புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 02, 2005

இதுவும் காதலா?

(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)

"காதல் யாருக்கும்
ராசியில்லை.
ஆனாலும் யாரும்
விடுவதாயில்லை!"
-யாரோ


"வாழ்ந்துகொண்டே செத்ததுண்டா?
செத்துகொண்டே வாழ்ந்ததுண்டா?
காதலித்துப் பார்!
ஐந்தங்குல தொலைவில் அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்துப் பார்!"
-வைரமுத்து


அக்டோபர் 2, 2003.
இன்றோடு என் தலையில் கிறிஸ்துமா தைலம் தடவி, எனக்குப் பெயர் வைத்து 18 வருடங்கள் ஆயிற்று. பெற்றவர் பல சுதந்திரங்கள் கொடுத்தும், திருச்சியைவிட்டு வெளியே நான் போனதில்லை.

19 வயதாகியும் வெளியுலக அறிவு இல்லாத என்னை, உலக கஷ்டங்கள் அறியவைக்க எனக்கே தெரியாமல் அப்பா ஒரு திட்டம் போட்டார். "இந்த வருடப் பிறந்தநாளை நான் மட்டும் தனியாக, தஞ்சாவூரில் உள்ள சித்தப்பா குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்" என்று கூறி என்னை மட்டும் தனியாக அங்கே அனுப்பி, சித்தப்பா குடும்பத்தை இங்கே வரச் செய்து, சில கஷ்டங்கள் நான் படவேண்டும் என்பதே அந்தத் திட்டம். நல்லதொரு விஷப்பரிட்சை! இத்திட்டம் தெரியாமல் நானும் சம்மதித்தேன். முதன்முதலில் தனியாகப் பேருந்தில் பயணம், மலைக்கோட்டை நகரிலிருந்து, தலையாட்டி பொம்மை நகருக்கு. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அடுத்த பஸ் எறி, சித்தப்பா வீடு போய்ச் சேர்ந்தேன்.

மாலை 4 மணி. பூட்டிய வீடு. பக்கத்து வீட்டு மாமியை விசாரித்தால், "சாந்தி தியேட்டருக்குப் படத்துக்குப் போகணும்னு சொல்லின்ட்ருந்தா. எதுக்கும் 6 மணிவர வெய்ட் பண்ணு" என பதில் வந்தது. மாடிவீட்டு அக்கா எவ்வளவோ கூப்பிட்டும் அவர்கள் வீட்டில் உட்காராமல், சித்தப்பா வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தேன். ஆறுமணியும் கைவிட்டது. இருட்டு கை பிடித்தது. பயப்படாமல் 3 மணிநேரம், திண்ணையிலேயே ஓட்டிவிட்டேன். எப்படி வந்தது இவ்வளவு தைரியமும், பொறுமையும்?

வீதியில் நடந்து போவதைப் போல, சில ஆண்களின் சந்தேகப் பார்வைகள் என்னைக் குத்திப்பார்த்தன. தெருமுனையில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துவிட்டு, மணி பார்த்தால் 7:30. நேரம் போவதற்குள் வீடு திரும்புவது நல்லது என யாரிடமும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாப் வரை சில வாலிபர்கள் எனக்கு பாதுகாப்பாக வந்தனர்.

இரவு 8 மணி. தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட். வசந்தபவனில் சாப்பிட்டுவிட்டு, திருச்சி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தேன். அது கொஞ்சம் ஓரமான இடம். சாய்ந்துகொள்ள ஒரு தூண் கிடைத்தது. ஏற்கனவே தாமதமாகி விட்டதால் திருச்சி சென்று, வீட்டுக்குப் போன் செய்யலாம் என நினைத்தேன்.

