புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, April 03, 2006

செல்லாத சாட்சிகள்

('இது ஒரு கற்பனை கதை' என்று 90% உண்மை சொல்ல நான் விரும்பவில்லை. எது கற்பனை, எது நிஷம் என பங்கு போடும் பொறுப்பைப் படிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன். 22 வயதில் எனக்கு சம்மந்தம் இல்லாத இரு துறைகளைப் பற்றி இப்படி எழுதும் அளவிற்கு என்னைப் பாதித்த லியோனர்டோ டா வின்ஸி, அடால்ஃப் ஹிட்லர், இன்னும் பல வரலாற்று பாத்திரங்களுக்கும், அய்யாத்துரை என பெயர் மாற்றப்பட்ட கதாபாத்திரத்திற்கும், இக்கதையில் சொல்லப்படாத நான் சந்தித்த இன்னபிற அய்யாத்துரைகளுக்கும் இதோ என் வழியே ஓர் அறிமுகம்)

"செகந்திராபாத்ல தமிழ் ஆளுகளும் இருக்காங்க, கொஞ்சம் கெட்ட வார்த்தகள நிறுத்திக்கலாமுன்னு நெனக்கிறேன்".
இரண்டு கிலோமீட்டர் நடைபாதை பேச்சுகளில், இப்படி ஒரு வாக்கியத்தைச் சொல்லி, ராமின் அருள்வாக்கை நிறுத்தச் சொன்னேன்.
"இங்க மட்டும் ஒழுங்கா என்னா? குடும்பத்தோட குத்துப்படம் பாக்கிறவங்கடா இவங்க. நான் வார்த்தையில சொன்னா ஒடனே கோபம் வருமே" என அருள்வாக்கு தொடர்ந்தது.
"சரி சரி. அவள எங்க வரச்சொல்லி இருக்க?"
"அவளா? அவன்டா. அவன் Paradise பக்கத்துல நிப்பான். அதுக்கப்பறம்தான் அவளுகள பாக்கணும்"
"எனக்கு 9 மணிக்கு பெங்களூருக்குப் பஸ். இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு. அதுக்குல்ல, ஒரு ஒயின் ஷாப்புக்குள்ள......"
"சரி வா. இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"

பார் போகும் வழியில் ஒரு அழகான பெண், அதுவும் சேலையில், ஒரு கோவிலுக்குள் புகுந்தாள்.
"டேய் ராம், கோயிலுக்குப் போயிட்டு, அப்பறம் பாருக்குப் போவம்டா"
"ஒரு நல்ல காரியத்துக்குப் போறப்ப, கோயிலு கீயிலுன்ன்னுட்டு, போசாம வாடா"

"ஒனக்கு என்னா?"
"Haywards 5000"
"இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"
"பையா Haywaards 5000 ஒக்கடி, Signature ஒக்கடி. படாஃபட் தீஸ்கோ" என ஆர்டர் செய்தான்.
"டேய் சேகரு, குடும்பன்னா இப்புடி ஒத்துமையா இருக்கணும்"
"எங்கடா?"
"பின்னாடி பாரு. ஒண்ணா ஒக்காந்து தண்ணி அடிக்கிறாங்க"

அவன் கொஞ்சம் போதை அடைந்தவுடன், கிருஷ்ண பரமாத்மா போல தருணம் பார்த்து கேட்க ஆரம்பித்தேன்.
"எவளோ ஒருத்தி ஒன்ன காதலிச்சுட்டு, ஒரு US மாப்புள கெடைக்கவும், ஒன்ன கலட்டி விட்டுட்டு போயிட்டா. அது அவ தப்புதான். அதுக்காக அவ பொறந்தநாளு, மொத மொதல்ல பாத்தநாளு இப்புடி எது வந்தாலும், தண்ணி அடிக்கிற"
நிமிர்ந்து என்னையும், என் பாட்டிலயும் பார்த்தான்.
"தண்ணி அடிக்கிறதுல ஒண்ணும் தப்புல்ல. ஆனா, இந்த ரெண்டு நாளுல மட்டும் பொம்பளக சமாச்சாரம் வெச்சுக்கிறியே, அது தப்புடா"
"நாலு வருஷம் அவள காதலிச்சப்ப, என்ன மாதிரி காதல் ஒலகத்துலேயே கெடையாதுன்னு பெருமையா திரிஞ்சேன். அவள ஒரு நாளுகூட தப்பான எண்ணத்துல பாத்தது இல்ல தெரியுமா? ஆனா, கொஞ்சம் ஆடம்பர வாழ்க்க கெடைக்கவும், என்னத் தூக்கி எரிஞ்சிட்டுப் போனாளே, அவளுக்கிட்ட போய் இந்தக் கதயெல்லாம் சொல்லு"

