புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, November 28, 2006

இயற்கை எய்தியது இயற்கை



மெதுவாக உலகம்
செத்துக்கொண்டு இருக்கிறது
யாருக்கும் தெரியாமல்!
-யாரோ

வரங்களே சாபங்களானால்
இங்கு
தவங்கள் எதற்காக?
-அறிவுமதி (என நினைக்கிறேன்)

மரம் கேட்டது:
"எங்களில் முடியும்
ஒரு போதிமரம்
ஒரு சிலுவைமரம்.
உங்களால் முடியுமா
ஒரு புத்தனோ
ஓர் இயேசுவோ?"
-யாரோ


மொழி புரியாத மலை.
புரிய வைக்க
250 INRக்கு ஒரு கிழவன்.
போரிஸ் எல்ட்சின் போல்
அவனுக்கு மூன்று விரல்கள்.

நிற்கும் இடமே
மலைத் தொடரின்
உயரமான இடம் என்றான்.
முதுகுக்குப் பின்னால்
ஒரு மவுண்ட் ரஷ்மூர்.

தூரத்துப் பாறைகாட்டி
மிசாரு மசாரு
மிகசாரு என்றான்.
காந்திக்கு இன்னொரு
சத்திய சோதனை.

தற்கொலை முனை என்று
ஒரு ரூபாயைக் கைவிட்டான்.
சில விநாடிகள் கழித்து
சத்தம் கேட்டது
அவனுக்கு மட்டும்.

புண்ணிய நதியின்
பிறப்பிடம் இதுதான் என
காலடியில் காட்டினான்.
சதுர அடி கருப்பைவிட்டு
பிரசவிக்கவில்லை புண்ணியநதி.

4000 அடி பள்ளத்தில்
புண்ணிய நதிகள் ஐந்தில்
இரண்டைக் காட்டினான்.
தண்ணீர் இல்லை.
தடம் இருந்தது.

மற்ற இரண்டு
நதிகள் காட்டினான்
அதே பள்ளத்தில்.
கரை இல்லை.
கட்டடம் இருந்தது.

பக்கத்து அரபைவிட்டு
தூரத்து வங்கம் சேரும்
அந்த ஒற்றை நதியின்
கடைசி உயிர்த்திரவத்தை
அணையின் அடிவயிறு கைது செய்தது.

கோவில் புகுத்தினான்.
ஒரு வாய்க்காலில் இருந்து
தண்ணீர் பெற்றது
ஒரு சிறுகுளம்.
அதன் வெப்பநிலை
0 டிகிரிக்கும் கொஞ்சம் அதிகம்.

சுத்தம் ஏதும் பாராமல்
குளத்துத் தண்ணீரில் சிலர்
குடல் நனைத்தனர்
தலை நனைத்தனர்
வியாதி கழுவினர்
அங்கம் காட்டினர்.

அவ்வாய்க்காலின் பிறப்பிடம் பார்த்தேன்.
ஐந்து வாய்க்கால் தண்ணீர்
சேர்ந்து உருவானது
அந்த ஒற்றை வாய்க்கால்.
ஒவ்வொன்றின் மேலேயும்
புண்ணிய நதிகளின் பெயர்கள்!

-ஞானசேகர்