புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, November 03, 2012

தாகமுள்


யமுனாவுக்கு எப்போதும் இருக்கும்
ஒரே வருத்தம்
ஜானகிராமன்
யமுனாவுக்கு
வேறு பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான்
- மனுஷ்ய புத்திரன் ('யமுனாவின் வருத்தம்' கவிதையிலிருந்து)

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது 
உயிரின் தேடல் கடைசியில் உனைக் காண்பது 
- வைரமுத்து

யமுனா.

ஆற்றின் பெயரைக் கொண்டிருப்பதும்
நீரோடும் ஆறுகளைப் பார்த்திராததும்
ஆறுகளை நேசிக்கப்
போதுமான காரணங்களாய் இருந்தன.

கடல் சேர்வதில்லை யமுனா
என்று தெரிய வந்த நாளில்
யமுனாவைத் தவிர‌
வேறெந்த ஆற்றையும்
முதலில் பார்க்கக் கூடாதென
முடிவெடுத்துக் கொண்டாள்.

படங்களில் பார்த்த‌
ஆறுகளின் பிரம்மாண்டத்தைக்
கற்பனையின்
முழு ஆழத்திற்கும் மூழ்கிப்போய்
கரைபுரளச் செய்வாள்.

நிரம்பித் தளும்பும்
நீள்வட்டக் குளங்களின்
முடிவற்ற நீளமுள்ள‌
செவ்வகப் பரிணாமம்
ஆறுகளென முடிவுக்கு வந்தாள்.

பார்க்கும் குள‌ங்களெல்லாம் நின்னைப்
பார்க்குமின்பம் தோன்றுதையே
என்று கண்ணில் படும்
குளங்களை எல்லாம்
ஆறுகளின் பெயரிட்டுக் கொள்வாள்.

யமுனாவைத்
தன‌க்கு மட்டுமே வைத்துக் கொண்டாள்.

ஒரே சாலையில்
முன்னே பயணிக்கையில்
நைலுக்கும் தபதிக்கும் இடையேயும்
பின்னே பயணிக்கையில்
நர்மதாவுக்கும் கங்கைக்கும் இடையேயும்
வைகையை எளிதாக‌
வைத்துவிட முடிந்தது அவளால்.

தேசிய கீதத்தில்
சிந்துவை நீக்கச் சொன்னபோது
அமேசானுக்கும் கோதாவரிக்கும் இடையே
பத்திரமாகப் பாயவிட்டாள்.

பருவம் திறந்து
தூரமான நாட்களிலும்
தனது ஆறுகளைக் கரையேற்றி
தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.

யமுனாவின் ஆறுகளில்
குத்தகை இல்லை
நிபுணர்கள் இல்லை
மன்றங்கள் இல்லை
அணைகள் இல்லை
IPCயும் TMCயும்
அறவே இல்லை.

யமுனாவின் ஆறுகளில்
யமுனாவிற்கும் உரிமையில்லை.

யமுனாவின் மகாநதி
வான்மழை வேண்டி
வாய் பிளந்த நாளில்
வாயடைத்துப் போனாள்.

யமுனாவின் கூவத்தில்
புறவழிச் சாலைகள்
புகைகக்கிப் போன நாளில்
மூச்சுத் திணறிப் போனாள்.

யமுனாவின் அமராவதியைக்
கனரக வாகனங்கள்
அள்ளிப் போன நாளில்
கொஞ்சம் செத்துப் போனாள்.

யமுனாவின் நொய்ய‌லில்
சதுர அடிப் பாத்தி கட்டி
காங்கிரீட் முளைத்த நாளில்
பாதி செத்துப் போனாள்.

யமுனாவின் காவேரியில்
பள்ளி வாகனம் கவிழ்ந்த நாளில்
ஏழு பேரில் ஒருத்தியாக‌
முழுவதும் செத்துப் போனாள்.

தாமரை இலைகளினிடையே
மூழ்கிக் கொண்டே
யமுனா கத்தினாள்
'விட்டுடு காவேரி! விட்டுடு காவேரி!'.

வேடிக்கை மனிதர்களினிடையே
யாரோவோர் உள்ளூர்ச் சிறுமி
கரையிலிருந்து கத்தினாள்
'விட்டுடு யமுனா! விட்டுடு யமுனா!'.

- ஞானசேகர்

1 comment:

J S Gnanasekar said...

http://indiatoday.intoday.in/story/national-anthem-bombay-high-court-maharashtra-government/1/291053.html