப் பேசிக்கிட்டு...'
'நீங்க அக்காவக் கூப்புடுங்க. நான் செவனேன்னு நடெயெக் கட்றேன்'
'யாரு ஒங்க அக்கா? என்னெக் கேக்குறெ?'
'எல்லாம் நல்லா விசாரிச்சுட்டுத் தான் வந்துருக்கோம். நாலு நாளா அக்கா ஒங்க வீட்டுலதான் இருக்கு. வரச் சொல்லுங்க'
'ஓ... அந்தப் பொண்ணா... அது வந்ததுல இருந்து வாயேத் தொறக்கலப்பா. அது சொல்லி இருந்தா நானே கொண்டாந்து விட்டுருப்பேன்'
'மொதல்லக் கூப்புடுங்க. வெக்கமே இல்லாம செல மானங்கெட்ட தொன்னெ நக்கிங்க கட்டிக் குடுத்துப்புட்டு திருப்பிக் கேக்குறானுங்க. ஊரு ஒலகத்துல நடக்காத அதிசயக் கதெயா...'
'அட இருங்கப்பா. அந்தப் புள்ளயவேக் கேப்போம். ஏன்டிச் சின்னவ‌ளே... அந்தப் பொண்ணக் கூட்டியா. அப்டியே இன்னும் அஞ்சாறுப் பொம்பளெ யாளுங்களையும் சேத்துக் கூட்டியா'
'நீங்க பெரிய மனுசனுக்கு அடையாளம். முன்னப் பின்னத் தெரியலன்னாலும் பொம்பளைய மதிக்கிறீங்க. கட்டிக் கிட்டவ மேல கைய நீட்றவன்லாம் சூர‌ப்புலியா?'
'சாடெப் பேசி ஏன் பொறுமையச் சோதிக்காதெ. ஏம் புள்ளக்கித் தாய்மாமன் இல்லாட்டின்னாலும் பரவால்லேன்ன்னு துண்டம் போட்டு...'
'கொப்புறானே இப்ப சும்மா இருக்கீங்களா இல்லையாப்பா? அந்தப் பொண்ணு வர்ற வரைக்கும் கொஞ்சம் வாயப் பத்தரமா வெச்சிக்கிட்டு இருங்க. மகமாயி புண்ணியமாப் போகும். ஒங்க ஊருகாடு பக்கம்லாம் என்னா வெள்ளாமெ பண்றீங்கெ? மழத்தண்ணி யல்லாம் எப்புடி?'
'போகம் போகமா வெளச்சல் பார்த்து குருதுலெ கொட்டி வெக்கிற அளவுக்கு நெலம்லாம் எங்கெ சனங்களுக்கு இல்லங்க. நான் கல்லுப் ப‌ட்டறெ. அந்தாளு கொல்லுப் பட்டறெ. இரும்படிக்கிறப் புத்தித்தான் பொம்பளைய இப்புடி அடிக்குது'
'நீ மட்டும் என்னடா... கல்லுப் பட்டறெ வைரக்கல்லு மாறியா பளபளன்னு கட்டிக் குடுத்தே... நிறுத்துறா... நான் பேண்டுக்கிட்டுத் திங்கிறவன்னா, நீ அதத் தொட்டுக்கிட்டுத் திங்கிறவன். குசுவக் குண்டி இல்லாத பொச்சுக் காஞ்ச நாயி பெருசா பெரிய மனுசன் மாதிரி நாயம் தர்மம் பேச வந்துட்டான்...'
'பேள்ற கெழ‌வி கூட ஒன்னப் பாத்தா எந்திரிக்காது. ஒன்னோட சம்மந்தம் பண்ணேன் பாரு...'
