புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, February 05, 2012

மிகப்பெரிய குடியரசு நாடு

வெள்ளையனிடம் இருந்து வாங்கி
கொள்ளையனிடம் கொடுத்து விட்டோம்.
‍- யாரோ


(குடியரசு தினத்தன்று கண்ணில்பட்ட சில காட்சிகளின் பாதிப்பில் எழுதியது)

வேற்றுமையில் ஒற்றுமை என்பது
மதுவிலக்கு நாட்களுக்கான‌
மது தக்க வைத்தல்.

தேசப்பற்று என்பது
ஆட்சி விமர்சித்து
வரிசையில் முந்தல்.

தியாகம் என்பது
யானை விலைபோகும் கழுதையின்
குதிரைத் தள்ளுபடி வரிசையில் நிற்றல்.

சுதந்திரம் என்பது
விளம்பரப் பலகை
சாலையில் வைத்தல்.

சகோதரத்துவம் என்பது
நிதியிட்டவர்கள் பெயர்க‌ளுடன்
பட்டம் சூட்டி புகைப்படமிடல்.

ச‌ம‌த்துவ‌ம் என்ப‌து
மூவ‌ர்ண‌க் கொடியை அறுச‌ம‌க் கூறுக‌ளாக‌
அலைய‌டிக்க‌ வைத்த‌ல்.

நீதி என்பது
இரண்டாம் ஐந்தாம் அலைகளில்
அசோகச் சக்கரமிடல்.

சுயராச்சியம் என்பது
மூன்றாம் நான்காம் அலைக‌ளுக்கு இடையில்
க‌ட‌வுள் ப‌ட‌மிட‌ல்.

ச‌ம‌ய‌ச்சார்பின்மை என்பது
கடவுள் முகத்தில்
தலைவன் முகம் புதைத்தல்.

குடியரசு என்பது
ஆகஸ்ட் 15 ஜனவரி 26
இரண்டில் ஏதோ ஒன்று எனல்.

- ஞானசேகர்

No comments: