புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, February 18, 2009

பிற(ழ்)ந்தவை

(தனது வயிற்றில்தான் கடவுள் பிறக்கப் போகிறார் என்று தெரிந்திருந்தும் கூட, ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்படும்போது, சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பாள் கடவுளின் தாய். அப்பேற்பட்ட தாய் - சேய் உறவு துண்டிக்கப்படும்போது சேய் பேசுவதாய் இக்கவிதை)


திரையரங்கின் முக்கிய காட்சிகளில்
அழுது சத்தம் போட்டு
உன்னை வெளியே கூட்டிவர
நானிருக்கப் போவதில்லை
என் தடித்த உதடு தொட்டுப்பார்!

எனக்கு பசி எடுக்கும்
உனது சங்கட சந்தர்ப்பங்களில்
உன் மார்திறந்து பால்குடிக்க
நானிருக்கப் போவதில்லை
தொப்புள்கொடி தொட்டுப்பார்!

மாதக் கணக்கில்
நாள் தவறாமல்
தடுப்பூசி வரிசைகளில்
உன்னை நிற்கவைக்க
நானிருக்கப் போவதில்லை
உச்சந்தலையின் இளகிய கபாலம்
முகர்ந்து பார்!

என் பால்குடி மறக்கவைக்க
ஒரு வீட்டில் என்னையும்
ஒரு வீட்டில் உன்னையும்
சிறைபிடித்து தவிக்கவைக்க
நானிருக்கப் போவதில்லை
என் துடிக்காத மார்பை
ஒருமுறை தொட்டுப்பார்!

தாத்தாவைப் போல உயரமா
அப்பாவைப் போல கோபமா
உன்னைப் போல மாநிறமா
ரசித்து வளர்ந்துகாட்ட
நானிருக்கப் போவதில்லை
என் உள்ளங்கை தொட்டுப் பார்!

உணவு கழிவு காற்று
இரத்தம் சதை உயிர்
எல்லாம் என்னுடன்
கருமூடி பத்து மாதம்
பகிர்ந்து கொண்டவளே
புழுதி மண்மூட தயாராகிறேன்
மூடிய கண்கள் திறந்து
ஒருமுறை என்னைப் பார்!

ஒரு தாய்மாமன்
ஒரு குறவன்
எனக்கான ஊர்வலம் தயாராகிறது
நான்குபேர் கூட இல்லாமல்!

எனக்கே எனக்கான
சான்றிதழ் தயாராகிறது
என் பெயர் கூட இல்லாமல்!

நீ கண்விழிக்கும்போது
என்னைப் பற்றிய
தகவல்கள் சொல்லப்படும்.
நீ அழுது முடிக்கும்போது
ஏதாவது ஒரு குரல்
சோகமாகச் சொல்லும்
நான் வானம் நோக்கி பி(இ)றந்ததை!

- ஞானசேகர்

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தம்பி!

வார்த்தைகளில் கனம் எடுத்து வந்து மனத்துக்குள் இறக்கி வைத்துவிட்டுப் போய் விட்டீர்கள்.

மதுசூதனன் said...

enna solrathune theriyalai!!!!!!!!!!!!