'கட்டியத் தின்னி'
'சாண்டெயக் குடிக்கி'
'மொளக்காத்தெத் தின்னி'
'அய்யய்யய்யயே ஒங்கெ கச்சேரிய நிறுத்துங்கப்பா. அந்தப் பொண்ணே வந்திருச்சு. அதுக்கிட்டேயே கேப்போம். நீ இங்கெ வாம்மா. ஒன்னும் பயப்படாதெ. நான் ஓன் அப்பன் மாதிரி. தெகிரியமா சபையில நடுவுல நில்லும்மா. எங்க ஏன் வீட்டுக்காரி? எங்கடி அவ? நீயும் இந்தப் பொண்ணுக் கூட நில்லுடி. பயப்புடுது'
'வேற என்னங்க பேச்சு வேண்டியக் கெடக்குது. வவுத்துல எம் புள்ள இருக்கு. ப்பேயாம என்னோட அனுப்புங்க'
'அதுக்காக பூவெச் சரஞ்சரமாக் கெட்டி கொரங்குக்கிட்ட கொடுக்குறதா? புள்ளெ பொறந்த ஒடனேயே தாய்விட்டுச் சீதனமா அரளி வெதையும் கொண்டாந்து கொன்னுப் புடுவேன்'
'தூத்த்தெரி. என்னக் கொடுமயா இது? பொறந்தவனும் கட்னவனும் சேந்து ஒரு பொம்பளப் புள்ளையெ இப்புடியா கண் கலங்க வெக்கிறது? இவள இங்கேயே பொதச்சிரலாம்னு ரெண்டு பேரும் கெங்கணங்கட்டி வந்து இருக்கீங்களா? நீ அழுகாதம்மா. கண்ணத் தொடச்சிக்க. நாங்கல்லாம் இருக்கம்லே. நாந்தான் ஓன் அப்பன் மாதிரின்னு சொன்னேல்லே. இங்க பாருங்கப்பா... நடந்தது என்னான்னு முழுசாக் கேட்டு இதுக்கெல்லாம் ஒரு முடிவெடுப்போம். தெரிஞ்சோ தெரியாமலோ ஒங்கப் பொண்ணு எங்க ஊருக்கு வந்திடுச்சு. இப்ப‌...'
'அனுமாரு வாலு மாதிரி இனிமேயும் இழுக்க வேணா. புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். எங்க ஊரு பெரிய மனுசங்கள வெச்சு நாங்க பாத்துக்குறோம். என்னோட அனுப்புங்க'
'பாத்தீங்களா... பெரிய மனுசன் நீங்க எங்களுக்கு ஒதவுனும்னு எவ்ளோ அமைதியாப் பேசிக்கிட்டு இருக்கீங்க... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னே பேசிக்கிட்டுத் திரிஞ்சா ஏன் அக்கா சொச்சக் காலத்தெ எப்புடிங்க ஓட்டுறது?'
'அதத்தான் நான் சொல்றேன். ஏன் பொறுமையச் சோதிக்காதிங்க. அந்தப் புள்ளயே பேசட்டும். நீ தெய்ரியமா என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா. பொறவு என்ன பண்றது பேசி முடிவெடுப்போம். அதுமுட்டும் மைத்தவங்க எல்லாம் கம்மெய்யா இருங்கப்பா'
'நீ பயப்படாம சொல்லுக்கா'
'சொல்லுடி'
'சொல்லும்மா'
'சொல்லுக்கா'
'அட இப்புடியே பேசாம இருந்தா என்னம்மா அர்த்தம்? என்ன ஓம் புருசன் சோறு போட மாட்டேங்கிறானா?'
'இல்லங்க'
'அப்பறம் என்ன பொடவ சட்டத் துணிமணி வாங்கித் தர மாட்டேங்கிறானா?'
'இல்லங்க'
'நகெ நெட்டு கேக்குறானா?'
'இல்லங்க'
'அட என்னம்மா நீ... கூத்தியா ஏதாவது...'
'இல்லங்க'
'கையெக் கிழிச்சு விட்டதெ சொல்லுக்கா'
'நீங்க எல்லாம் செத்த சும்மா இருக்கீங்களா... நான் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்லே... என்னம்மா... ஓம் புருசன் கை கிழியிற அளவுக்கு அடிக்கிற ஆளா?'
'ஆமாங்க'
'அடிக்கிறதுதான் பிரச்சனையா. ஏம்பா...'
'அதுகூட பரவாயில்லங்க, குடிகாரக் குப்பேங்க‌'
'குடியா? போச்சுடா... அப்ப ஏம் பொன்டாட்டிக் கூட என்னெ விட்டு ஓடிப் போக வேண்டியதுதான். ஒலகத்துல எந்த ஆம்பளத்தான் குடிக்கலே...'
