புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, January 13, 2010

வட்டத்துள் குவியங்கள்

(எழுமகளிர், ஆறறிவு என்ற எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படாத இருவரின் தீண்டப்படாத எல்லை பற்றிய சிறுகுறிப்பிது)

இவ்வுலகில்
நீ யாரோ ஒருத்தி.
யாரோ ஒருவனுக்கு
நீதான் உலகம்.
- யாரோ


புலம் பெயரும்
ஓர் அகதியின் வலியுடன்
ஈன்று புறந்தள்ளி
தலைக்கடன் முடித்ததில்
தவறேது மில்லையென
அம்மா சொல்வாள்.

உரக்குழியில் தலைபுகுத்தி
கால்பிடித்துத் தலைகீழாக்கி
இடவலம் சுற்றிச்சுற்றி
ஒரு குயவனின் நேர்த்தியுடன்
கபாலம் குழைத்ததில்
சறுக்கலெல்லாம் சாமானியம்
சாமிமேல சத்தியம்
சட்டையில்லாப் பாட்டி சொல்வாள்.

வழியில் நின்ன முனி
கவட்டிக்குள்ள நடந்ததால
வயுத்துப் புள்ளய வாட்டிருச்சு
அகலாது அஞ்சு வருசம்;
அப்பிக மாசம் அம்மாவாச
ஐநூத்தியொண்ணு பரிகாரம்;
மின்சாரம் தொட்ட அதிர்வோடு
பவுர்ணமிபொட்டு சோசியக்காரி சொன்னாள்.

நரம்புக்குள் சிக்கல்
மூளைக்குள் மறியல்
உலகமே நிர்வாணம்
சாகும்வரை குழந்தை
சங்கிலிக்குள் வட்டம்;
உணர்ச்சியின்றி உண்மையை
இழவு சொல்லும் தொனியுடன்
பட்டணத்து டாக்டர் சொன்னார்.

என் அம்மணத்து உரோமங்கள்
மனிதரெல்லாம் விமர்சிக்க,
என்னுறுப்பின் மேல்தோல் வரை
சோப்புபோட்டு சுத்தம் செய்து,
பொட்டுவைத்து கண்ணாடிகாட்டி
சாமி ஒருத்தன் இருக்கானென
கதை அக்கா சொல்வாள்.

ஊனப்பட்ட இயற்கை போல்
பருவம் மறைத்து
பட்டம்விட்ட புத்தன் போல்
ஆசை விடுத்து
நூலைவிட்ட பட்டம் போல்
காலம் மறுத்து
என் சங்கிலியில்
அக்காவையும் கட்டிப்போடும்
விதியின் பேடித்தனம்
நிறுத்தும்படி யார் சொல்வார்?

- ஞானசேகர்
(பெண் பிரம்மச்சாரிகளுக்குச் சமர்ப்பணம்)