இரவு 8:30 மணி. லேசாகத் தூங்கப் பார்த்த என்னைத் தூண்தான் தாங்கிப் பிடித்திருந்தது. என் பின்னால் இருந்து திடீரென வந்த நான்கு வாலிபர்கள்-அதில் ஒருவன் திண்ணையில் என்னை முறைத்தவன்-என்னை மையமாக வைத்து ஒரு வட்டம் போட ஆரம்பித்தனர்.
"எங்கள்ல யாரப் புடிச்சிருக்கு?"
"இந்த நேரத்துல இப்புடி சுத்துறியே? தொழிலுக்கு வந்தியா?"
"திண்ணையில நல்லா லூக்கு குடுத்த. இப்ப கம்பெனி கொடுக்கிறியா?"
"திருச்சி திருச்சிதான்டா"
இவையெல்லாம் அவர்கள் மையம் நோக்கி வீசிய வார்த்தை அம்புகள்.

மூன்றுபேர் சில எழுதமுடியாத வார்த்தைகள் பேச, ஒருவன் மட்டும் ஒரு பாட்டிலுடன் என்னை நெருங்கினான். திடீரென சம்மந்தமே இல்லாமல் கருப்புச் சட்டையுடன் ஒருவன் வேகமாக வட்டத்தைத் துளைத்து வந்தான். அவனின் இடதுகை என் தோள்மேல்
இருப்பதுபோல், என் தாடை நகரவிடாமல் பிடித்தது. அவனின் வலதுகை என் தலை கோதுவதுபோல், என் தலையை அமுக்கியது. "என்ன கவிதா ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா? நீடாமங்கலம் வரைக்கும் போயிருந்தேன். அதான் லேட்டு. அப்பறம் நாளைக்கு........." என ஏதோ பேசிக்கொண்டே, வட்டத்தைத் துளைத்துக் கொண்டு என்னை ஒரு டீக்கடைநோக்கி இழுத்து வந்தான். "நான் கவிதா இல்ல. என்ன விடுங்க" என கத்தப் பார்த்தால் அவன் பிடிகள் பேச்சைத் தடுத்தன.

ரெண்டு டீ சொல்லிவிட்டு, தொடர்ந்து சம்மந்தமில்லாமல் பேசிக்கொண்டு இருந்தான். நான்கு பேரும் எங்கள் அருகே சம்பந்தமில்லாததுபோல் வந்து நின்றனர். பிடி தளர்த்தி டீ கொடுத்தான். ஒரு திருச்சி பஸ் வந்து நின்றது. அவன் கைகள் என் கையைப் பிடித்திருந்ததால் நான் நகரவில்லை. பஸ் போய்விட்டது. நால்வரும் தலை சொறிந்து தலை மறைந்து போயினர். வீட்டுக்குப் போன் செய்ய அனுமதி தந்து பிடி தளர்த்தினான். என்னைப் பற்றி ஏதும் கேட்காமல், என்னைத் திட்டாமல், யாரையோ பார்த்துவிட்டு வந்தாக ஏதோ விரக்தியாகப் பேசினான், துளிகூட சிரிப்பில்லாமல். ஒரு திருச்சி பஸ் போனது. நான் நகராமல் நின்றுகொண்டிருந்தேன். போன்பூத் அருகில் வேளங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். "இவர்களுடன் போய்க் கொள்கிறேன்" என்றேன். என் ஊர்கூடக் கேட்காமல் நடைகட்டி அவனும் இருட்டில் மறைந்து போனான்.

இரவு 9 மணி. ஒரு தனியார் பேருந்தில் அந்தக் குடும்பத்துடன் ஏறினேன். படிக்கட்டை ஒட்டிய சீட்டில் ஜன்னலோரத்தில் அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். என்ன ஒரு co-incidence? அவன் அருகில் அமர்ந்தேன். ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு வினாடி என் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான். நானே முன்வந்து முதன்முதலில் என் குரலை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன்.
"ரொம்ப தேங்ஸ்"
"கிருஷ்ணா! கிருஷ்ணா!ன்னு கத்துனா கிருஷ்ணன் வரவேமாட்டாரு. இதுக்கெல்லாம் இன்னொரு ஆள எதிர்பார்க்காம, நீங்களே...."
"உங்க பேர் என்ன?"
மறந்துபோனது போல ரொம்ப யோசிச்சு,
"சேகர்"
என் பெயர் கேட்கப்படவில்லை.
"ஊர்?"
திரும்ப அமைதி. பிறகு
"புதுக்கோட்டை"
"புதுக்கோட்டைன்னா?"
திரும்ப அமைதி. பிறகு
"ராணி ஆஸ்பத்திரி பக்கத்துல"
"புதுக்கோட்டைக்கு டேரக்ட் பஸ் இருக்குறப்ப, ஏன் சுத்திப் போறீங்க?"
பதிலே இல்லை. மீண்டும் ஜன்னல் பக்கம்.
கடைசி சீட்டில் இருந்து ஒருவன் எழுந்துவந்து என் முகம் பார்த்துவிட்டு எனக்குப் பின்னால் அமர்ந்தான். இவன் கருவேள மரங்களை ரசித்துக்கொண்டு இருந்தான். தூங்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் அவன் தோள் சாய்ந்தேன். NIT (REC) தாண்டியபிறகு விழித்துப்
பார்த்தால், அவன் அருகில் இல்லை.

"யாரையோ பார்த்ததாக என்னிடம் விரக்தியாகச் சொன்னானே. என்ன சோகமோ? இப்படி உதவி செய்த இவருக்கு, அவர் சொன்ன சோகம் கேட்காமல் போய்விட்டோமே" என நினைத்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன். அப்பாவும், சித்தப்பாவும் வெற்றிபெற்று
விட்டதாகப் பெருமிதப்பட்டனர். நடந்தது ஏதும் சொல்லாமல், அவன் ஞாபகமாய் இருந்தேன். தூக்கம் வராத அந்த இரவில் நான் யோசித்தபோது, என்னை உலகம் அறியச்செய்ய அப்பா போட்ட திட்டம், என் உலகமே அவன் தான் என்ற அளவுக்குக் கொண்டுபோய்விட்டது. சாது நான் மிரண்டு போனேன். மறுநாளே புறப்பட்டேன் அவன் இடம் தேடி. ப்ரண்டு வீட்டுக்கு என்று அப்பாவிடம் பொய். புதுக்கோட்டை ராணி ஆஸ்பத்திரி வீதியெங்கும் அலைந்தேன். அப்படி ஒருவன் இல்லை. அவன் கண்டிப்பாக என்னைச் சமாளிக்கத்தான் ஏதோ ஒரு இடத்தைச் சொல்லியிருக்க வேண்டும். இவ்வீதி பொய்யாகலாம். தூண் பொய்யல்ல. தஞ்சாவூர் புறப்பட்டேன். தூணில் வெகுநேரம் சாய்ந்து நின்றுவிட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொருமுறை சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதும், அவன் ஞாபகம்
அதிகமாய் வரும்போதும் தூணைக் கண்டிப்பாகச் சந்திப்பேன். நிறையமுறை தூண் சாய மட்டுமே சென்றுவிட்டு, சித்தப்பா வீட்டுக்குச் செல்லாமல் வந்ததுண்டு.

"இது காதலா?" என்னைக் கேட்டேன். நான் பதில் இல்லாமல் இருந்தேன். "தந்தையைத் தவிர என்னை அதிகம் பாதித்த ஆண் அவன்மட்டும்தான். இன்னும் உலகுடன் பழகிப் பார்த்தால் வெகு ஆண்களைச் சந்திக்கக் கூடும். இவனும் மறக்கப்படுவான்" என்றேன்
நான். "அவன் மறக்கப்படக்கூடிய ஆள் இல்லை" என்று பதில் சொன்னேன். "முகவரி இல்லாமல் தேடுவது, பெயரில்லாமல் தேடுவது, தூணைத் தேடுவது எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? பைத்தியக்காரத்தனம் இல்லையா?" எனக் கேட்டேன் நான். "சில நேரங்களில் இதயத்தைச் சமாதானப்படுத்துவதைவிட மூளைக்கு அடிமையாவதே உத்தமம்" எனச் சொல்லி வாதத்தை முடித்தேன். அவனும், தூணும் என்னுடைய முதல் ரகசியங்களாகத் தொடர ஆரம்பித்தன.

