புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, April 06, 2018

இந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்

நீரைப்போல்
உன் சிறைகளில் இருந்து
கசிகின்றவனாக இரு


நீரைப்போல்
எங்கே சுற்றி அலைந்தாலும்
உன் மூல சமுத்திரத்தை
அடைவதையே
குறிக்கோளாய்க் கொள்வாயாக !
- அப்துல் ரகுமான்


ஏற்கனவே ஒருமுறை நான் தனியாக இந்தியாவை இரயில்களில் ஒருவாரம் சுற்றி வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கான சுட்டி இதோ:
http://jssekar.blogspot.in/2014/08/blog-post.html

இப்போது இரண்டாம் முறை அதே மாதிரியான பயணம்.
8 இரவுகள். 8 இரயில்கள்.
7 பகல்கள். 7 ஊர்கள்.
3 உலகப் பாரம்பரியச் சின்னங்கள்.
2 முறை போலிஸ்காரர்கள் என்னைச் சந்தேகப்பட்டு பிடித்து விசாரித்தார்கள்.

பயணங்களில் படிக்க எடுத்துச் சென்ற புத்தகங்கள்:
1. நரன் என்பவரின் கேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு
2. இன்னொருவருடன் சேர்ந்து அமர்தியா சென் எழுதியிருக்கும் An uncertain glory
கிட்டதட்ட 180 மணி நேரங்கள் தொடர்ந்து இயக்கத்திலேயே இருந்திருக்கிறேன். முன்போலவே எந்த ஊரிலும் தங்கவில்லை. இரவில் இரயில்களில் தூங்கி, பகல்களில் ஊர்சுற்றி மகிழ்ச்சியாகத் திரும்பி வந்திருக்கிறேன்.

மொத்த பயணத்தில் இருமுறை தான் ஒழுங்கான உணவு கொண்டேன். இரயில் நிலைய நடைமேடைகளில் கடுமையான களைப்பில் மக்களோடு மக்களாக படுத்து உறங்கி இருக்கிறேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் வட இந்தியாவையே தொட முடிந்தது. சூரிய உதயம் முதல் மறைவு வரை நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த நான்காம் நாள் தான், இதுவரையான என் இந்தியப் பயணங்களில் மிகவும் உற்சாகமான நாள். கோடை வெப்பம், மோசமான மதிய உணவு, இரயில் இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட தாமதம் என எல்லாம் சேர்ந்து ஐந்தாம் நாளில், உள்ளம் வேண்டியபடி செல்ல உடல் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. காமம் செப்பாது உள்ளது சொல்ல வேண்டுமானால், ஆறாம் நாளில் கொஞ்சம் காமம் தலைக்கேறி உள்ளம் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. எங்குமே என்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை ஏழாம் நாள் இரவில் தான் உணர்ந்தேன்.

என்னிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இயர் போன் காதில் மாட்டி தேன்மதுரப் பாடல்கள் கேட்கும் பழக்கமும் கிடையாது. விந்திய மலைத் தொடர்களில் உள்ள ஒரு குன்றில், குடிநீர் கூட இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலில் தன்னந்தனியாக 3கிமீ ஏறிய போது இம்மூன்று பாடல்களை என் மொபைல் போனில் இருந்து ஒலிக்கச் செய்தேன்.
1. தாரைத் தப்பட்டை திரைப்படத்தில் வரும் 'பாருவாய பிறப்பற வேண்டும்' என்ற திருவாசகப் பாடல்
2. பாரதி திரைப்படத்தில் வரும் 'நிற்பதுவே நடப்பதுவே'
3. கபாலி திரைப்படத்தில் வரும் 'நெருப்புடா'
'பயமா? ஹாஹாஹாஹா' என நானும் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டேன். இது போல ஒவ்வொரு பயணத்திலும், ஒவ்வோர் இடத்திற்குப் பின்னும் விதவிதமான கதைகள் உண்டு. கட்டை விரலில் தள்ளித் தள்ளிப் படங்கள் பார்க்கும் இத்தலைமுறை, அவற்றில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவற்றை எழுதாமல் தவிர்க்கிறேன்.

கீழ்க்கண்ட சுட்டியில் என் பயணத்தை நீங்களே படம்பார்த்து கதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது எடிட்டிங் - சென்சார் - வசனம் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். One week around India என்ற வாக்கியத்தை இப்பயண ஆல்பங்களின் பெயரில் சேர்த்திருக்கிறேன். எனவே அதைத் தேடினால் நீங்கள் பயண ஆல்பங்களை அடையலாம். கனரா வங்கியில் தொடங்கிய என் பயணம், உங்களில் பலர் முகம் சுழித்து மூக்கை மூடிக் கொள்ளும் ஓர் இடத்தில் முடிகிறது.
https://plus.google.com/103740705199337696353

அந்த ஒருவாரம் உலகத்தில் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. திரும்பி வந்த பின் சில விடய‌ங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் பயணத்துக்கு முன் இமயமலை போன சூப்பர் ஸ்டார், நான் திரும்பி வந்த பிறகும் என்ன ஆனார் என்று தெரியவில்லை. பரோலில் வந்திருந்த சசிகலா, சிறை திரும்பினாரா என்றும் தெரியவில்லை. சினிமா வேலைநிறுத்தம் நிறுத்தப்படவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரியே காவிரி பிரச்சனை அப்படியே இருந்தது. 600 வருட இந்திய அரசியலை ஓரிரு நாட்களில் சோ கேட்டுத் தெரிந்து கொள்ளும், முகமது பின் துக்ளக் திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. பயணம் ஓர் அறிஞனை மேலும் அறிஞனாக்குகிறது; ஒரு பைத்தியக்காரனை மேலும் பைத்தியமாக்குகிறது.

- ஞானசேகர்