"இன்னும் கொஞ்ச நாளுல்ல ஒனக்குன்னு ஒரு கல்யாணம் நடக்கும். இதெல்லாம் நீ, ஒன்னக் கட்டிக்கப் போறவளுக்குப் பண்ணுற துரோகம். காந்தி சொன்ன மாதிரி, அட்லீஸ்ட் ஒரு பக்கமாவது உண்ம இல்லாட்டின்னா, குடும்ப வாழ்க்க வேஸ்ட்டு"
"கட்டிக்கப் போறவளா? போதைல இருந்தாலும் ஒண்ணு சொல்றேன் கேப்பியா? No educated men should expect his bride to be a virgin. The vice-versa is also as true as that of Sun rising at East. That's the mentality of me and அவ US புருஷன், my dear"
"டேய் ராம், தமிழ்ல பேசுடா. சுத்தி இருக்குறவங்க எல்லாம் ஒருமாதிரி பாக்குறாங்க"
"நீதான் தமிழ்ல பேசாதேன்ன. இப்ப பேசச் சொல்லுற. என்னடா ஒரு பீருக்கே இப்படி ஒளருறே? எந்த மொழியில சொன்னாலும் சரி, எந்த எடத்துல சொன்னாலும் சரி, உண்ம உண்மதான்"
"போத இருக்கே, எப்பா பொல்லாததுடா சாமி. காதலிச்சவளையே நடத்த கெட்டவன்னு சொல்ல வெக்குது"
"அவளால ஒரு ஊர எல்லாம் எரிக்க முடியாது சாமி. அப்ப ....." பயங்கரமாய்ச் சிரித்தான்.
"சரி சரி பேசுனது போதும். சீக்கிரம் முடி. ஆச நாயகிகள் காத்துக்கிட்டு இருப்பாங்க"

அவனைப் Paradise வாசலில் கொண்டுபோய் விட்டேன். ஓர் ஆள் வந்து அவனிடம் கைகுலுக்கினான்.
"இவருமா?" எனத் தமிழிலேயே கேட்டான்.
"இல்ல. நான் சும்மாதான்....."
"சும்மான்னா?"
"இல்ல சார். இவன் நம்ம ஃப்ரண்டு. ஒன்னுக்கடிக்கவே ஆயிரந்தடவ ஆரயுவான். இவனப்போயி.... டேய் சேகரு நீ கெளம்புடா"
"இவரையும் நமக்கு அறிமுகப்படுத்தி வெச்சா, ஆத்துர அவசரத்துக்கு ஒதவி பண்ணிக்கலாமுல"
"ஒரு ஒதவியும் வேணா. நான் கெளம்புறேன்" என்ற வாக்கியத்துடன் முடித்துவிட்டு, பெங்களூரை நோக்கித் திரும்பினேன்.

அடுத்த வாரம், ராம் பெங்களூர் வந்திருந்தான். போன வாரம் என்ன நடந்தது என ஆர்வத்துடன் கேட்டேன்.
"அத ஏன்டா கேக்குற" என சலித்துக் கொண்டான்.
"ஏன்டா என்னாச்சு?"
"அவன் காட்டுனது எல்லாம் கெழவிகடா. புதுசா கேட்டேன்"
"எப்புடிடா தெலுங்கு தெரியாம, இப்புடி எல்லாம் கேட்டு வாங்குற?"
"எதுக்கு இருக்குது, நம்ம தேசிய மொழி ஹிந்தி?"
"....."
"அப்பறம் நம்ம நேரம் சரியில்லன்னு, கெழவிகள்ளேயே ஒரு சின்ன கெழவியாப் புடிச்சுட்டுப் போனேன்"
"Something is better than nothing"
"Nothing. அவ கெட்டக் கேட்டுக்கு என்னா தெரியும்மா கேட்டா? இந்தப் பேச்சு பேசுறியே, க்யா து விர்ஜின் ஹே?"
"தமிழ்ல பேசுடா"
"இப்ப தமிழா? நீ ஒருத்தன்டா, அடிக்கடி மொழிய மாத்தச் சொல்லி, உயிர வாங்குற. புதுசா கேக்குறியே, மொதல்ல நீ புதுசான்னு அர்த்தம்" என சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டான்.
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

மறுநாள் அவன் பஸ் ஏறும்போது கேட்டேன்,
"ராம், க்யா து விர்ஜின் ஹே?"
சில விநாடிகள் அதிர்ச்சியானவன், என் தோள்மீது ஒரு கை போட்டுவிட்டு, நாயகன் கமலஹாசன் ரேஞ்சுக்குச் சொன்னான்.
"தெரியலையப்பா..."
குணா கமலஹாசன் பாணியில் வானம் பார்த்து சொன்னான்.
"ச்ச்ச்சீசீசீ மனுஷங்க. மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத,..... அதையும் தாண்டிப் புனிதமானவன், புனிதமானவன்"
ஹேராம் கமலஹாசன் பாணியில், என் கண்களை உற்றுப் பார்த்து சொன்னான்.
"தன் நாட்டுப் பொம்மனாட்டீங்க ஒடம்ப எதிராளி நாட்டு அதிகாரிகளுக்குத் தீனியாகப் போட்டு. ராணுவ ரகசியங்களைக் கொள்ளையடிக்கிறாளே, அவா பண்றது கேவளமான காரியமான்னு நீ கேக்குற. அது, ஒரு நாட்டக் காப்பாத்த வேண்டிய பொறுப்புமிக்க அதிகாரியா இருந்து பாத்தாத்தான் புரியும். அவா அவா தொழில அவா அவா சரியா செய்றப்ப, சிலதுகள் அவாளத் தப்பாப் பேசித் திரியறதுகள்"
அன்பே சிவம் கமலஹாசன் பாணியில், என் பார்வையின் திசையிலேயே அவன் பார்வையை வைத்து, கீழ்த்தாடையை ஆட்டிக்கொண்டே சொன்னான்.
"முன்ன பின்ன தெரியாத ஒரு மனுஷனோட காட்டுத்தனமான வெறிய, தன்மேல வாங்கிக்கிட்டு, அவனச் சுத்தமா அனுப்பி வெக்கிறாளே, that is what the answer for you, Sekar. செவப்புதான் எனக்குப் புடிச்ச கலரு"
"மொத்ததுல சாட்சிகள வெச்சு ஒரு மனுஷன எட போடாத" என்றான்.
"அதனாலதான், சமூகத் தொண்டு செய்றதா போட்டோ காட்டுறவனவிட, போர், பூகம்பம், கலவரம் எது நடந்தாலும் கொதிச்சுப் போறவங்களவிட, நீ எனக்கு ரொம்ப பழக்கம்"
"That's my Sekar. Ok. I take off."

வீட்டில் A.C. இருந்தால்தான், இந்தியா வருவேன் என அவனின் பழைய காதலி, அவள் பெற்றோருக்குக் கட்டளை போட்டாளாம். திருமணம், இல்லாவிட்டால் தற்கொலை என இவனின் பெற்றோர் மிரட்டல் போட்டனர். இவனும் திருமணம் என்ற A/Cஐ Minimum Balance இல்லாமலேயெ ஏற்றுக்கொண்டான். ஏதோ குற்ற உணர்ச்சியில் நண்பர்கள் எவரையும் அவன் அழைக்கவில்லை, என்னையும் தான்.

நான் அவன்மேல் கொண்ட கோபத்தினாலும், காரணம் தெரியாத என் மேல் அவன் நினைத்த ஒரு காரணத்தினாலும் இருவரின் நட்பும் தண்டவாளங்களாயின, இருக்கும் இடம் தெரிந்தும், நெருங்க முயற்சி செய்யாமல்.

(சற்றே இடைவெளி எடுத்துக்கொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

சுனாமி என்ற வார்த்தை, பெரும்பாலான தமிழர்களுக்கு அறிமுகமாகி, சரியாக மூன்று மாதங்கள் கழித்து, ரயிலில் ராமேஷ்வரத்திற்குப் பயணம் செய்தேன்.

