புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, January 29, 2018

சாணக்கியன் in Digital (H)India

வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி
சாதுக்கள் எப்போதும்
சாதுவாய் இருப்பது
- வைரமுத்து

Based on true events.....

பத்து இலட்சம் செலவு செய்
தெர்மோகோல் ஆடை செய்
ஆவி ஆகாது வைகையாறு மூடு
மங்குனி மந்திரி மதுரையில் என்பார்கள்

ஒன்றரை கிலோமீட்டர் சேலை நெய்
கோதாவரி மூடச் செய்
ஆற்றைத் தாயே என்று சொல்லிவை
கோதாவரி காத்த கோமகன் என்பார்கள்


குரங்கு மனிதனானதை யாரும் கண்டிலர்
டார்வின் சொன்னது பொய்யெனச் சொல்
அறிவியல் அறியா அமைச்சர் என்பார்கள்

யானைத்தலை மனித முண்டத்தில் ஒட்டிய அற்புதம்
அகில இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்
அகில உலக மாநாடுகளுக்கும் உன்னையே அழைப்பார்கள்


ஊருக்கு வெளியே மகிளா பவன் கட்டு
மாதவிலக்கானவளை அங்கு போய் தங்கச் சொல்
காட்டுமிராண்டிகள் காலத்தில் கர்நாடகம் என்பார்கள்

ஒற்றை நாடென்று ஒரே வரியில் சொல் (GST)
பெண்மையே தெய்வீகக் காட்சியடா என்று முழங்கு
பெண்ணின் நாப்கினுக்கு விலையேற்றி தூரமாக்கலாம்


கடல்நீரின் உப்பு நீக்கி நன்னீராக்கு
லிட்டர் குடிநீர் பத்து ரூபாய்க்கு விற்கச் சொல்
டாஸ்மாக் மூடிவிட்டு மறுவேலை பார் என்பார்கள்

ஏதோ நீர் பிடித்து பாட்டிலில் நிரப்பு
தபாலில் கங்காஜல் என்று சொல்
தபால்துறை தழைப்பது காண்பாய்


வாரிசையோ உறவையோ சிபாரிசு செய்
ஓய்வுபெறும் தோட்டிகளுக்குச் சட்டம் செய்
மலத்தில் மூழ்குகிறது மராட்டியம் என்பார்கள்

கடவுளுக்குச் செய்யும் தொழிலென்று சொல்
சுத்தமாய் இருக்க வரிகள் விதி
தோட்டியும் தோட்டியாகவே இருக்கக் காண்பாய்


சுரபி நந்தினி காம‌தேனு வேதங்களில் இல்லை
பசுவுக்கென்று தனியே கடவுளோ கோவிலோ இல்லை
உன் புராணமே உன் பசுவின் வாய் தீட்டு என்கிறது
என் மாட்டை நான் தின்றால் உனக்கென்ன என்பார்கள்

இப்படி வசமாக மாட்டிக் கொண்ட‌ சமயங்களில்
காசுவாங்கி மிஷனரிகள் சதியென்று சொல்
கேட்டவனைப் பாகிஸ்தான் போகச் சொல்
ஓர் இஸ்லாமியனையோ தலித்தையோ தூக்கிலிடு


தாய்மொழி கட்டாயமாக்கு
கிணற்றுத் தவளைக் கல்விமுறை என்பார்கள்

சமஸ்கிருதம் தேவபாஷை என்று பரப்பு
இதோ படிக்கிறோம் இந்தி என்பார்கள்


அரசு செலவில் இரட்டை இலை கட்டு
பறக்கும் குதிரையென‌ மறுதலிக்கச் செய்வார்கள்

ஊர் கூட்டித் தேரிழுத்து மசூதி இடி
கோவில் கட்ட ஓட்டுப் போடுவார்கள்


ஏழை வீட்டில் குறியிட்டு வை
யூதன் வீட்டில் நாசி வைத்த குறி என்பார்கள்

உலர்பனி விலைக்கு வாங்கி இல்லாத சாமி செய்
கோமகன் ஆட்சியைச் சொர்க்கம் என்பார்கள்


இமயக்கல் கங்கைவழி வந்து கண்ணகி சிலையானது கிடக்கட்டும்
கங்கைக் கரையில் வள்ளுவனுக்குச் சிலை வைத்து முக்காடிடு

விவசாயிகள் அம்மணமாய்ப் போராடட்டும்
நிர்வாணச் சாமியாரைச் சட்டசபைக்குக் கூப்பிடு

கீழடி கிடக்கட்டும்
தாஜ்மகாலுக்குக் கீழ் சிவன்கோவில் மீட்டெடு


கேள்விகள் கேட்கப்படும் முன்
தவறான பதில்கள் பரப்பிவிடு
சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும்
கொஞ்சம் உண்மை தெளி
செய்யும் ஒவ்வொரு செயலிலும்
கொஞ்சம் மதம் தூவு.

- ஞானசேகர்
(சந்தத்திற்காக இக்கவிதையில் ஒருவரி 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

No comments: