புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, August 23, 2009

மதுரை காந்தி மியூஸியம்

Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood.
- Albert Einstein

ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.

விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.

காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.

1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,

2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,

3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.

காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.

எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....

- ஞானசேகர்
(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)

6 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு!

//இப்படி சில 'கொ'ட்ட அனுபவங்கள் //
பிழை இருக்கிறது. திருத்திக்கொள்ளுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

இயல்பான பதிவு..! நன்று..

ஜெனோவா said...

Nalla pathivu...seekiram poi paarkiren ;-)

//பரிசீளிக்கப்பட்ட // thirutthikkolungal nanbare.

vaalthukkal

Unknown said...

நல்ல பதிவு தொடருங்கள்.

Ganeshguns said...

Hi Sekar very nice posts but I have a question why have you given the picture of Puri Jagannath below three monkeys of Gandhi

J S Gnanasekar said...

ganesh,

Puri Jagannath படத்தை முதன்முதலில் இன்றுதான் பார்க்கிறேன். எனக்கும் சற்றுக் குழப்பமாகிவிட்டது. குழப்பம் தீரும்வரை அப்படத்தை நீக்கிவிடுகிறேன்.

மிக்க நன்றி.

- ஞானசேகர்