'போதெ கண்ணு முன்னு தெரியாம ஏர்ற வரைக்கும் குடிக்கிறாரு. அடுப்பெரிக்க சீமண்ணெ இல்லாட்டி கவுச்செயெ அப்புடியே பச்சயாச் சாப்புடுறாரு. குடலு என்னாத்துக்கு ஆகுறது மாமான்னா கைலெ கெடைக்கிற கட்டெயெ எடுத்து அடிக்கிறாரு'
'நீ அழுகாதம்மா. ஏம்பா... நீயே சொல்லு. இதுல்லாம் சரிதானா? நம்ம கூடப் பொறந்த அக்கா தங்கச்சியா இருந்தா இப்புடி எல்லாம் அடிப்ப‌மா?'
'பெத்தத் தாயெக் கூட நான் பாத்ததில்லங்கெ. திட்டுவா பேசாம இருப்பா அப்பல்லாம் ஒன்னும் தெரியல. பொம்பள விட்டுட்டு ஓடிப் போனா என்னா அவமானமின்னு இப்பத் தெரியுது. எனக்கு நல்லது கெட்டது சொல்லிக் குடுக்க யாரும் இல்ல. மன்னிச்சிருங்க'
'ஒன்னோட மன்னிப்புல பொட்ட நாயி குசுவ. சிவாசி கணேசன் தோத்துப் புடுவாரு. என்னா நடிப்புப் பாருங்க. எனக்கும் எங்கக்காளுக்கும் வெவரம் தெரியறதுக்கு முன்னாடியே எங்கப்பன் தவறிப் போய்ட்டாரு. அதுக்காக யாரும் எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லித் தரலையா என்னா...'
'இப்புடியே பேசிக்கிட்டு இருந்தா இந்தக் காரும் போய்ட்டு அடுத்த காரு வந்துடும். அவருதான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்றாப்லே இல்லே... அவரோட அனுப்பி வெய்ப்பா. நீங்க கும்புடுற ஏசு சாமி யார் யாரையோ மன்னிக்கச் சொல்றாரு. சொந்த அக்கா புருசன மன்னிக்க மாட்டியா?'
'ஒங்களுக்குத் தெரியாதுங்க. எங்க அக்கா காணாமப் போனதும் ஏதோ நாந்தான் ஒழிச்சு வெச்சிருக்கது மாறி ஊருக்குள்ள வந்து ரகளெ பண்ணி தாயப்புள்ளகெ முன்னாடி அசிங்கப் படுத்திப் புட்டான் இந்த மூத்தரக் குடிக்கிப்பய'
'ஏன்டா நீ மட்டும் அக்காளக் கொன்னுப் புட்டேன்னு சொந்த மாம்மேன்னு கூடப் பாக்காம போலீசுல புகார் பண்ணப் போனீயா இல்லையா'
'அப்பறம் நீ பண்ண சங்கதிக்கு ஒன்னெச் சப்பரத்துல‌ வெச்சு இழுக்கச் சொல்றியா?'
'அடமழ‌யெக் கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா'
'ஏம் பொன்டாட்டி மட்டும் என்னோட வரலென்னா ஏன் வாய்க்குள்ள அடுத்துப் போறது அரளி வெதையாத் தான் இருக்கும்'
'மகராசனா அதெச் செய்யி மொதல்லே. ஒனக்கு ரொம்பப் புண்ணியமாப் போகும். சொந்தக்காரன் கடமெக்கிக்கி மொதக் கோடித்துணி தாய் வீட்டுல இருந்து நானே கொண்டார்றேன்'
'அட நீயென்னாப்பா. பொறந்தவ தாலியறுக்க இப்புடி மிசாரிட்டியா இருக்கே?'
