புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 04, 2009

வையத் தலைமை கொள்



'வன்முறை எதிர்ப்பு தினம்' என்று பிறந்தநாளை உலகமே மரியாதைப்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவனைத் தந்த இந்திய நாட்டின் முதல் தேசியக்கட்சி உடைந்துபோன புனே (Pune) நகரில் இருந்து இதை எழுதுகிறேன். பாரதம், இந்திய யூனியன், இந்தியா, ஹிந்துஸ்தான் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் புரியுமென நினைக்கிறேன். இன்றைய இந்தியா என்ற நாட்டைப் புவியியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால், பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட்டி இந்திய யூனியனில் இருந்து கழிக்கக் கிடைப்பது. இதே சமன்பாட்டைக் கழித்தல்கள் மட்டுமே வரும்படி எழுதி சிரில் ராட்கிளிப் அவர்கள் கிழித்த கோடுதான் இன்றையதேதிவரை உலகின் மிகப்பெரிய Genocide என்று கருதப்படுகிறது.

காந்தியையும், நேருவையும், அஹிம்சையையும் சாடுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு அச்சமன்பாடு அமையக் காரணமான நூற்றாண்டுக் காரணிகள் அத்துப்பிடியாகக்கூட இருக்கலாம். ஏனெனில் ஓர் உண்மை நாத்திகன், ஆத்திகனைவிட கடவுளை அதிகம் தெரிந்திருக்க் வேண்டும். சரி என் தலைப்புக்கு வருகிறேன். உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி. இந்திய யூனியனில் இருந்திராத ஒரு பகுதி இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. 22 ஏக்கர் தீவு. கேள்விப்பட்டதும் பயணத்திட்டம் தயாரானாது. ரோஜாக்களின் நகரம் புனேயில் இருந்து, இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக - தென்னிந்தியாவில் ஈரப்பதமான லோனாவாலா (Lonavala) வழியாக (எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி புத்தகத்தில் ஒரு கதையுண்டு), எனது ஒரு கவிதைக்கு MH - 06 என்ற தலைப்பு தந்த பென் (Pen) என்ற ஊர் வழியாக அலிபாக் (Alibaug) நகரம் வரை பேருந்து பயணம். அங்கிருந்து ராஜ்புரி (Rajpuri) கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ. பாய்மரப்படகில் மூன்று கிலோ மீட்டர் கடலுக்குள் போனால், ஜன்ஜிரா கோட்டை (Janjira Fort). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தியர்களால் நுழையமுடிந்த இடம்.

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் ரத்னகிரி (Ratnagiri) என்ற மராட்டிய மாவட்டத்தைப் பற்றி செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அதன் வடஎல்லையிலுள்ள ராய்காட் (Raigad) மாவட்டத்தின் முருடு (Murud) என்ற கிராம எல்லைக்குட்பட்டது இக்கோட்டை. மேற்படி தகவல்களுக்கு இணையம். மும்பையின் Gate Way of Indiaல் இருந்து அலிபாக் அருகாமை வரை கடல்வழியாககூட செல்லலாம்.


ஜன்ஜிராவை அடைய அரபிக்கடலின்மேல் காற்றின்விசையில் செல்லும் பாய்மரப்படகுகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மராத்தி கலந்த ஹிந்தி பேசும் கெய்டைத் தவிர்த்து, கோட்டையின் இடுக்குகளெல்லாம் சுற்றி சமாதிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சிதிலமடைந்த சுவர்களையும் சுற்றிப் பார்த்தேன். கோட்டைக்கு நடுவில் 20 மீட்டர் விட்டத்தில் கடலின் உப்பு நீருக்கு நடுவே ஒரு நன்னீர் ஏரியும் இருக்கிறது. இன்னமும் தண்ணீர் இனிப்பாக இருக்கிறது என கெய்டு சொல்ல ஒவ்வொருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் தோற்றத்தில் இருந்த சிலர் அதை நம்பாமல் நின்றுகொண்டிருந்தனர். நிலத்தடி நீர் தத்துவம் தெரிந்திருந்தால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமில்லாமல் மூன்று பக்கம் கடலுக்கு நடுவில் தனுஷ்கோடி ஊர்மக்களோடு நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருடன் கையாலேயே குழிதோண்டி நல்ல தண்ணீர் குடித்த நான் ஆச்சரியப்படவில்லை.

காற்றின் சீற்றத்திற்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்கி வயிறு குலுங்க பாய்மரப்படகு சவாரி நல்ல அனுபவமாக இருந்தாலும், தக்க பாதுகாப்பு இல்லை. கோட்டைக்குள்ளும் ஆங்கிலத்தில் பேசும் சரியான கெய்டுகள் இல்லை. ASIம், சுற்றுலாத்துறையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், கோட்டைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் நூற்றாண்டுகள் பின்னால்போய், தண்ணீருக்குள் இருந்துகொண்டு மிகப்பெரிய சாம்ராச்சியங்களை மிரட்டிப் பார்த்த தைரியத்தைத் தலைகோதும் உப்புக் காற்றுடன் உணரமுடியும்.

அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தபோது சத்தம்போட்டு சொன்னேன்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்".

Incredible India!

- ஞானசேகர்