துங்கிக் கொண்டு இருந்த நான், காரைக்குடியில் கருவாட்டு வாடையில் எழுப்பப்பட்டேன். கருவாட்டுப் பெண், எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
"எங்கங்க ஆச்சி பயணம்?" எனக் கேட்டேன்.
"ராமேசுவரங்க தம்பி. நீங்க வேணும்முன்னா தூங்குங்க. பாம்பன் பாலம் வந்தோடன நான் எழுப்பிவிடுறேன்"
"இந்தக் கருவாட்டு நாத்தத்துல எங்க தூங்குறது?" என நினைத்துக் கொண்டு, ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
"சுனாமி அக்கோய். இங்க எடம் இருக்கு வா" என ஒரு பெண் குரல் கடைசி சீட்டில் இருந்து அவளைக் கூப்பிட்டது.
"நல்லதாப் போச்சு. தம்பி, கூட இங்கேயே இருக்கட்டும். நான் பின்னாடி ஒக்காந்துக்கிறேன்"
"ஒங்க பேரு சுனாமியா?"
"அந்த சிருக்கிக கிண்டலுக்குக் கூப்புடுறாளுக. நீங்க நல்லா கால நீட்டிக்கங்க"

சுனாமி அக்காவின் கருவாட்டு நாற்றமே பரவாயில்லை, அவள் பேச்சில் ஒரு பயலும் தூங்க முடியவில்லை. எனது ஐம்புலன்களில் காதும், மூக்கும் சுனாமி அக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன.
"ராமேஷ்வரத்துல சுனாமி வந்துச்சா?" கண்டிப்பாக இந்தக் குரலுக்குச் சொந்தக்காரிக்கும் என் வயதுதான் இருக்க முடியும். சரியான வசீகரக் குரல்.
"அது எப்புடி ராமநாதரு இருக்குறப்ப, அங்க ஒன்னும் நடக்காதுல்ல" சுனாமி அக்கா சொன்னாள்.
"அந்த ராமநாதரு ஏன், நாப்பது வருஷத்துக்கு முன்னாடி, தனுஷ்கோடியக் காப்பாத்தல?"
எழுந்திரித்து உட்கார்ந்தேன்.
"அது பொசக்காத்துல. சுனாமில பாருங்க, எத்தனையோ சனங்க செத்தாங்க. ராமேசுவரத்துல ஒண்ணூமே நடக்கல. சாமியோட சக்தி"

அவள் குரலின் தாலாட்டில், எனது மூக்கு தூங்கிவிட்டது. காது, அவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவள் சொன்னாள்,
"சிலோன்ல ஆயிரக்கணக்குல மக்கள, சுனாமில கொன்னுதான், தன் கோயிலக் காப்பாத்தணும்னா, அப்புடி ஒரு சாமியே தேவயில்லங்க"
எனது கண்களும், நாக்கும் சட்டென விழித்துக் கொண்டன, அவளைப் பார்க்கவும், பேசவும். நான்கு புலன்கள் அவள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நல்ல வேலை, நான் தூங்கிப் போயிருக்கவில்லை. கருவாடு எழுப்பி இருக்காவிட்டால், இப்படி ஒரு அழகான, அறிவான பெண்ணைப் பார்த்திருக்க முடியாது.

"சுனாமி அக்கா, சுனாமிக்கும், சாமிக்கும் சம்மந்தமே கெடையாது. ராமேஸ்வரம் தப்பிச்சதுக்குப் பூமியோட அமைப்புதான் காரணம். ராமநாதரு பாட்டுக்கு, பதினஞ்சு தீர்க்த்கங்கள வெச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்காரு. அவரு பேர நாம ஏன் இப்புடி கெடுக்கணும்?" என அறிவாளிபோல் காட்டிக் கொண்டேன்.
"இந்தப் படிச்சவங்களே இப்புடித்தான்" என சுனாமி அக்கா எழுந்து போய்விட்டாள்.
"நீங்க ஒக்காருங்க சார். நாம பேசிக்கிட்டு இருப்போம்"
ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமலேயே, பாம்பன் பாலம், இந்திரா காந்தி, பாக் ஜலசந்தி, பெர்முடாஸ் முக்கோணம், மரைன் டெப்த், சூயஸ் கால்வாய், நாசர் அப்துல்லா, சிவாஜி கணேசன், பிரமிடு, ஜில்லெட்டி, நாராயணமூர்த்தி, தாய்லாந்து, தியான்மென் ஸ்கொயர், வாட்டர்கேட் என நான்கு மணி நேரத்தில் பல விஷயங்கள் பேசி முடித்தோம். இது போன்ற விஷயங்கள் பற்றிக் கவலைப்படும் பெண்களே அபூர்வம். இவள் அவற்றைப் பற்றி விவாதித்தது, எனக்கு மிகவும் ஆச்சர்யம்.