'அப்புடி பண்றானுங்க இந்த ஆளு'
'ரெண்டு பேரும் நல்லாக் கேட்டுங்கங்க. போன வெள்ளிக் கெழமெ ராத்திரி இந்தப் பொண்ணு தனியாப் பஸ் ஸ்டாண்டுல பித்தாப் பித்தான்னு முழிச்சிட்டு நின்னுச்சு. ஏன் சம்சாரம்தான் பாத்துப்புட்டு வீட்டுக்குக் கூட்டியாந்தா. எங்களுக்கு இருக்குற அக்கறை கூட ஒங்களுக்கு இல்லையப்பா'
'அந்த கர்த்தராப் பாத்து ஒங்க மாதிரி நல்லவங்களே அனுப்பி இருக்காரு'
'வந்ததில இருந்து ஒரு வார்த்த பேசலே. உம்முன்னுதான் இருக்கு. நீங்க சொல்லித் தான் இப்பக் கதயே தெரியுது. வீட்டு வேலை யெல்லாம் அதுவே நல்லாப் பாக்குது. மாட்டுக்குத் தவுடு காட்ற‌து சாணி அள்றது களெ பறிக்கிறதுன்னு வேலை யெல்லாம் கண் மாதிரி செய்யுது. இந்தாருப்பா கூடப் பொறந்தவனே... பெரிய மனுசன் நான் சொல்றேன். நான் ஒனக்கு இந்தப் பொண்ணுக்கும் அப்பா மாறி. கேப்பியா'
'சொல்லுங்கையா. எங்க அக்காவெ நாலு நாளு பாத்துக் கிட்டதுக்கு நன்றிக் கடனாப் போகட்டும்'
'ஆனது ஆகிப் போச்சு. பொண்ணப் பெத்துட்டோம். இன்னும் ஆயிரம் சண்டே ஆயிரம் சடங்கு ஆயிரம் நல்லது கெட்டது பாத்துத்தான் ஆகணும். நாம அடங்கிப் போனத்தான் எல்லாத்துக்கும் நல்லது. ஒங்கச் சாமிக சங்கதி எப்புடின்னு எனக்குத் தெரியலெ. பொம்பள வீட்ட விட்டுப் போனதுனாலத் தான் வெட்டுக் குத்து அடிதடின்னுப் போயி எங்கள்ல பலச் சாமி. அதெல்லாம் நமக்கெதுக்கு? நமக்கு இருக்குற ஒரு உசுர நிம்மதியா வாழ்ந்துப் புட்டு மண்ணுக்குக் கொடுப்போம்கிறேன்'
'அது சரிப்பட்டு வராதுங்க‌. பங்காளிப் பையன் ஒருத்தர் டவுன்ல எட்டாவது படிக்கிறாப்ல. கோர்ட்டு கேசுன்னு போனா சுலூவா ரெண்டு பேரையும் பிரிச்சு ஆயுசுக்கும் தொல்லெ இல்லாம கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுவாங்களாம். கையில பஸ்சோ வாயில குஸ்சோ ஏதோ ஒரு பேரு இங்கிலீசுல'
'அம்மான்னே என்னான்னு தெரியாத‌ ஒன்னோட மாமனும் அப்பான்னே என்னான்னு தெரியாத ஒன்னோட அக்காவும் ஒருத்தொருக் கொருத்தர் மாத்தி மாத்தி அப்பாவும் அம்மாவும் சந்தோசமா வாழணும். பொறக்கப் போற கொழந்தக் காகவாது கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க'
'சரிங்கையா இந்த ஒரு தாட்டி ஒங்க நல்ல மனுசுக்காகக் கேக்குறேன். இன்னொரு தடவெ இந்தாளு இப்புடிப் பண்ணுனானுன்னா மக்ஞா நாளே கல்லறையில பாலு ஊத்துறது மாதிரிப் பண்ணிப்புடுவேன் ஆமா'
'நீ ஏதும் திரும்பி எதுத்துப் பேசாதப்பா. அப்பறம் இன்னிக்குள்ள இது முடியாது'
'ஏன் பொன்டாட்டி மொதல்ல பெக்குறது ஆம்பளப் புள்ளன்னா ஒங்கப் பேருதான்யா. பொம்பளப் புள்ளன்னா ஒங்க சம்சாரம் பேரு. மாதா மேல சத்தியம்'
'பத்தாது பத்தாது. மாமென் மச்சான் ரெண்டு பேரும் தோள்ல கை போட்டு சமாதானம் ஆகிக்கிடுங்க. ஆன் அப்புடித்தான். இத விட்டுட்டுப் பீயிக் கலையிற பன்னி மாறி எலும்புக் கலையிற நாய் மாறி சண்டெப் போடுறீங்களே'
'மச்சான்'
'மாப்புளே'
'கொம்ம்மாலெ...'
'கொக்காலெ...'
'கொப்பனெ...'