அக்டோபர் 2, 2004.
இன்று எனக்கு இருபதாவது பிறந்தநாள். தஞ்சாவூருக்குக் கிழம்பினேன். சித்தப்பா வீட்டுக்கு அல்ல. தூணுக்கு. இது ஏழாவது முறை என்று நினைக்கிறேன். மூன்று மணிநேரம் பொழுது ஓடிவிட்டது. வீடு திரும்பினேன். கோயிலுக்குக் கிழம்பினோம். அம்மா அப்பா முன்னாடியே கிழம்பி போய்விட்டனர். நான் புடவை கட்டிக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் தனியாக இருந்த எங்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டினர். கதவைத் திறக்காமல்,
"யாரது?"
"தண்ணி"
புடவை கட்டி முடித்துவிட்டு, செம்பு தேடினேன். அவசரத்தில் பாட்டி காலத்து செம்புதான் கிடைத்தது. முகம் பார்க்காமல் சொம்பைக் கொடுத்தேன். முகம் பார்த்திருந்தால் சொம்பின் கதி? அது அவனேதான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். சிரிக்க வந்தவன், சிரிப்பு அடக்கி தாகம் நினைத்து, குடிக்க ஆரம்பித்தான்.
"ஏன் புதுக்கோட்டைன்னு பொய் சொன்னீங்க?"
".........."
"பேராவது உண்மையா? சேகர்தானே?"
".........."
"இன்னைக்கு எனக்கு உண்மை வேணும்"
"தண்ணி"
"உள்ள வாங்க. எங்க வீடுதான்."
"போங்க வர்றேன்"

"தாயுமானசாமி கைவிடல. அவங்கிட்ட ராணி ஆஸ்பத்திரி வீதியில தேடினது முதல், எழுமுறை தூண் சாய்ந்தது வரை சொல்லி, ஏன் எனக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான வாழ்க்கை உன் விஷயத்தில் மட்டும்? இன்னக்குக் காலையில் கூட தூணுக்கு வந்தேன். கரக்டா இன்னொட நாம பாத்து ஒரு வருஷம் ஆகுது. ஓன் பேருல வேற யாரையுமே நான் பாத்ததில்ல. நீ வந்தால் மட்டும்தான் நான் சரியாக முடியும். நீ இல்லாமலே உன்னைப் பற்றி ஒரு வருடம் நினைத்திருந்தேன். நீ மட்டும் வந்துவிட்டால்?". இன்னும் ஏதேதோ பேச, கேட்க வேண்டும் என சொம்பை நிரப்பிக்கொண்டு ஓடிவந்தேன். வீட்டுக்குள் அவன் வரவேயில்லை. வாசலிலும் இல்லை. அவன் நின்ற இடத்தில் சோனா தியேட்டர் டிக்கட் மட்டும் கிடந்தது.

நான்கு பேரால் ஏமாற்றப்படாமல் காப்பாற்றப்பட்ட நான், ஒருவனால் அவனுக்கே தெரியாமல் அடிக்கடி ஏமாற்றப்பட்டேன். மீண்டும் எனது பைத்தியக்காரத்தனம் தொடர்ந்தது, இப்போது அதிக வீச்சில், இன்னும் நம்பிக்கையுடன்.

அக்டோபர் 2, 2005.
இன்று எனக்கு இருபத்தி ஒன்றாவது பிறந்தநாள். போலந்தின் மன்னர் ஜானுக்கு அடுத்து, ஒரே தேதியில் பிறந்து, பெயர் சூட்டப்பட்டு, இறந்து, வாழ்க்கைத்துணை சந்தித்து, திருமணம் செய்துபோனது நானாகத்தான் இருக்கும். ஆம், பெற்றோரின் கட்டாயப்படி கல்யாணமும், என் விருப்பப்படி ஒரு தஞ்சாவூர் மாப்பிள்ளையும் என் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டனர். கல்யாணம் தஞ்சாவூரில். முதலிரவு திருச்சியில்.