பக்கத்தில் படுத்து இருந்த ஒரு குழந்தை சிணுங்கியது. அதைக் கவனிக்க திரும்பினாள். எட்டு போல் அவள் உடம்பை முறுக்க, இதுவரை இருந்த நான்கு புலன்களுடன் சேர்த்து, தோலும் அவள் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சட்டென சுதாரித்துக் கொண்டேன். இவளைவிடச் சிறந்த ஒருத்தி, எனக்குப் பொறுத்தமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை என முடிவே எடுத்துவிட்டேன். நான் சம்மதம் கேட்க நிமிர்ந்தேன். அதற்குள் அந்தக் குழந்தை எழுந்தே கேட்டுவிட்டது.
"அம்மா, உச்சா வருது"
"ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!??!?!?!?!?"
"ரெண்டு கொழந்தங்க, சார். கொஞ்சம் இருங்க. இவள ஒண்ணுக்குப் போக விட்டுட்டு வந்துட்றேன்"

படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன். அவள் குழந்தையத் தூங்க வைத்துவிட்டு, என் அருகில் வந்தாள்.
"என்ன சார், இங்க வந்துட்டிங்க?"
"சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க. பாம்பன் பாலம் பாருங்க"
"இன்னும் கொஞ்சம் லெஃப்ட் சைடு தள்ளி நின்னுங்க சார். நானும் நல்லா நின்னுக்கிறேன்"
தூரத்தில் தெரியும், கலங்கரை விளக்கத்தைப் பார்த்துவிட்டு சொன்னாள்,
"இந்த எடம், மனுசன் கண்ணுல படாமலேயே இருந்திருக்கலாம்"
"நீயும்தான், என் கண்ணில்" என நினைத்துக் கொண்டேன்.
"சரி சார். ஊர் வரப்போகுது. ஏன் வீட்டுக்காரரப்போய் எழுப்பிட்டு வர்றேன்"

வீட்டுக்காரரை அழைத்து, அறிமுகப்படுத்த வந்தாள். தோளில் ஒரு ஆண் குழந்தையுடன் நின்ற அவள் கணவனின் அறிமுகம்கூட எனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது. சிலநேர ஆறுதல்களுக்குப்பின், நானே கேட்டேன்,
"ஏன்டா ராம், என்ன ஓன் கல்யாணத்துக்குக் கூப்புடல. இந்த அழகான தேவதையப் பாத்துடுவோம்னா?"
"அது இல்லடா, கொஞ்சம் பேமிலி பிரச்சன. நீ என்ன இந்தப்பக்கம்"
"நான் ஒரு ஊருக்கு வருறதுக்கு எல்லாம் காரணமா வேணும்"
"இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"

கோயில் வந்தவுடன், ரூம் எடுத்துவிட்டு நான் சொன்னேன்,
"நீங்க குடும்பத்தோட, வந்திருக்கீங்க. நான் எதுக்குக் குறுக்கால? நான் கெளம்புறேன்"
"டேய் ஒன்ன யாருடா தொல்லைன்னா. இன்னக்கிப்பூரா எங்களோடத்தான் இருக்க"
"இல்லடா, சாட்சிகள வெச்சு யாரையும் எட போடாத"
"ஏன் டயலாக் எனக்கேவா? ஒரு கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் சரியாயிடும்"
"ஏன் டயலாக் எனக்கேவா?" என்றேன்.
"இன்னும் கல்யாணம் ஆகலையா? ச்சே, கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஒங்கக் கூட்டாளிக்குப் பாருங்க, ரெண்டு கொழந்தங்க" என்றாள்.
ராம், அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
"விடிஞ்சவுடனே அப்துல் கலாம் வீட்டுக்குப் போயிட்டு, அவரு அண்ணனப் பாத்து, கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு, அப்பறம் நம்ம ஏரியாவுக்கு எல்லாம் போய்ட்டு, சாயந்தரம் ஒரு அஞ்சு மணியப் போல, ரூமுல வந்து பாக்குறேன்" எனச் சொல்லி, கிளம்பிவிட்டேன்.

"இவன நம்பமுடியாது. இவன் கையில ஒரு கொழந்தையக் குடுத்துவுடு" என்றான்.
என் கையில் இரண்டு வயது பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு,
"அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. நாஸ்டர்டாமஸ் கத கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதப் பேசணும்"
அவர்களின் நம்பிக்கை என் நாவடைத்தது. குழந்தையுடன் பயணம் தொடர்ந்தேன்.

(சற்றே இடைவெளி எடுத்துக்கொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

மூன்றன்சத்திரம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தார்ச்சாலை முடிவடையும் இடம் அது. நண்பகல் வர இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. நானும் அப்பெண்குழந்தையும் சாப்பிட அமர்ந்தோம். அடுத்த பஸ்ஸில், ராம் குடும்பத்தின் மூன்று பேரும் எதார்த்தமாக அங்கு வந்தார்கள். நான் சொன்னேன்,
"கல்யாணத்துக்கு அப்பறம் மாறிட்டியோன்னு நெனச்சேன். பரவாயில்ல பழச ஞாபகம் வெச்சு இங்க எல்லாம் வர்றியே"
"இல்லடா சேகர், கல்யாணத்துக்கு அப்பறம் நான் ரொம்பவே மாறிட்டேன். இங்கவரைக்கும்தான் வருவேன். சுழலுக்கெல்லாம் வல்லடா"
"என்னங்க, பாப்பா அடம்புடிச்சாளா" எனக் கேட்டாள்.
"பாப்பா அடம் பண்ணாமத்தான் இருந்தது. இவருதான் அடம் பண்ணுறாரு. என்னோட ஒரு எடத்துக்கு வரமாட்டாராம்"
"சரி. அவரோட ஒரு பாகம் நான் வர்றேன்"
"சரிடா இவளக் கூட்டிட்டுப் போ"
"டேய் 36 கிலோ மீட்டர் நடக்கணும்டா"
"சரிடா நான் இங்கேயே இருக்கேன்"
"நான் ஒரு அர்த்தத்துல கேட்டா, இவன் ஒரு அர்த்தத்துல பதில் சொல்றான்" என நினைத்துக் கொண்டேன்.
"சரிடா, இவங்களும் என்னோட வரட்டும். பாப்பாவையும் கூட்டிட்டுப் போறேன்"
அவன், இன்னொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு நிழல் நோக்கி நடந்தான்.

"கொஞ்சம் இருங்க. ஒரு மணிநேரமா, ஒரு ஆளுக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டுப் போயிடுவோம்"
திரும்ப பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். நான்கு புலங்கள் மீண்டும் அடம்பிடித்தன.
"டேய் அய்யாத்துரை. வாடா. நல்லா இருக்கியா?"
"கண்ணாடி போட்ட அண்ணே வல்லையா"
"அவருக்குக் கொஞ்சம் வேல இருக்காம். அதுனால் வல்ல. சரிங்க நீங்க இவங்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. நான் இந்தா வந்துடுறேன்"
வேண்டுமென்றே ஐந்து நிமிடம் அவர்கள் இருவரையும் பேசவைத்துவிட்டு, திரும்பவும் வந்தேன்.
"சரிங்க ஏந்திரிங்க. நடப்போம். சரி போய்ட்டு வர்றோம் அய்யாத்துரை"
"இவுங்க யாருன்னே. ஒங்க பொண்டாட்டியா?"
நான் திணறினேன். அவள் பதில் சொன்னாள்,
"ஆமாம் தம்பி. நாங்க கெளம்புறோம்"
அடம்பிடித்துக் கொண்டு இருந்த நான்கு புலன்களும், ஒருசேர அவள்வசம் போய் சேர்ந்தன.

ஐந்து கிலோமீட்டர் வரை பொதுவிஷயங்கள் பேசினோம்.
"இங்க ஒரு மரத்தோட அடிவேர் கெடக்குதுல, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல நெஞ்சில் சில்சில்சில் பாட்டுல இது வருமுங்க. நல்லா சுத்திப் பாத்துட்டு தோணுறத சொல்லுங்க"
"சேகர், ஆமை மாதிரி இருக்குதுங்க"
"அதாங்க மணிரத்னம்"
இப்படி ஒரு தனிமை கிடைக்கவும், என் சிந்தனைகள் மாறின.
"ஏங்க பொண்டாட்டிதான்னு அய்யாத்துரைக்கிட்ட பொய் சொன்னீங்க?"
"நான் தான் எல்லாத்தையும் பேசியே கொழப்புவேன். இவனுக்குப் பத்து வயசு இருக்குமா? இந்த வயசுலேயே இப்புடி கொழப்புறான். அதான் இவன சமாளிக்க வேற வழி தெரியல. சில நேரங்கள்ல உண்மைகள மறைக்கிறதே நல்லதுங்க"
"That's what I want from you to experience in stead of to know. அதுக்காகத்தான், இவன ஒங்கக்கிட்ட விட்டுட்டு நான் எழுந்திரிச்சுப் போயிட்டேன். ஒரு பத்து வயசுப் பையனோட இவ்வளவு பெரிய கொழப்பத்துக்குக் காரணம், நம்மள மாதிரி பெரியவங்கதான். ஏதோ ஒங்கக்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு"
"I am really proud that my husband has a great friend like you."