'கொப்புச்சியெ'
'இந்தாப் பாரும்மா பெரியவங்க யாரும் இருந்துருந்தா நல்லது கெட்டது சொல்லி அனுசரிச்சுப் போகச் சொல்லி இருப்பாங்க. அதான் சின்னப் புள்ளயாட்டம் வெடுக்குன்னு உடியாந்துட்டே. இங்காரு ஒன்னும் தெரியாமப் புள்ளப் பூச்சி மாறி நிக்கிறாளே ஏம் பொன்டாட்டி... அவ தோசக் கரண்டில தோசையத் திருப்பிப் போட்டத விட என்னெத் திருப்பி போட்டது தான் அதிகம். கொணம் இருக்க எடத்துல தாம்மா கோவமும் இருக்கும். கல்யாணக் காட்சின்னா ஆம்பளப் பொம்பளக்குள்ள அப்டி இப்டி இருக்கத்தான் செய்யும். நாமதான் ஊரு நாட்டு நடப்புக் கேத்தாமாறி பாத்து நடந்துக் கிடணும். இல்லாட்டி ஏட்டிக்குப் பூட்டியா எதுப் பண்ணிப் புட்டாலும் டக்குன்னு ஒரு கல்லெ வெச்சு சாமின்னு சொல்லிப் புடுவானுங்க‌. பொம்பள மேல பெத்த புள்ளங்கதான் வெளிக்கிப் போகனும். நீப்பாட்டுல சாமியாகிப் போயிட்டியன்னா காக்கா குருவின்னு தலமேல வெளிக்கிப் போகும். கவலப் படாமப் போயி புருசனோட சந்தோசமா இருமா. தெரிஞ்சோ தெரியாமலோ எங்களுக்கு ஒன்னே ரொம்ப புடிச்சுப் போச்சு. ஏன் ஆயிசு இருக்கந் தட்டியும் ஏன் மகளுக்குண்டான எல்லாச் சடங்கும் ஒனக்கும் நானே செய்யிறேன். புள்ளப் பொறந்தோடனே இந்தத் தாத்தாவையும் கூப்புடும்ம்மா. திரும்பத் திரும்பச் சின்னப் புள்ள மாறி அழுவாதே'
'எங்க சாதி என்னா... கொலம் என்னான்னே தெரியாம இப்படி ஒரு வார்த்தையெச் சொல்றீங்களே. நீங்க நல்லா இருக்கணும்யா'
'சாதி பேதின்னுட்டு... நாமல்லாம் மனுசனுங்கம்மா. ஒங்கக் கதையில ஏன் பெரிய பொண்ண மறந்தே போயிட்டேன். நீங்க எல்லாரும் இருந்து கோழி அடிச்சுச் சாப்டுப் போகலாம் வாங்க. எங்கடி பெரிய பாப்பா? காரெ விட்டு நேரா விருட்டுன்னு வீட்டுக்குள்ள போனா...'
'பஞ்சாயத்தா?'
'ஆமாடா பெரியவளே. என்னடா நீ மட்டும் தனியா வந்திருக்கே? மாப்புள்ள வல்லையா?'
'இல்லப்பா'
'டவுன்ல கூட்டாளிகப் பாத்துட்டு கடேசி கார்ல வருவாரா? நீங்க உள்ள போங்க. நம்ம வீடுதான். இங்கே சுத்துறது எல்லாம் நம்மக் கோழிங்க தான். நல்லா ஒங்களுக்குப் புடிச்சக் கோழியாப் பாத்துப் புடிங்க‌'
'இல்லப்பா. சென்னையிலேயே தான் இருக்காரு'
'நீ மட்டும் தனியாவாம்மா வந்தே? ஏதாவது பிரச்சனையா? அந்தக் கெடாப்புல இருக்குறது அடக்கோழி. அதெ விட்ருங்க‌'
'ஆவடியில இருந்து கிண்டிக்கு வீடு மாத்த மாட்டாராம். ஆவடியிலேயே அம்மா காலடியிலேயே கெடப்பாராம். கூட்டுக் குடும்பம் நான்சென்ஸ். அம்மா மடியிலேயே இருக்குறவனுங்க எல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்'
'அப்பாவுக்கு ஒன்னும் வெளங்களம்மா'
'அதாம்பா ஒரேடியா அப்ளை பண்ணலான்னு முடிவு பண்ணிட்டேன்'
'சப்ப‌ளையா? சோடியாத் திரியறதுகளே விட்டுருங்கப்பா'
'அப்ளைனா கோர்ட்ல கேஸ்சு'
'எதுக்குடா பெரியவளே'?'
'டைவர்ஸ்'

- ஞானசேகர்