இரவு 9 மணி. கல்யாணம் முடிந்துவிட்டது. முதலிரவுக்குப் பாட்டியின் செம்பை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தநாள் முடிய இன்னும் மூன்று மணிநேரம் இருக்கிறது. நான் மட்டும் மணமாலையுடன், கழுத்து நகைகளுடன், இறந்தகாலத்தை இறக்கவிட மனமில்லாமல், எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில், தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டில் அந்த ஒற்றைத்தூணில் சாய்ந்துகொண்டு நிற்கிறேன்.

திருச்சி தனியார் பஸ் ஒன்று என்னைக் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. டீக்கடையில் T.ராஜேந்தரின் "வாசமில்லா மலரிது" என்ற பாடல் பாடிக்கொண்டு இருக்கிறது. "என்ன சுகம் கண்டாய் இன்றுவரை தொடர்ந்து உனக்கேன் ஆசை?" என்ற வரிகள் எனக்கு நன்றாகவே கேட்டன. அதை
நான் என்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் செய்வது வார்த்தைகளில், எழுத்துகளில் சிக்காத மனுவல்லாத தர்மம்!

அக்டோபர் 2, 2006: ?யா? இல்லை !யா? இல்லை .யா?

-(இக்கதையில் வரும் நான் என்ற வார்த்தை, என்னைக் குறிக்காததால், இவ்விடத்தில் என் பெயர் போடவில்லை)

"நாம் நமக்கே தெரியாமல், எதிர்பார்க்க முடியாத வகையில், யாரோ ஒருவரால் உன்னிப்பாக அன்பு செய்யப்படுகிறோம்"
-ஞானசேகர்

5 comments:

Anonymous said...

good story proving there are many people in this world who help others without expecting returns
one the flow at first half of the story didnt continue during the second half

Anonymous said...

a good story. the years and ages are not fitted together. anyway, what happened to her afterwards? today date is oct 28,2005.
-sankar

J S Gnanasekar said...

சங்கருக்கு என் பதில்:

அக்டோபர் 2,1984 - கதைநாயகி பிறந்தாள்
அக்டோபர் 2,1985 - கிறிஸ்தவ முறைப்படி பெயர் சூட்டப்படுகிறாள்
அக்டோபர் 2,2003 - கதைநாயகனை முதன்முதலில் சந்திக்கிறாள்
அக்டோபர் 2,2004 - கதைநாயகனை இரண்டாம்முறை சந்திக்கிறாள்
அக்டோபர் 2,2005 - திருமணம்
இவையெல்லாம் ஒரே வரியில் சொல்லப்பட்டு இருப்பதால், அவ்வரி கவனித்து இருப்பின், குழப்பம் இருக்காது.

அந்தப் பெண்ணுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படிங்க தெரியும்? இக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட சில வரிகளை நியாயப்படுத்த எழுதப்பட்ட கற்பனை கதையிது. ஆனா இப்புடி நடக்காதுன்னு மட்டும் சொல்லாதீங்க.

இது கற்பனைக்கதை என்பதற்கு என்னிடம் இருந்து சில சான்றுகள்:
1) தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டில் நான் சொல்லும் அப்படி ஒரு தூண் கிடையாது.
2) அக்டோபர் 2,1985 - இது ஞாயிற்றுக்கிழமை இல்லை.

Anonymous said...

அருமையா இருந்ததுங்க. எனக்கென்னவோ கதை படிக்கிற மாதிரியே தோணலை. கதா பாத்திரங்கள் உயிர்பெற்று இன்னும் உள் மனசில உலவிக்கிட்டிருக்கு. இந்த கதை என் மனசுக்குள்ள ஏதோ ஒரு விதமான சோகம்/அழுத்தமான உணர்வை விட்டுச்சென்றிருக்கு. உலகத்தில எங்கயோ அந்த சேகர் மற்றும் அந்த பெயரில்லாத பெண் வாழ்ந்துக்கிட்டிருக்கிறதாகவே தோணுது. அருமை. வாழ்த்துக்கள்.

Anonymous said...

நீங்க அடிக்கோடிட்டு காட்டிய சில வரிகள் எனக்கு இந்த வரிகளை நியாபகப்படுத்துச்சு
"Friends are like stars. You may not always see them, but, they are always there"