"நீங்க ஒரு நண்பன் கொழந்தங்க நல்லா இருக்கணும்கிற நோக்கத்துல சொன்ன இந்த விஷயத்த, அவரு மொத ராத்திரியிலேயே சொல்லிட்டாரு. நீங்க க்யா து விர்ஜின் ஹே சொல்லி கிண்டல் பண்ணுனது உட்பட...."
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் லாட்ஜில் மாட்டினது போல், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"சாரிங்க நான் அய்யாத்துரைய அறிமுகபடுத்தி இருக்கக் கூடாது. ஆனா ராம் ரொம்ப நல்லவங்க"
"அதுவும் எனக்குத் தெரியுங்க. ஆனா இதேமாதிரி ஒரு பொண்ணு பண்ணுனா நீங்க ஒத்துக்குவீங்களா?"
"நடந்தத மறந்திருவோம். ராமுக்குத்தான் நல்ல தொண நீங்க இருக்கீங்க. இனிமே நடக்கப் போவத மட்டும் பாருங்க"

நீண்ட அமைதி. எதுவும் பேசாமல், நிழலுக்காக பக்கத்தில் இருந்த அனுமன் கோவிலுக்குள் நுழைந்தோம். அனுமனுக்கு முன்னால் பாப்பாவைத் தூங்கவைத்தேன். அமைதி தொடர்ந்தது.
"சேகர், உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், சாமிக்கிப் பின்னாடி வாங்க"
என் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்தாள்.
"ரொம்ப நாளா இந்த விஷயத்த ராமுக்கிட்ட சொல்லலாமுன்னு நெனச்சேன். ஆனா மனச்சாட்சி எடம் கொடுக்கல. ராமுக்கு ஒரே ஒருதடவ துரோகம் பண்ணிட்டேன். பாப் பாப் பாப்பா அவரோட கொழந்த இல்ல"
ராம் வாழ்க்கையில் என்ன நடக்கக் கூடாது என நினத்தேனோ அது நடந்தேவிட்டது.
அவள் என் புறங்கைகளை அழுதே நனைத்துக்கொண்டு இருந்தாள்.
"ஒருவேள, ராம் ஒங்ககிட்ட அவனப்பத்தி சொல்லாம இருந்துருந்தா, இப்புடி அவனுக்குத் துரோகம் பண்ணி இருப்பீங்களா?"
"தற்கொல பண்ணியிருப்பேன்"
"இப்ப ஏன் நீங்க தற்கொல பண்ணிக்கலே. மாத்தி மாத்தி பழி வாங்கிக்க இது என்னங்க குடும்பமா? இல்லை வேறெனங்க? நீங்க எல்லாம் ஏங்க கொழந்த பெத்துக்கிறீங்க?"

பயங்கரமாக அழுதாள். ஐம்புலங்களும் அவள்வசம் போயின. முதல்முறையாக அடிவயிறு அடங்க மறுத்தது; நடுமூளையில் அட்ரினல் பெருக்கெடுத்தது; இதயத்திற்கும், நுரையீரலுக்கும் உள்ள இடைவளியைத் தெளிவாக உணர முடிந்தது.
"இந்த ரகசியத்த ராம்கிட்ட சொல்லாம, மூணாவது ஒரு ஆளுக்கிட்ட சொல்லி ரெண்டாவது தடவையா ராமுக்குத் துரோகம் பண்ணிட்டீங்க. மூணாவது தடவ அவனுக்குத் துரோகம் பண்ண நான் ஒங்களக் கூப்புட்டா ஒத்துக்குவீங்களா?"

மெதுவாக நிமிர்ந்து, என் கண்கள் பார்க்கத் தைரியம் வரவழைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி சொன்னாள்.
"அதனாலதான், ஒங்கக்கிட்ட சொன்னேன். ராமின் ஒரு பாதி என்னோட உணர்வுகள, இன்னொரு பாதி ஒங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்"
வழக்கம்போல், நான் ஒரு அர்த்தத்தில் சொல்ல, அவள் ஒரு அர்த்ததில் புரிந்து கொண்டாள்.
அவள் இடது தோளில் கைவைத்தேன். பாப்பா சிணுங்கினாள். அனுமன் என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டார். பாப்பாவைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
"ரொம்ப வெயில் அடிக்கிதுங்க. பாப்பாவுக்குத் தாங்காது. கொஞ்சம் நில்லுங்க" என்று சொல்லி பாப்பாவை இறக்கிவிட்டாள். அவளுக்கு நேர் எதிரே நின்று அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மாராப்பை விலக்கி, பாப்பாவைத் தூக்கி, சேலையற்ற மார்பில் அணைத்துக் கொண்டாள்.

"சேகர், இந்த முந்தானைய எடுத்து, அப்புடியே பாப்பாவோட சுத்தி, பின்பக்கம் ஜாக்கெட்டுல சொறுகுங்க"
அவள் சொன்னதைச் செய்தேன். அட்ரினல் தூங்கப் போனது; இதயமும், நுரையீரலும் வேலைக்குத் திரும்பின.
"என்ன ஒண்ணுமே பேசாம வர்றீங்க. இன்னக்கித்தான் ஒரு மிகப்பெரிய பாரத்த எறக்கி வெச்சது மாதிரி இருக்கு" என்றாள்.
"ஒரு பாரத்த எறக்கி வெச்சு, என்னையும் துரோகம் பண்ண நெனக்க வெச்சீங்க. ஒரு பாரத்த ஏத்தி வெச்சு, நானும் ஒரு துரோகம் செய்யாமத் தடுத்துட்டீங்க. புரியலல்ல. சில விஷயங்களத் தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது, அய்யாத்துரைக்கி நீங்க இப்புடித்தான் சொன்னீங்க"

கடற்கரை மணலில் அமர்ந்து, ராமின் குடும்பத்துடன் பேசிக்கொண்டு இருந்தோம். பாப்பா ராமிடம் சொன்னாள்.
"அங்கிள் எனக்கும் ரைம்ஸ் சொல்லிக் குடுத்தாரே"
"சொல்லு பாப்போம்"
"அன்பும் அடனும் உய்த்தான் பன்பும் பனும் அது"
எல்லோரும் சிரித்தோம்.
"இப்ப நான் சொல்றத அங்கிளுக்கிட்ட சொல்லு"
ஏதோ காதில் சொன்னான்.
பாப்பா என்னிடம் சொன்னாள்,
"க்யா து விர்ஜின் ஹே?"
என்ன அர்த்தத்தில் கேட்கிறான் எனப் புரியாமல், "டேய் என்னாடா இப்புடி?"
"சும்மாதான்டா"
"பாப்பா, வாழ்க்கையில ஹிந்தியே கத்துக்காத. ஏன்னா வாழ்க்கையில சில விஷயங்கள் தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது" எனச் சொல்லிக் கொண்டே, பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு, அவளைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இந்த நம்பிக்கை போதும் ராமின் வாழ்க்கையில் இனி பிரச்சனை இல்லை. நம்பிக்கை என்பது எல்லா கடவுள்களை மட்டுமல்ல, எல்லா உறவுகளையும் வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

"சரி பாப்பாவுக்குப் பதில் சொல்லுங்க" என்றாள் அவள்.
"ஒரு நாள் முழுக்க ஒங்ககூட இருந்துருக்கேன். இன்னும் ஒங்க பேர் எனக்குத் தெரியாதுங்க"
"பேச்ச மாத்தாதீங்க. பதிலச் சொல்லுங்க"
"சரி ஒங்க பேரு எனக்குத் தெரியாமலே இருக்கட்டும். சில விஷயங்கள் தெரியாமலே இருக்குறது நல்லது, நாஸ்டர்டாமஸ் போல,,,,"
"சரி சரி பதில்"
"பதில்..... நான்...... இல்லங்க"
ராம் சொன்னான். "இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"
ஓர் பெரிய அலை, எனக்குச் சாரலால் பன்னீர் தெளித்தது.

-ஞானசேகர்

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

nice

செல்வேந்திரன் said...

Really a great work..Keep on doing !!

Anonymous said...

really a good story...
good narration..
story was well explained in visual manner....

Ram said...

man... This is an AMAZING story.. Narration was very good.. But I trust you need to brush up in your language skills....

Really AMAZING...Good work.. keep it up...
Write more... :)